சனி, 7 மார்ச், 2020

துலாக்கோலும் தராசும்

அளந்து தருவதற்கான கருவிக்கு எப்படிப் பெயரிடுவது?

ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்தால் அது எந்த அளவினது என்று மதிப்பிடலாம்.  அதற்கு ஒரு பட்டறிவு வேண்டும். எனினும் அஃது ஒரு மதிப்பீடு மட்டுமே. அவ்வரிசியை ஓர் ஒப்பிடு கோலில் ஏற்றி அளந்து அறிந்தாலே அரிசியின் எடை தெரிகிறது. சோறு சமைக்கும்போது ஓர் அளவு குவளை வைத்துக்கொண்டு  " ஒரு குவளை, இரண்டு குவளை" என்று சமைப்பவர் அளந்து இடுவார். ஆனால் அது அளவுகருவியன்று. கோலின் ஒரு புறத்தில் ஓர் எடைக்கட்டியும் மற்றொரு புறத்தில் அரிசியையும் வைத்து நடுவிற் பிடித்துத் தூக்கி  அறியும் கோல் துலைக்கோல் அல்லது துலாக்கோல் எனப்பட்டது.  துலாக்கோல் உண்மையில் எடையைத் துலக்கும் ஒரு கோலே ஆகும்.

துலக்குகோல் > துலைக்கோல்.
துலக்குக்கோல் > துலாக்கோல்.

துலக்குதல் என்ற சொல்லில்  குகரம் ஒரு சொல்லாக்க விகுதி.  துல் + கு = துலக்கு.   மூழ் > மூழ்கு என்பதிற் கு என்பது வினையாக்க விகுதியானதுபோல் துலக்கு என்பதில் கு என்பதும் விகுதியே. இப்படி அமைந்த இன்னொரு சொல்: விளக்கு(தல்)  ஆகும்.   விள்> விள்ளுதல் ( வெளிப்படுத்தல்).   விள் > விள் + கு = விளக்கு.  விளக்கு என்பதில் விள் - பகுதி. அ - இடைநிலை.   க் என்றுவந்தது சந்தி அல்லது புணர்ச்சி.   கு என்றது விகுதி. துலக்கு என்பதும் அன்னதே.

துலக்குதல் : பல் துலக்குதல் என்பதிலும் அதே சொல் வருகிறது.

எளிதில் அறிய இயலாத ஒன்றை ஒப்பீடு மூலம் அறியலாம்.

சமன்செய்து சீர் தூக்கும் கோல் என்றும் விளக்குவதுண்டு.

அரிசி போலும் அளக்கப்படும் பொருளைப் பிறனுக்கு விற்பதற்கு அல்லது பண்டமாற்றாய்த் தருவதற்கு (  " தரு " )     ஆகும் கோல்  ( "ஆசு" )   தராசு எனப்பட்டது. 

தருதலுக்கு   ஆகும் ஒப்பிடுகருவி.
தரு +  ஆ + சு (விகுதி).
தரு என்பது வினைச்சொல்.  ஆ என்பதும் வினைச்சொல்.  சு என்பது விகுதி.
தராசு.
ஆசு - பற்றுக்கோடு.  ( பற்றிக்கொள்ளுதல்).  தருதற்கு பற்றுக்கோடு ஆகும் கருவி எனலுமாம்.

தர+ ஆசு =  தராசு எனினுமது.


சு விகுதிச் சொற்கள்:   பரிசு.   விழைச்சு.
சு விகுதி இடையிலும் வந்து வேறு விகுதி ஏறும்.   அலை > அலை+ சு + அல் = அலைச்சல்.  இதேபோல் விளைச்சல். குடைச்சல்.  நமைச்சல்.

நீர்ப்பாசனம் என்ற   கூட்டுச்சொல்லில்  பாய் + சு + அன் + அம் >  பா(ய்)சனம் > பாசனம்.  நீர் பாய்ச்சுதல். யகர ஒற்று மறைவு.

யகர ஒற்று மறைந்த இன்னொரு சொல்:  வாய் + தி >  வாய்த்தி > வாத்தி(யார்).  வாய்ப்பாடம் சொல்பவர்.

பாய் > பாய்ம்பு > பாம்பு.  யகர ஒற்று மறைந்தது.   (முனைவர் மு வரதராசனார்.)

இவற்றை அறிக. மகிழ்க.



கருத்துகள் இல்லை: