சனி, 6 ஜனவரி, 2018

மிளகாய் சொல். வெளியூர்ப் பொருள்.



மிளகாய் என்ற  சொல்.   (capiscum)

மிளகாய் என்று தமிழ்ப்படித்தவர்கள் எழுதும் சொல்லை, பேச்சுத் தமிழில் “மொளகா”   “மொளகே” என்றெல்லாம் சொல்கிறார்கள்.  இப்படிச் சொல்வது கொஞ்சம் இனிமையற்றதாய் இருப்பதால், தான் இதை “சில்லி” என்று ஆங்கிலத்தில்தான் சொல்வது பழக்கம் என்`கிறார்  யாமறிந்த தமிழர் ஒருவர்.

கறி, குழம்புகளில் காரம் சேர்க்கப் பண்டைநாளில் தமிழரிடம் இருந்தது மிளகு  ஆகும். அப்போது மிளகாய் இல்லாமையால் மிளகை அரைத்தோ இடித்தோ குழம்பு வைத்தனர்.

மிளகாய் என்பது பின்னர் சீனாவிலிருந்து பெறப்பட்டது 1 என்று அறியப்படுகிறது.  இதைச் சொல்லாராய்ச்சி மூலமாக தமிழறிஞர்கள் நிறுவியுள்ளனர். அவர்கள் சொல்லாய்வினை இப்போது காணலாம்.

மிளகாய் என்பது தவறாக அமைந்த சொல் என்று கண்டுபிடித்தனர்.  மிளகு+காய் = மிள + காய் = மிளகாய் ஆயிற்று.  இதில் இருந்த கு என்ற விகுதி விலக்கப்பட்டு,  இறுதியில் இயல்புப் புணர்ச்சியாய் வலி மிகாது அமைந்தது.  இதில் கோளாறு ஒன்றுமில்லை. அவர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், மிளகாய்ச் செடி, மிளகாய்ப் பழம், மிளகாய் இலை என்றெல்லாம் அமைவது,  அதாவது நாம் மாங்காய் மரம், மாங்காய்ப் பழம் என்று சொல்வதில்லை.  பழம் என்று சொல்லும்போது ஏன் காய் என்ற சொல் அங்கிருக்கவேண்டும்?  காரணம் என்னவென்றால் காயை அறிந்துதான் பின்னர் செடி, பழம். இலை எல்லாம் தமிழன் அறிந்தான்.  மிளகாய் என்ற சொல்லே தவறாய் அமைந்துவிட்ட சொல் என்பதுதான்.  இப்படி அமைந்ததனால் மிளகாய் வெளிநாட்டுப் பொருள். அதற்கு உண்மையில் தமிழில் பெயரில்லை. மிளகுடன் ஒப்பிட்டு மிளகாய் என்ற சொல்லை அமைத்தனர் என்பதும்  ஆகும்.

ஆனால் இந்தச் சொல் புலவர்கள் அமைத்தது
அன்று.  மக்களால் அமைக்கப்பட்டது.  மிளகாய் புதுப்பொருளாக கொண்டுவரப்பட்ட அன்றே ஒரு புலவர் போய் அதற்குச் சொல் அமைத்திருந்தால் இந்த இடர்ப்பாடுகள் இருக்கமாட்டா! யாரும் எட்டிப்பார்க்காத நிலையில் சந்தையிலிருந்த தமிழனே சொல்லை அமைத்துக்கொண்டான்.  அவன் முயற்சியை முதலில் பாராட்ட வேண்டும்.

அதன்பெயர் வேறுவிதமாய் அமைந்திருக்கலாம். மிளகாய் (மொளகா, மொளகே) என்பதன் பேச்சு உருவில் காய் என்பது இல்லை.  கா / கே மட்டுமே உள்ளது.  இதை எழுத்துருவாய் வடித்தபோது, மிளகாய் என்று தமிழ் வாத்தியார் எழுதினார்.  கா என்பதைக் காய் என்று  எடுத்துக்கொண்டார்.

மிளகு + ஆ:  இங்கு  ஆ என்பதை ஆவது என்று கொண்டால்,  மிளகுக்குப் பதிலாய் ஆவது என்ற பொருள் வரும்.  ஆ என்பது முதனிலைத் தொழிற்பெயராய் அமையும்.  மொளகா என்பதில் உள்ள கடைச்சொல் ஆதல் குறிக்கும் ஆ எனலாம்.

மொளகு ஆவு;  மொளகு ஆயி.   மொளகு  ஆ.  மொளகா > மொளகே.  அதாவது மிளகாய் என்பது மிளகுக்கு ஆகும் பொருள் (காய் அல்லது பழம்.)
மிளகு ஆவு.  மிளகு ஆயி என்பதைத் திருத்தி மிளகாய் என்று  அமைத்திருக்கக்கூடும்.

மொளவா மொளகா என்று பலவாறு அலைந்து இறுதியில் மிளகாய் ஆகிவிட்டது!    என்றாலும் -ஆ  என்பதே சொல்லிறுதி.  அப்படியானால் மிளகாய்ப் பழம் மிளகாய்ச் செடி என்பவற்றில் இடர்ப்பாடு இல்லை.  அது வெளியூர்ப் பொருள் என்பதை மறுக்க முனையவில்லை.

இனித் தோன்றும் பிழைகள் இப்போதுள்ளவை எவையும்
பின்னர் திருத்தம் பெறும்.

Pl read cautiously as a virus places extra dots on 
words. Edited but may recur. 
-----------------------------------

Footnote: 
 


1.There is also a belief that the Portuguese brought it to South Asa and SE Asia.  (Whoever brought it, it is not indigenous to  South Asia. ) 

 






கருத்துகள் இல்லை: