திங்கள், 9 நவம்பர், 2015

மழை நிற்க மந்திரத்தால் வேண்டி.....

பட்டுப் பட்  டென்று பட்டாசு  வெடியென்றால்
எட்டும்  தொலைவனைத்தும்  கொட்டு மழைவெள்ளம்,

வாங்கிவைத்த வெடிச்சுருள்கள்  வாங்குவார் இல்லாமல்
ஏங்குகின்ற கடைக்காரர் தாங்கு நட்டம் ஈடெங்கே?

சாலைகளில் குண்டுகுழி  கோலெடுத்துச் சென்றாலும்
நாலுபுறம் வெள்ள நீரால்  நடப்பதெங்கே கடப்பதெங்கே

சென்னை வாசிகட்கு சேர்ந்தபடி இரண்டு நாளாய்
என்ன இது  படுதொல்லை! இனிக்குறைய வாய்த்திடுமோ?

மழை இல்லை மழைஇல்லை என்றிருந்த நாள்போக
மழை நிற்க மழை நிற்க மந்திரத்தால் வேண்டினரே

எல்லாம்  அவன்செயல் என்றிருக்க லாமென்றால் 
நல்லாப் பெய்மழையால் நாடெங்கும்  காட்டாறு..

ஈண்டும் இயற்கைதரு இத்தகைய துன்புகளை
தாண்டிடவும்  இயலவில்லை வேண்டிடவும் விளைவுண்டோ? 

கருத்துகள் இல்லை: