புதன், 7 ஜூன், 2017

உந்தி விளைப்பது தீவிர வாதமோ!

பழம்பெரு மைபல பயின்றொளிர் நாடுகள்
பல்கிய மண்ணே வல்கலை நண்ணிலம்;

சட்ட மெனபதைக் கட்டி எழுப்பி
அசத்திய நாடு மெசோபோட் டேமியம்.

அம்மு ராபி அமைத்திட் டருளிய‌
குற்றச் சட்டங்கள் எற்றெனக் கேள்நலம்.

இந்த நாடுகள் இற்றை நிலையில்
உந்தி விளைப்பது தீவிர வாதமோ.

உண்மை உணரா வண்க ணாளர்கள்
உளுத்துப் பெருகினர் உலகின் மீதில்.

ஈரான் மன்றிலும் தீவெடி கூட்டினர்;
ஆராத் துயரே அகலுள் அனைத்திலும்

பாரத எல்லையில் பதட்டம்; ஆங்கு
ஊரினர் யார்க்கும் கூருகுண் டச்சம்,

அன்பின் வழியது உயிர்நிலை மறந்தார்
துன்பில் துவண்டார் உலகும் இருண்டது;

இனி இவ் வுலகம் மீளுமோ
கனிதொலைத் தவர்க்குக் காயே உளதே.

கருத்துகள் இல்லை: