சனி, 1 அக்டோபர், 2016

வருந்தா நிலமேல் வாழ்விதுவே !

வீட்டின் நாளைத் தலைவர்யார்
விரிந்த கவலை நாம்கொள்ளோம்!
கூட்டில் கிழடும் இறந்திட்டால்
குருவிகள் கவலை கொள்வதில்லை!
நாட்டின் தலைமை நன்பொருளாம்
நாளும் அதையே சிந்தனையாய்
ஏட்டில் பேச்சில் விரித்திடுதல்
இற்றை உலகின் செய்ம்முறையே.

இற்றை இயற்கை நாளையையே
என்றும் கவலை கொள்வதில்லை.
மற்றைப் பொருளில் மனம்செல்ல‌
மனமாய்ப் பொருளும் அதற்கில்லை
இறந்தான் எனவே நாம்கவல‌
எழுந்தான் பகலோன் முனம்போலே!
வரந்தான் கடவுள் தரவில்லை
வருந்தா நிலமேல் வாழ்விதுவே ! 

கருத்துகள் இல்லை: