ஞாயிறு, 28 ஜனவரி, 2024

ரிஷி/ மகா ரிஷி

  "இருள் தீர் " என்ற இரு சொற் புணர்விலிருந்து ரிஷி என்பதை அறிவோம். ரிஷி என்பது இரிசி என்றும் வழங்கும். பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாத பாட்டிகளிடம்தான் இதைக் கேட்டுச் சுவைக்கலாம். இப்போது பலர் போய்விட்டனர். " அவன் கெட்ட இரிசி" என்பர்.

ரிஷிகளில் சிலர் ஆத்திரத்தில் சாபம் இடுவர். இதுபோல் செய்தால் பலித்துத் துன்பம் விளையும் என்பதால் அச்சம் அக்காலை நிலவிற்று. கெட்ட இருசிகளிடம் கெடு சொல் பெறாமை வேண்டும் என்பர். கெட்டவர் நல்லவர் என்றில்லாமல் யாரிடமும் சாபம் பெறாமல் வாழவேண்டும். சாவு+ அம் > சாவம் > சாபம் என்பதறிக.  செத்துப்போ என்று  வசை பெறுதல். சாவுக்குக் குறைந்த துன்பங்களையும் இது உள்ளடக் கும்.

கண்திட்டி அல்லது கண்ணூறு என்பதும் பாதிப்பை விளைவிக்கும். நபி நாயகத்துக்கே கண்பட்டது என்று எம் மலாய் நண்பர்  கூறுவார் . இதில் பகுத்தறிவு பார்த்துக் கேடுற வேண்டாம். இங்கு கேடு என்றது  நோய்   நொடிகள், திரவியக் குறைவு, எனப் பல.

பகுத்தறிவு என்பதன் எல்லைக்கு உட்படாத பல உண்டு. 

இருள் என்று கூறப் பட்டவற்றுள் இருவினைகள் உள்ளன. இவை இரண்டும் தொடர்பு  படாத ஆன்ம நலமே இருள் தீர்வு ஆகும். இருள்தீர் > இருடி > இருஷி > ரிஷி  ஆயிற்று.

ரிஷி என்ற சொல்லை  எடுத்து ஷி என்ற ஒலியை விலக்கி ( எழுத்தை ஒருவி, அல்லது தொல்காப்பியர் கூறியது போல் "ஒரீஇ" )  டி என்பதை இட்டால், ரிடி ஆகிவிடும் . ரி என்பது திரிபு ஆதலின் ரு என்பதை இட்டால் இருடி ஆகும். இருடி என்பது இருடீர் என்பதன் திரிபு. தமிழில் இதை "இருடீரிகள்" அல்லது ' இருள் தீர்ந்தோர்' என்றே வாக்கியத்திலிட  முடியும். அடைச்சொல்லிலிருந்தும் பெயர்ச்சொல் (அமைத்தல் அன்று)கொள்ளுதல் பிறமொழிகட்கு இயல்பு. கேட்டால் விளக்குவோம்.

பிள்ளை இல்லாதவர்கள் நரகுக்கே  செல்ல முடியும் என்ற கொள்கை இருந்தது. பிள்ளை அல்லது சீடர் உள்ள முனிவரே மக-ரிஷி. பெரியவரும் ஆவார்.இதன் சொல்லமைப்புப் பொருள்:  பிள்ளைகளை உடையவர் என்பது. பிள்ளை இல்லலாதவர்  தத்து எடுத்துக்கொளவது போன்றதுதான் சீடர் களை ஏற்றுக்கொள்வது. ஆதலின்  இவர் மணமிலியாய் வாழ வாய்ப்பு ஏற்பட்டது.  மக என்ற சொல்லும் பெருமைப் பொருளில் வழங்கத் தலைப்பட்டது  மக என்பது தமிழில் மா என்று திரிந்து பெருமை ப்  பொருள் தந்தது. சமஸ்கிருதமும் மஹா என்று திரிந்து அப்பொருளே தந்தது.

இன்று மணம் புரிந்தும் துறவியாய் இருக்கலாம். பரம அம்சருக்குத் துணைவி சாரதாதேவி என்பது நீங்கள்  அறிந்ததே.  பிற்காலத்துத்தான் இதன் பொருள் மாறிற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


.

கருத்துகள் இல்லை: