திங்கள், 31 டிசம்பர், 2018

சுரங்கம்: அங்கு ஆங்கு இடைநிலைகள்.

இன்று புத்தாண்டில் சுரங்கம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

நிலத்தில் பள்ளம் தோண்டினால் பல இடங்களில் நீர் சுரந்து மேல் வருகிறது. இரண்டாம் உலகப்போரின்போது  பலவிடங்களில் சுரங்கங்கள் தோண்டி அங்கு மக்கள் வான்படைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒளிந்திருந்தனர் என்று அறிகிறோம்.  கீழே நீர் சுரந்து நிற்குமாதலின் பலகை அடித்து ஒரு போலித்தரையை ஏற்படுத்தி அதன்மீது மக்கள் ஒளிந்திருந்தனர். நிலத்தடி நீர் அருகில் இல்லாதவிடங்களில் நீர்மட்டம் தொல்லைதராது. பலகை இல்லாமல் அமர்ந்திருக்கலாம் என்பர்.

நிலத்தைத் தோண்டினால் நீர்சுரக்கும்.  ஆதலால் இத்தகைய நிலக்குடைவுகளைச் சுரங்கம் என்று குறிப்பிட்டனர்.

சுரத்தல் :  வினைச்சொல்.

சுர +  அங்கு  + அம் =  சுரங்கம்.

இச்சொல்லில் அங்கு என்பது சொல்லாக்க இடைநிலை.

இப்படிச் சொற்களை நன்றாக அமைத்தவர்கள் யாரோ  அவர்களைப் பாராட்ட வேண்டும்.

அங்கு என்பதை   அ=  சுட்டடிச் சொல் என்றும்  கு  என்பது சேர்விடம் குறிக்கும் சொல் ( அதாவது இப்போது பெரிதும் வேற்றுமை உருபாகப் பயன்படுகிறது )
என்று அறிக.  இவை இரண்டும் இணைந்தே இடைநிலையாக நிற்கின்ற தென்பதை உணர்க. எளிதினுணர்தல் பொருட்டு அங்கு என்பது இடைநிலை என்றோம்.

கூடாங்கு.  மூடாங்கி ( மூடி )., நாதாங்கி என்ற சொற்களும் உள்ளன. இவற்றிலும் இவ்விடைநிலை உள்ளதென்றறிக.

கூடாங்கு:  கூடுபோல் கட்டிப் பொருள்களை இட்டுவைக்குமிடம்.

கூடு + அங்கு. இந்தச் சொல் அம் விகுதி பெறவில்லை. அங்கு என்பது ஆங்கு என்றும் நிலவுமென்று அறிக.

மூடாங்கி :  இது மூடி என்பதற்கு மாற்றாகப் பேச்சு வழக்கில் உள்ளது.  பானை மூடி போன்றவை.  சில சட்டி பானைகளில் மூடி பானையுடன் பட்டையில் திருகாணி கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்.  ஒருபுறம் தூக்கித் திறக்கலாம்.  இப்போது அரிசிவேவிப்புப் பானைகள் இவ்வாறு வருகின்றன. இவை மூடாங்கிகள்.  மூடி அங்கே இருக்கும்; அகற்ற முடியாது.

மூடு + ஆங்கு + இ =  மூடாங்கி.   இதில் இகரம் விகுதியாகிறது.

நாதாங்கி :  கதவில் இருபுறமும் தள்ளுதற்குரிய வசதியுடன்  ஒரு நாக்கைப் போல் இருப்பது நாதாங்கி. கதவின் சட்டத்தில் பக்கம் தள்ளினால் இது ஒரு வளையத்தில் போய் மாட்டிக்கொண்டு கதவைத் திறக்க முடியாதபடி அடைத்துக்கொள்ளும். இந்த நாவைத் தாங்கி இருக்கும் இரும்புக் கூடு நாதாங்கி எனப்படும்.  நாதாங்கி கூடு, வளையம்,  அதிலாடும் தள்ளுகோல் முதலிய முழுப்பொறியையும் குறிக்கும்.

நா + து  + அங்கு  + இ:    நாவை உடையது  இப்பொறி.
து : உடையது.   அங்கு / ஆங்கு  என்பது விளக்கப்பட்டது.   இகரம் விகுதி.

நாவைத் தாங்குவது எனினும் ஆம்.

இலக்கணம் கூறுவதாயின்  நாத்தாங்கி எனற்பாலதில் தகர ஒற்று இடைக்குறை என்லாகும்.

இத்தமிழ்ச் சொற்கள் இக்காலத்தில் மறக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் பெருவழக்கினவாதலே காரணம்.

அடிக்குறிப்பு:

அங்கம்:  உடல் குறிப்பது.   இது அடங்கம் என்பதன் இடைக்குறை.  டகரம் வீழ்ந்தது.  பல உள்ளுறுப்புகளும் அடங்கியதே அங்கம்.


பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: