திங்கள், 23 நவம்பர், 2015

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்க......

திருவள்ளுவர்  எந்த மதத்தைச் சார்ந்தவர்  என்பதுபற்றி  சில \ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாதம் நடந்தது.  அதில்  நானும் கலந்துகொண்டு  எழுதினேன்.  அங்கு எழுதியது:  29th August 2006, 10:02 PM

ஆய்வு என்றால் என்ன?

கவிஞர் பாபநாசம் சிவன், திருவள்ளுவரின் வழியைப் பின்பற்றித் தம் பாடல்களின்வாயிலாகப் பல நல்லறங்களைப் போதித்துள்ளார்!!
ஆனால், சிவனின் மதத்தை அவர் பாடல்களின் வழி நாம் நிறுவினால், PhD வாங்குவதுடன், உலகப் புகழும் அடைந்துவிடலாம்.

காந்தியைப் பற்றி எழுதிய சிவன். " அகிம்சைதனிலே புத்தரவர்" என்று ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்.

இன்னொரு பாடலில் "புத்தரைப் போற்றுதல் நம் கடனே" என்றும் பாடியுள்ளார்.

ஆகவே, அவர் பௌத்தர் அல்லது, புத்த மதத்தின்பால் மனச்சாய்வு உள்ளவர்.

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்கச்  சிலர் கையாண்டுள்ள வழியைப் பின்பற்றி, எல்லாருடைய மதங்களையும் கண்டுபிடித்துவிடலாம்.

இதற்காக ஒரு தனித்திரி தொடங்கினால் பௌத்தர்கள் மகிழ்வார்கள். எப்படி என் கண்டுபிடிப்பு? ஆய்வு என்றால் இதன்றோ ஆய்வு

------------------------------------------------------------------
கீய்வு


அப்படியானால் பாடலை வைத்து, வள்ளுவன் என்ன மதம், இளங்கோ என்ன மதம், பாபநாசம் சிவன் என்ன மதம், கம்பதாசன் என்ன மதம், கண்ணதாசன் என்ன மதம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்று நீங்கள் கூறுவதுபோல் தெரிகிறதே?

அப்படியானால், இங்கு நடந்துவரும் ஆய்வு உங்களுக்கு உடன்பாடில்லை என்கிறீர்களோ?

ஒரு பாடலை வைத்து, பாரதிதாசன் என்ன மதம் என்று கண்டுபிடித்துவிட்ட நிலையில், இது ஒரு பின்னடைவுதான்!!

பாருங்கள்:

"பின்னை ஒரு கடவுளைப் பேண நினையார்,
பேரொளியைக் காணுவாரென் றாடு பாம்பே!"

என்று பாரதிதாசன் பாடியுள்ளதால், அவர் பௌத்தர் என்று முடிவு செய்யலாம் என்றலவோ எண்ணிக்கொண்டிருந்தேன்!! பேரொளி என்றால் புத்தர்!! The Light of Asia என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்!!

கம்பதாசன்  - கண்ணதாசன் கிறிஸ்தவர்கள்!!
காளிதாசன் மட்டும் காளிபக்தர்!

பாரதி மட்டும் எந்த மதத்திலும் இல்லைபோலும். அவர்:

""யாரும் பணிந்திடும் தெயவம் -- பொருள்
யாவினும் நின்றிடும் தெயவம்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டா!"

என்று பாடி, எல்லா மதமும் ஒன்றுதான் என்கிறார்.

எப்படி என் ஆய்வு?

name as indicator of religion

என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என் சொந்தக்காரன் ஒருவன் - பெயர் சுப்ரமணியந்தான். ஒரு மலாய்ப்பெண்ணை மணந்துகொண்டான். இரகசியப் பெயர் ஹாசான் அப்துல்லா!! அலுவலகத்தில், வெளியில் பெயர் சுப்ரமணியன். மலாய்க்காரி (விரிவுரையாளர் ) மனைவி: "abang hasan! abang hasan" என்று கூப்பிடுவாள்.

இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இவனை விடக்கூடாது என்று நாங்கள் கோயில் பூசைக்கு வரி கேட்டோம். 61 மலேசிய வெள்ளி கொடுத்தான். கோவிலுக்கு வந்து எங்களைப் பார்த்து "ஹலோ" சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நாடறியாத, இறுதி நாளில் வெளிப்பட்ட மதமாற்றங்கள் பல உள்ளன.

இந்திய நாடு போற்றிய ஒரு பெருந்தலைவர், திருமணத்தின்போது மதமாறிக்கொண்டார், பின்னர் அது மறைக்கப்பட்டது என்று இணைய தளத் தகவல்களில் முன் வந்தது அறிவேன்.

பெயர் ஓர் அடையாளக் குறியாகலாம். ஆனால், முற்றிலும் நம்பத் தகுந்தது அன்று.

இப்படி எழுதியபின் வாதம் ஓரளவு அடங்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பதாசன் :   அருள்தாரும் தேவமாதாவே என்ற  புகழ்பெற்ற பாடலை  எழுதியவர்.

கண்ணதாசன் :  ஏசு  காவியம் பாடினார் .


கருத்துகள் இல்லை: