சனி, 8 அக்டோபர், 2016

மதியும் அறிவும்

மதி என்பது அறிவு குறிக்கும் தமிழ்ச்சொல்.  இதற்குரிய வினைச்சொல்
மதித்தல் என்பது. மதித்தல் என்ற வினைச்சொல் தமிழிலிருப்பதனால்
மதி என்பது தமிழ்தான். அறிவு என்பது அறிந்துகொள்ளும் செயல் அல்லது திறன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறளில் உள்ள ஒரு சிறந்த பா இதுவாகும்.

மதியும் அறிவும்  இப்போது ஒப்பாக வழங்கப் படுவதுண்டு;   இது காலப் போக்கில் பொருளிழப்பு  ஆகும்.

முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொல்லி அதை ஒருவன்
நம்பினால் அவனுக்கு அறிதிறன் தேவைப்படுகிறது என்றுதான் கொள்ளவேண்டும். ஒருகாலை இழந்துவிட்ட  முயலானால்   அதுவும்
முயல்தான்;  அதை மாற்றுத் திறனுடை முயல் எனலாமா ?

மதி என்பது ஒப்பிட்டும் அளவிட்டும்  அறியும்  மேலான  திறனைக் குறிக்கிறது.
ஆகவே  அறிவு  மதி ஆகிய சொற்களிடையே  ஒரு சிறு வேறுபாடு உள்ளது.
நிலவு  காலத்தை அளவிடுவதால்  அதற்கு  மதி  என்பது பெயராயிற்று .


மதியைக் கொண்டு அளவிட்ட காலம்  மாதம் எனப்பட்டது. மதி +  அம் = மாதம்.  இது முதனிலை நீண்டு விகுதி பெற்று, இடைநின்ற இகரம் கெட்ட பெயர்.  இதைப் போன்ற இன்னொரு சொல் படி+ அம் =  பாடம் ஆகும்,

சுடு+ அம் = சூடம்  என்ற சொல்லில்  முதனிலை நீண்டு உகரம் கெட்டு விகுதி பெற்றது. அறு >  ஆறு  என்பதில்  முதனிலை நீண்டு பெயரானது,  ஏனை விகாரங்கள் யாவையும் இல்லை .

இவற்றை நன்கு மனத்திலிருத்திக் கொள்க.

நுதி  என்பதும்  அறிவின் கூர்மை குறிக்கும் பழஞ் சொல்லே.




கருத்துகள் இல்லை: