வெள்ளி, 17 மே, 2024

நாதன், நாமம் என்பவை

 இறைவனைச் சொற்றுணை வேதியன் என்பதால்,  அவன் நாமத்தின் இருப்பிடம் நம் நாவினால் செய்யும் ஒலியாகிய அவன் பெயரை ஒலிப்பதே  ஆகும்.  இவ்வாறு நாவொலி பெறுபவை  நாதன், நாமம், நமச்சிவாயம் என்பனதாம்.

பாடல்: திருநாவுக்கரசர்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன் 

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 

நற்றுணை யாவது நமச்சி வாயவே.

(கல்+ தூண் > கற்றுண் என்று குறுகியது எதுகைநோக்கியது.)


சொல்லுக்குத் துணைவருவது நாவு. அதிலிருந்து  நா+இம்+ அம் > நாமம்.  இம் என்பதில் இகரம் கெட்டு மகர ஒற்று மட்டும் நிற்கும்.  அ, உ மற்றும் இ என்பவற்றிலிருந்து அம், இம் மற்றும் உம்.  இவை அன், இன், உன் என்றும் திரிந்து சொற்களில் இடைநிலைகளாக வரும்.    உன் ( உனது) என்ற முன்னிலைத் தொடர்பான உன்-ஐ இந்த இடைநிலையினின்று தனியாய்ப்  பிரித்து அறிந்துகொள்ளவேண்டும்.  அது குழப்பம் ஏற்பாடாமல் காத்தற்கு.

ஆதலின் நாமம், நாதன் என்பவை தமிழிலும் அவற்றின் பொருளைத் தருவனவாம்..

நா+ த் + அன் >  நாதன்.

இதை நா+ தன் எனினும் இழுக்கில்லை. இங்கு இது, து, த் என்பன சொல்லாக்க இடைநிலைகள்.  அதாவது சொல்லமைக்கும் உதவி ஒலிகள்.

நா+ ம் + அம்>  நாமம்.

ஆனால் நா+ மம் என்று விளக்குவதைத் தவிர்த்து,  நா+ ம் + அம் என்றே விளக்குக.

இது என்பதே த்  என்று குறுகி ஏற்பட்டது  எனினும் நா + இது + அன் என்று விரிக்கவேண்டியதுமில்லை. சில வடிவங்கள் திரிந்தபின் உள்ளபடி காட்டின் நலம். சில திரிதலின்முன் உள்ளவாறு காட்டினும் ஏற்புடையவாகும்.

எப்படி விளக்கினால் ஒவ்வொன்றையும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம் என்பதே குறிக்கோள்..  அன்+ அம் என்பதை அனம் என்று காட்டுவதுபோன்றதே இது  .  அனம் என்பது இங்கு இடைச்சொல்.  அனம் என்று ஒரு தனிச்சொல் ( பெயர்ச்சொல்) இல்லை.

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html   

நாதன் நாமம் முதலியவை

https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_6.html

சில சோதிடச் சொற்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: