சனி, 31 மே, 2025

இலாடம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்

 சிற்றூர்களுக்கு  ஆட்டக்காரர்கள் ஆடவருவார்கள். அப்போது அவர்கள் நின்ற இடத்திலே ஆடிக்கொண்டிருப்பார்கள்.  மரத்தாலான கோல்களில் தரைப்பகுதியில்  இருப்புக்காப்பு  அடிக்கப்பட்டிருக்கும்.  அதன்மேல் நின்றுகொண்டு ஆட்டமும் பாட்டும் நடைபெறும்.  சீனர்களிடமும் இத்தகைய ஆட்டபாட்டங்கள் உண்டு.  அந்த அடிக்கப்பட்ட இரும்புக் காப்புக்கு  இலாடம் என்று பெயர்.

இலாடம் என்பது பின்னர் லாடம் என்று தலையிழந்த சொல்லாகிவிட்டது. இந்தச் சொல்லில் இல்+ ஆடு+ அம் என்று மூன்று பகவுகள் உள்ளன.

இல் என்றால் இடம்.  நாட்டில் என்பதில்  இல்  இடத்தைக் காட்டும் உருபாக வருகிறது. இல் என்ற தனிச்சொல் வீடு என்பதையும் குறிக்கும். இடம் என்ற பொருள் தெளிவானதாகும்.

இருக்குமிடத்தில் ஆடிக்கொண்டு ஒரு கலையையோ நிலையையோ காட்டுவது இல் என்ற சொல்லின் தன்மையும் ஆகும். 

அடுத்த சொற்பகவு ஆடு என்பதுதான்.  இது ஆடுதலாகிய செயலைக் குறிக்கிறது.

இந்த ஆடுதலுக்கு அமைக்கப்பட்டதுதான் பொருத்தப்பட்ட இரும்புக்காப்பு.  மரக்கோல் ஆடும்போது பிளந்துவிடாமல் அந்தக் காப்பிரும்பு பார்த்துக்கொள்கிறது.

நாளடைவில் இது செருப்புகளிலும் பொருத்தப்பட்டுப் பலனளித்தது என்று அறிக.  நடக்கும்போதும்  கால்  ஆடத்தான்  செய்கிறது.. ஓர் இயக்க்நிலையையும் இது குறிக்கும்.  உரையாடல் சொல்லாடல் என்ற பதங்களிலெல்லாம்  ஆடல் என்பது துணைவினையாக வருகின்றது. ஆகவே எந்தச் செயலாற்றலிலும் இச்சொல் பயன்பாடு காணத் தக்கது ஆகும்.

ஆகவே இச்சொல்லில் ஆடுகின்ற தமிழை நீங்கள் அறிந்து இன்புறலாம்.

இல் ஆடு அம் என்பது இல்லாடம் என்று வந்தாலும் தமிழில் சுருக்க முறைகள் இருப்பதால் இல்லாடம் இலாடம் என்ற குறுகுதல் இயல்பே ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து பரவிட உதவுக.


கருத்துகள் இல்லை: