புதன், 15 டிசம்பர், 2021

சொத்தும் தொத்தும். மற்றும் சுயம்பு

 சொத்து என்ற சொல்,   சொம் என்பதனடியாய் எழுந்தது என்று சென்ற நூற்றாண்டின் தமிழறிஞர்கள் கருதினர்.  சொந்தம் என்ற சொல்லுக்கும் சொம் என்பதே முந்துவடிவம்.  சொம்+து > சொத்து;  சொம்+தம் அல்லது சொம்+து+அம் =சொந்தம்  ஆகும்.

இதே பரிமாணங்களுடன் அமைந்த இன்னொரு முந்துவடிவம்தான் தொம் என்பது.  இது தொம்+து > தொத்து என்றும் தொம்+து + அம் > தொந்தம் என்றுமாவதால்,  பெறப்பட்ட வடிவங்களிடையே  போக்கொருமை காணப்படுதல் தெளிவாகும்.

சொ(ம்) >  சொ+ அம் >( சொயம்)  [ பேச்சில்]  >  சுயம்.

இனி இது சுயம் >  சுயம்பு என்றுமாகும்.  தானே தோன்றியது என்பது இந்த இறுதிவடிவத்தின் பொருள்.

தொங்கு,  தொந்தி என்பவையும் தொந்தம் என்பதும் தொம் என்பதனடிப் பிறந்தவை.  தகர வருக்கத்துச் சொற்கள் சகர வருக்கமாகும்.  இதன்படியே சங்கு என்ற சொல்லும் தங்கு என்ற முன்வடிவிற் போந்ததாகும். இதை ஒரு நூறு ஆண்டுகளின்முன் உரைத்த தமிழ்வலரும் பழைய சுவடிகள் மூலம் காண்க.  சங்கு என்ற பெயர் வந்ததும் அதனுள் ஓர் உயிரி தங்குதல் செய்ததனால்தான்.

உண்மையில் சொத்து என்பது நம்மைத் தொத்திக்கொண்டிருப்பதுதான்.  தொத்துதல் என்பதில் நிரந்தரமின்மை தெளிவாய் உள்ளது.  தொத்து > சொத்து.  தொம்> சொம்.

இவ்வட்டத்தில் உள்ள சொற்கள் பல. அவற்றைப் பின் அறிவோம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: