வியாழன், 8 ஜூன், 2017

மறையும் ஒலிகள் ‍ எழுத்துக்கள் --- வாத்து

சொல்லமைப்பில், சொல்லின் பகுதியில் உள்ள, அல்லது அமைத்தபின்
அச்சொல்லில் வருகின்ற ய‌கர ஒற்றுக்கள் இயற்கையாகவே மறைந்துவிடுகின்றன. இத்தகு மறைவு மக்கள் பேச்சில் ஏற்பட்டவை.
பெரும்பாலும்  மக்கள் நாவே , அந் நாவின் முயற்சிக் குறுக்கமே இதற்குக் காரணம். நன்கு சிந்திப்போமானால், ய‌கர ஒற்றுக்கள் இருந்து
அவற்றால் ஆகப்போவதும் ஏதுமில்லை. எனவே மக்களே சிறந்த
ஆசிரியர்கள் ஆகின்றனர். புலவர்கள் அவர்களிடமிருந்து இந்தகைய‌
சிக்கனத்தைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.


வாய் > வாய்+து+ அம் = வாய்தம் > வாதம்.: இங்கு ய் ஒழிந்தது.
 வாயினால் ஏற்படுவதே வாதம். அதிகம் பேசுவோனை "பெரிய‌
வாய்" என்பது வழக்கு. வாயாடி என்ற சொல்லும் இக்கருத்தையே
வலியுறுத்துவது. எடுத்துக்காட்டுகள் பல உள.

வாய்+தி =  வாய்த்தி > வாத்தி>  வாத்தியார் ( மரியாதைப் பன்மை).
வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர் என்று பொருள். மொழிகளில்
எழுத்துக்கள் ஏற்படுமுன், வாயினாலே மொழியறிவு புகட்டப்பட்டது.

உப+ அத்தியாயி = உபாத்தியாயி என்பது வேறுசொல். இதை ஏன் வாத்தியோடு போட்டுக் குழப்பவேண்டும்?

வாய் + து = வாய்த்து > வாத்து.  வாயினால் குவாக் குவாக் என்று
கத்திக்கொண்டிருக்கும்---- சில வீடுகளில் வளர்க்கப்படும் பறவை. காட்டு
வாத்துகளுமுள.

சாய்த்தல்:  சாய்+து+இ+அம் = சாய்த்தியம் = சாத்தியம்.
இது மரம் சாய்த்தல் திறமுடையார் கண்ட வெற்றியினின்று விளைந்த‌
சொல்லாகும்.  து, இ, அம் என்பன விகுதிகள். "சாய்த்துவிட்டீரோ" என்பான் தமிழன்.  அப்படியென்றால் வெல்ல முடிந்ததோ என்று
வினாவுவதாகும்.

சாய்+தி =  சாய்தி > சாதி > சாதித்தல்.
சாய்+து+அன்+ஐ = சாய்தனை > சாதனை. சாய் தவிரப் பிற விகுதிகளாம்.

வேய்+து+ அம் =  வேய்தம் = வேதம். (வேயப்பட்டது). யகர ஒற்று
மறைந்தது.


வாய்ந்தி  வாந்தி

வாய்+இன் +தி :  வாய்ந்தி >  வாயின் வழித் திரும்புதல்,  அதாவது
தின்ற உணவு.  இன் என்பதில் இ தொலையும். இன் என்பதில் ஒற்று
மட்டும் நிற்கும்.  தி:  விகுதியும் திரும்புதல் குறிப்பும் ஆகும்.
திறமையாக அமைக்கப்பட்ட சொல். தெரியாதான் இதைத் தமிழன்று
என்பான். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத,பிற்காலப் புனைவு.

பேச்சுத் தமிழ்த் திரிபுகள் மட்டும் உலகில் பல மொழிகளைப் படைக்கப்
போதுமானவை. இற்றை ஆய்வாளர்கள் இதனை முழுமையாய் இன்னும்
உணரவில்லை என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை: