புதன், 4 ஜூலை, 2012

தாயின் பொறுப்பென



தாயின் பொறுப்பென ஆய யாவினும் ஓய
ஒழிந்திட உதவியொன் றிலாப்படிக்கு

நோயும் நொடியற, காயும் வயிற்றினுக் காயதீம்
பால்தனை வாயில் புகட்டியபின்,

சாயும் காலமும் இராவும் பகலும் பொழுதிவை
சடுதியில் போகதுன் பலைப்படுவாள்,

போயும் இனியும் பொல்லா மகாரினால் புகழும்
தரமும் உலகினில் கொலைப்படுமோ?



மட்டில் மகிழ்வுடன் தொட்டில் குழவிநன் மெட்டில்
இசைபெறத் தாவி அணைத்திடுந்தாய்;

குட்டிக் குரங்கதன் சுட்டித் தனம்மிகக் கட்டிப்
பிடிக்குமப் பெற்ற கிளைக்குரங்கு;

ஒட்டித் திரிநலம் எட்டில் உறழுபத் தெட்டும்
செலும்வரை நெட்டில் வளர்தருமோ?

தட்டித் துரத்துமே முட்டும் சிறுகபி பட்டும்
அறிகிற மட்டம் அடைந்ததுமே!       

கருத்துகள் இல்லை: