திங்கள், 20 டிசம்பர், 2021

நினைவு கூர்ந்த கடினக் காலம்.




ஒருசில மாதங்கள் முன்னே---- இந்த

ஊரடங்கிப் போன உலகத்தொற்  றாலே,

திருவணக் கஞ்செய்யும் கோயில் --- கூடத்

திரளான கூட்டம்வந் தருளாண்மை மேவ,

ஒருவாமல் மூடினர்  வாசல்  ---- பூசைக்கு

ஒருசிலர் தாம்வந்தே  குறுகினர் கண்டு!

திருவே நிலன்காக்க  என்றே ----  மனம்

தேம்பியே நின்றவண் உருகிய துண்டு.


அந்த நெருக்கடிக் காலம் --- எனினும்

அயராது  பூசைகள் அளித்தலும் உற்றோம்.

இந்தப் படமந்தப் போதில் ----  எடுத்தே

எங்கள் விழிகளில்  ஒற்றிக்க  ளித்தோம்.

விந்தை அருளம்மை நெஞ்சும் ---- இரங்கி

வேண்டுதல் ஏற்றனள் ஆற்றினள் எம்மை.

முந்தையின் றைவினை  எல்லாம் --- அவள்

முற்றவும் தீர்த்தனள் உற்றனம் நன்மை.

பொருள்:

1)

திருவணக்கம் செய்யும் -  பற்றர்கள் வந்து வணங்கும்( கோயில்)

ஊரடங்கிப் போன - தொற்றினால் நடவடிக்கைகள் பலவும் குன்றிப் போய்விட்ட.

அருளாண்மை மேவ -  இறைவனின் காக்கும் மனத்தை அடையும் நெறிகளை மேற்கொள்ள,

ஒருவாமல் -  முடியாமல்

கண்டு --  நிகழ்ச்சிகளை அணுகிப் பங்கு கொண்டு

குறுகினர் --  வருவோர் தொகையில் குறைந்தனர்

திருவே -  கடவுளே

நிலன் -  இந்தப் பூமியின் மக்களை

நின்றவண் -   செய்வதறியாமல் ஓய்ந்து அங்கே

உருகியது --  மனம் கரைந்தது

2)

உற்றோம் - செய்தோம்

இந்தப் படம் - இங்கு பதிவு செய்த படம் 

விழிகளில் ஒற்றி -- மகிழ்வுடன் கொண்டாடி

விந்தை -  பல அதிசயங்களைச் செய்யும்

அருளம்மை -  துர்க்கையம்மன்

ஆற்றினள் --  தேற்றினாள்

முந்தை இன்றை வினை -- நாம் செய்த பிழைகள்

முற்ற - முழுமையாக

உற்றனம் நன்மை --  நலமே அடைந்தோம்


மகிழ்வீர்.

மெய்ப்பு பின்னர்.


 

கருத்துகள் இல்லை: