திங்கள், 6 டிசம்பர், 2021

கொப்புளம் என்ற சொல்லினருமை

 இன்று கொப்புளம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.  இச்சொல்லில் இரண்டு உள்ளுறைவுகள் உள்ளன.  அவை:

1 கொதி   --  இத்துண்டு,  கொப்புளம்,  நீர்கொதிக்கையில் அதன் மட்டத்தில் அங்குமிங்கும்  மேலெழும்புதல் போல் இருத்தலைக் காட்டுகிறது.  

2. புளம் -- இத்துண்டு,  புள் என்ற அடிச்சொல்லினின்று வருகிறது.  இது புழை என்ற சொல்லுடன் தொடர்புடைய உள்ளுறைவு ஆகும்.  புழை என்றால் துளை, துவாரம் என்று பொருள்.  இது தமிழில் வழங்கிவரும் இடக்கர்ச்சொற்கள் சிலவற்றுடனும் தொடர்பு உள்ளது.   "ஆலப்புழை" என்ற ஊர்ப்பெயரிலும் இது ஈறாய் உள்ளது.  ஆலப்புழை என்றால் ஆலமரத்தின் துவாரம் என்றுதான் பொருள்.  புள் -  புழை.  புள் என்பது  உகர ஒகரத் திரிபாக,  பொள் என்று வந்து வினையாகிப் பொள்ளல் என்றும் சொல் அமையும். இதுவும் தோலிற் புறப்பாடு என்று பொருள்தரும்.  பொள்ளுதல்  என்பது வினைச்சொல் , இங்கு ~தல் தொழிற்பெயர் விகுதி.  இந்த விளக்கம் போதுமானது என்று நினைக்கிறோம்.

ஆகவே,  கொதி+ புளம்.  இதில் தி என்ற இறுதி குறைய,  கொ+ புளம்>  கொப்புளம் ஆகிற்று.  

ஆதியில் காட்டில் வாழ்ந்த காலத்தில், "  கொ"  என்று தமிழன் ஓர் ஒலியை ஏற்படுத்தியிருந்தால் அதற்குப் பொருள் யாதாய் இருந்திருக்கும் என்று நீங்கள் ஆய்வு செய்து, பின்னூட்டம் இடுங்கள்.

அருமையாய் அமைந்த சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்

கருத்துகள் இல்லை: