வெள்ளி, 11 நவம்பர், 2016

வந்தே மாதரம்!!

வாழ்த்து  (வாழ்த்துதல் ) என்ற சொல் வழுத்து என்றும் வரும். ஒரு கவிதை எழுதும்போது முதலடி முதற்சீர் எழுத்து என்று தொடங்கினால்
அடுத்த அடியை வழுத்து என்று தொடங்கிக்கொள்ள இது நல்ல வசதியே
ஆகும்.  ஆனால் எழுத்து என்பது பெயர்ச்சொல்; வழுத்து என்பது
வினைச்சொல்; எனின், முதனிலைத் தொழிற் பெயர்ச்சொல்லாகவும்
ஆளப்படுதல் கூடும்.

வழுத்து என்பது வல்லோசைச் சொல். இதை மென்மையாக்க, வழுந்து
என்று மாற்றிக்கொள்வர்.  செம்மை + தமிழ் = செம்+ தமிழ் = செந்தமிழ்
என்றுதான் வரும். செ  என்றாலே சிவப்பு, செம்மை என்று பொருள்.  நேரானது என்றும் பொருள்.  அதாவது கடுந்திரிபுகள் அற்றது என்று
அர்த்தம்.  செ+ தமிழ் = செத்தமிழ் என்று வருதல் இல்லை. வரின்
அது இன்னா ஓசை பயந்ததாய்விடும்.  ஏற்ற இடங்களில் த்து என்று
வரின் ந்து என்று மாற்றம் செய்யப்படுதல் மொழிமரபு.  மெலித்தல்  விகாரம்..
ஒலியை  மென்மைப்  படுத்துதல்.

இப்போது மீண்டும் வழுத்து என்பதற்கு வருவோம்.  இதை மெலித்தால்
வழுந்து என்று வரும். வழுந்து என்ற மெலிப்பைக் காண இயலவில்லை. இது வசதியாகப் போய்விட்டது.

வழுந்து என்பதைத் தமிழுக்குரிய ழு‍~வை  எடுத்துவிட்டால் வந்து ஆகிறது.  இது  இடைக்குறை .

வந்து > வந்தே.....

வந்தித்தல் = புகழ்தல்  வாழ்த்துதல்.

வந்தி + அனை =  வந்தனை.  ( அன்+ ஐ)

வந்தே மாதரம்!!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை.......

வந்தனை  வந்தித்தல் என்பன தமிழ் வழக்கில் உள்ளவை.  ஆனால்  வந்தே என்பது  வாழ்த்தினைக் குறிக்கையில்  வட இந்திய வழக்கு  ஆகும். இவற்றுக்கெல்லாம்  மூலமாவது  வாழ் என்னும் வினைச்சொல்லே ஆகும் .

எச்சத்திலிருந்தும்  ஒரு சொல் பிறக்கலாம் என்பது சில அறிஞர்  கருத்து.  எ - டு :  ஆண்டு >  ஆண்டவர் . அல்லது:  ஆண்ட >  ஆண்டவர் .
இதைப்  பின்பற்றினால்  வாழ்ந்து >   வாந்து >  வந்து > வந்தே .
வினை எச்சங்கள் பிற மொழிகளில் ஒரு முன்மை இடத்தினவாய் உள . 




கருத்துகள் இல்லை: