புதன், 18 மார்ச், 2020

செவிலி ஆவிலி சக்கிலி காப்பிலி முதலானவை

பக்கத்தில் துணைவி என்று யாருமில்லாமல் அலைபவன் பக்கிலி,   இச்சொல் பக்கு + இலி  என்று பிரியும்.   லகரம் ரகரமாகத் திரிவது தமிழில் மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணக்கிட்டுவதாகும்.  பக்கிலி என்பது பின் பக்கிரி என்று திரிந்து அறியாமையால் பிறமொழிச்சொல் என்று தவறாக உணரப்பட்டது.

பகு என்பது பலவாறு திரியும் சொல்.அவற்றில் அனைத்தையும் இங்குக் கூறின் பெருகும்.   பகு என்பது பக்கு என்று திரியும்.   இதன்பொருள் இரண்டாகப் பகுந்தது என்றும் ஆகும்.  பகு என்பது முதனிலை திரிந்து பாகு என்றுமாகும். இதன்பொருள் பல பாகங்கள் கலந்துருவானது என்பதே.  இனி அம் விகுதி பெற்றபின் பாகம் என்றாகுவது பகுதியாவது என்ற பொருள்தரும்,  பக்கு என்பது அம் விகுதி பெற்றுப் பக்கம் ஆகும்.  பக்கு என்பது மெல்லெழுத்து வந்து பங்கு என்றும் ஆம்,   பின் அது அம் விகுதி பெற்று பங்கம் என்றுமாம். எனில் அது பகுதி நலமிழந்தது என்பது. பங்கு என்பது இ விகுதி பெற்றுப் பங்கி என்றும் பின் அது முதல் நீண்டு பாங்கி  ( தலைவியின் பக்கமிருப்பவள் )  அதாவது தோழி என்றும் பொருளுடைத்துமாம்,  \

பகு > பக்கு > பக்கு இல் இ > பக்கிலி > பக்கிரி என்றறிக,

இச்சொல்லின் இடையில் வந்த இல் என்பது இல்லாமைப் பொருட்டு. ஆனால் இல் என்பது இடமென்றும் இல்லமென்றும் பொருளும் உடையதாதலின் அவ்வாறும் சொற்கள் அமைந்துள்ளன.

இதற்கு எடுத்துக்காட்டு.  செம்மை + இல் + இ :  அதாவது சீரான முறையில் இல்லத்திலிருந்து பார்த்துக்கொள்பவள்.   இங்கு மை விகுதி கெட்டு  செ+ இல் + இ =  செவிலி ஆகிற்று.  செம்மை > செவ்வை.  இது அம்மை > அவ்வை போலும் திரிபு.  செவிலி > செவிலித்தாய் என்றுமாம்.

சாக்கிய முனியாகிய புத்தரைப் பின்பற்றி இல்லத்து வாழ்வை அமைத்துக்கொண்டவர் சாக்கு + இல் + இ >  சாக்கிலி என்பது முதலெழுத்துக் குறுகி சக்கிலி எனலும்  ஆகும். இதற்கு வேறு அமைப்பும் கூறலுண்டு என்பது அறிக,  முதலெழுத்துக் குறுக்கம் பல சொற்களில் நிகழ்ந்துள்ளதொன்றாகும்.
இது தமிழ்மொழியில் பல சொற்களில் காணக்கிட்டுமொரு நிகழ்வானதால் விரித்திலோம்.
[ சாக்கிய என்பதில் சாக்(கு) + இய  என்று பிரித்தபின் இய என்பது பெயரெச்சம் காட்டும் பின்னொட்டு என்று காண்க. அயலில் இது சாக்ய என்று குறுகும்‌. சாக்கு + இல் + இ > சாக்கிலி > சக்கிலி.  சாக்கியக் கொள்கையில் இருப்போன்,  அல்லது சாக்கியம் பற்றி வாழும் வீட்டினன் என்று ஏற்ப விரித்தல் கொள்க. ]


சக்கிலி:  மற்றொரு விளக்கம் இங்குக் காண்க:

சக்கிலியன் http://sivamaalaa.blogspot.sg/2015/11/ii.html


" வா ",  "வருவாய் ". முதலிய சொற்கள் ஆன் விகுதியுடன் இறந்தகாலத்தில் வந்தான் என்று குறுகுதலால் இது (ுதல் ுதல்  ுுுதல் ) வினைகளிலும் மிகுதி.   தோண்டு + ஐ என்பது தொண்டை என்று குறுகுதலும் காண்க. பகுக்கப்படுதலின் வெட்டிய கமுகுக் கொட்டை பாக்கு என்று நீடலும் காண்க.  நாக்கு என்பது வினையாக்கத்தில் நக்கு -  நக்குதலென்பதும் அறிக.

ஆவிற்கு இடம் கட்டிக்கொடுத்தவன் ஆவிலி > ஆவிலியன்.   இனி  ஆவிலாமல் வேட்டுவனாக வாழ்பவன் ஆவிலி யாவதும் காண்க. இடனும் வரலாறும் நோக்கிப் பொருள்கொள்ளுதல் வேண்டும்.  பாதுகாப்பிலாதவன் காப்பிலி எனலும் தனக்குக் காவல் இல்லம் அமைத்து வாழ்பவன் காப்பிலி ஆவதும் வரலாறு நோக்கியே தீர்மானிக்கத் தக்கவை என்பதுமறிக.

மூச்சு நிறுத்தி வெளிக்கொணர்தல் ஆவது மூக்கு > முக்கு > முக்குதல் ஆனதும் காணின் நீட்டலும் குட்டையாக்கலும் சொல்லமைப்பில் இயல்பென்றுணர்க.

கருத்துகள் இல்லை: