புதன், 19 டிசம்பர், 2018

தியாகம் என்னும் சொல்

இன்று தியாகம் என்ற சொல்லைச் சிறிது ஆய்வு செய்வோம்.  தியாகம் என்பது தமிழில் வழக்கில் உள்ள சொல் தான்.   அப்படிச் சொல்ல விரும்பாவிடின் செந்தமிழில் " ஈகம் " என்று சொல்லலாம்.  அதே பொருளைச் இச்சொல்லும் தருமென்பதறிக.

தியாகத்தில் மனிதன் உயிரை மட்டுமா கொடுத்துவிடுகிறான்?  இல்லை.  தன் பொருள்களையும் சமயத்தில் நெருப்பிலிட்டு எரித்துவிடுவான்.  காதல் தியாகம் என்ற ஒரு புதிய தியாகத்தைக் கொஞ்ச காலத்தின் முன் வந்த திரைப்படங்கள் போதித்தன. யாம்  பெரும்பாலும் இப்போது கதைகளைப் படிப்பதும் திரைப்படங்கள் பார்ப்பதும் மிகமிகக் குறைவு. இன்னும் இதுபற்றிக் கதை-   நாடக எழுத்தாளர்கள் எழுதுகிறார்களா  என்று தெரியவில்லை.

பழங்காலத்தில் தியாகம் செய்தவர்கள் பெரும்பாலும் தம் வாழ்க்கையை ஏதேனும் ஓர் உயர்ந்த குறிக்கோளுக்காக அர்ப்பணித்தனர்.1 இத்தகைய செயல்கள் அரியவாகவே நடைபெற்றன. இதை அர்ப்பணித்தல் என்ற சொல்லினின்றே தெரிந்துகொள்ளலாம்.  இது அருமை + பணித்தல் என்ற இருசொற்களின் திரிபு.   அருப் பணித்தல் >  அர்ப்பணித்தல் என்று திரிபு பெற்றது. ஆகவே இவை அரிய செயல்களே:  அதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன.  அருமையாகத் தன்னையோ தன் பொருளையோ ஒரு குறிக்கோளுக்காகப் பணித்துவிடுதல் என்பதே இச்சொல்லமைப்பின் வரையறவு ஆகும்.

தியாகம் என்ற சொல்லோ தீயாகுதல் என்ற சொல்லினின்று வருகிறது.  தீயாகு + அம் = தீயாகம் > தியாகம் என்று குறுக்கிச் சொல் புனையப் பட்டுள்ளது.  இது இயல்பாக  அதாவது நாளாவட்டத்தில் அமைந்த சொல்லாகவோ , புனைவுச் சொல்லாகவோ  இருக்கலாம்.   தன்னை எரித்துக்கொள்வது ஒரு தியாகம். தன் பொருள்களை எரித்துவிடுவதும் ஒருதியாகம்   என்ற  அர்த்தத்தில் இது அமைந்துள்ளது.  இப்படி எரியூட்டிவிடுவதால் அப்பொருளோ அவ்வுயிரோ உலகிலில்லாது ஒழிந்துவிடுதலின்  சேவை தொடர இயலாமையினால் அத்தகு செயல் ஒரு நல்ல தியாகம் என்று சொல்வதற்கில்லை.  தியாகம் என்ற சொல் அமைந்தபின் அது தீயிலிடாத தியாகங்களையும் உள்ளடக்கப் பொருள்விரிவு கொண்டது என்பதை நன் கறியலாம்.  எனவே நாம் அடிக்கடி கூறும் நாற்காலி உதாரணத்தைப் போல்,  இது ஒரு காரண இடுகுறிச்சொல் ஆனதென்பதை உணர்ந்தின்புறலாம்.

பொருள் விரிந்து இது  1 பிறர்பொருட்டுத் தன்னலம் இழக்கும் தன்மை;  2 கொடை ;  3  பிறர் நலத்தினுக்குக் கைவிடுகை என்று காரண இடுகுறிச் சொல் ஆகும் என்று பேரகராதி தெரிவிக்கின்றது.

தியாகம் செய் பொருளானது அதைச் செய்தவுடன் செய்தோன்பால் தீர்ந்துவிடுவதால்  அல்லது அழிந்து அல்லது விட்டுப் போவதனால்  இது தீ ர் + ஆகம் >  தீ + ஆகம் > தியாகம்  என்று வந்ததெனினும் அமைவதே.  ஆதலின் தீ என்பது எரியாகவும் இருக்கக்கூடும்;  தீர் என்பதன் கடைக்குறையாகவும் இருத்தல் கூடும்.  யாகத்திலும் இடுபொருள் தீர்ந்தழிவதால் தீர் > தீ யாகம் > தியாகம் என்றும் அமையும் என்று கூறலாம்.  எவ்வாறாயினும் தீ என்பது தீயையோ அல்லது தீர்வு என்பதையோ குறித்தல் பொருத்தமே.  யாகமாவது யாத்தல் அல்லது கட்டுதல் என்ற சொல்லடிப் பிறந்ததென்பது அறிக. இவ்வாறு இது தீர்வுடன் கட்டுறுவதாகிய செயல் என்று பொருள்படும்.

இருவகைகளிலும் இது நீக்கப் பொருண்மையே காட்டுகிறது.  உயிரினின்றோ பொருளினின்றோ நீங்கிவிடுதல் என்பதே இறுதிப்பொருளாகிறது.

இச்சொல் நீண்ட நாட்களாகத் தமிழில் வழங்கி வந்துள்ளது என்பது தெளிவு. இது ஒரு திரிசொல். சொற்கள் குறுகி அமைவதும் திரிபியல்பே ஆகும்.

அடிக்குறிப்பு:

அர்ப்பணித்தல்:   இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:  வர்த்தகம்.  இது முன்னாளில் பொருள்கள் வரத்து  ஆவதையே  (  வரு > வரத்து > வரத்தகம் > வர்த்தகம்  ) குறித்து ப்  பின் பொருள் விரிவாகி பொருள் ஏற்றுமதியையும் குறித்தது.

நிர்ப்பந்தம் என்ற சொல்லும் ஒன்று வலியுறுத்தி நிறுத்தப்படுவதையே குறிக்கப் பின் நாளில் வலியுறுத்தி நடத்தப்படுவதையும் குறிக்குமாறு விரிந்தது.  நிறு > நிறுத்து;   நிறு + பந்தம் >  நிறுப்பந்தம் > நிர்ப்பந்தம்.  பந்தம் என்பது:  பல் + து + அம்;  பல்  + து >  பந்து.  கயிற்றினால் முன் காலத்தில் கட்டப்பெற்றுக் கயிறு பின்னிப் பற்றிக்கொள்வதால் பந்து எனப்பட்டது. பந்து பந்தம் என்பன மெலித்தல் விகாரம். எயிற்றில் பற்றிக் கொண்டிருப்பதால் பல்> பல் ஆனது.  பல் > பற்று;  பல் > பல்+ து > பந்து என்பது விளக்கம்.
பத்து :  படை பத்து என்ற அரிப்புத்தடிப்பு வகையிலும் பற்றிக்கொள்ளும் தோல் நோய்தான் பத்து.  பத்து = பற்று.

2   தீர் என்ற சொல் வந்த வேறு சொற்கள்:

தீர்வு >  தீவு;  நாற்புறத்தும் நிலத்தொடர்பு தீர்ந்த நிலம்.

தீபகற்பம்:  என்பதும்  தீர் என்பது முன் நிற்கும் சொல்லே. தீவகம் அல்லாதது. தீவக(ம்) + அல் + பு + அம்.  பு அம் விகுதிகள்.  அல் அன்மை உணர்த்தும். இங்கு தீவ என்பது தீப ஆனது:  வ > ப போலி.  இன்னொரு காட்டு:  வசந்தம் பசந்த.
இதுவுமது:   வகு > பகு

எழுத்துப்பிழைகள் தோன்றின் பின் திருத்தப்பெறும்.
 

கருத்துகள் இல்லை: