ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

சுந்தரம் செட்டி சட்டி முதலிய சொற்கள்


அழகில்லாதார் பலர்.  அழகில்லாதாரிடத்தும் ஓர் அழகிருக்கும். அதைக் கண்டுபிடிக்கும் திறமுடையாரிடத்து அவ்வழகு வெளிப்பட்டு நிற்கும். அழகென்பது தோலளவுதான் என்பதும் ஓர் ஆங்கிலப் பழமொழி. அழகென்பது காண்பாருள் ஏற்புடையாரைப் பொருந்துவது என்றும் கூறுவதுண்டு.

உண்மையில் நாம் காணும் எல்லாரையும் அழகுடையார் என்று நாம் கொள்வதில்லை. சிலரைப் பிடிக்கும். சிலரைப் பிடிப்பதில்லை. ஒருவன் அல்லது ஒருத்தியின் மன அழகே அழகு என்பாருமுண்டு. ஆனால் அத்தகு தத்துவம் செயல்பாட்டில் இல்லாதது ஆகும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.  அப்படிப் பிறந்திட்ட காலையும் ,மயக்கும் அழகுடையாராய்ப் பிறத்தல் அரிது  பெண்ணைக் குறிக்கும் அரிவை என்ற சொல் அரு என்ற அடியினின்று தோன்றியதில் எந்த வியப்பும் இல்லையே.  அரு >  அரி > அரிவை.   இ, வை என்பன விகுதிகள். சொல்லில் மிகுதி காட்டுவது விகுதி.  மிஞ்சு விஞ்சு என்பது போல.

சில அழகுகள் உங்களைச் சும்மா இருக்கவிடாது.   அழகுக்குச் சொந்தக்காரனிடமோ சொந்தக்காரியிடமோ ஒரு வார்த்தையாவது பேசுமாறு உங்களை உந்திவிடும். அழகுக்கு உந்து ஆற்றல் இல்லையோ?

உந்திவிடும் அரியது அழகு.
உந்து + அரு + அ =  உந்தரம் >  சுந்தரம்.
உந்து அரு அன் :  உந்தரன் > சுந்தரன்.
உந்து  அரு இ  :  உந்தரி > சுந்தரி.

உந்துதல் சுண்டுதல் என்பன சுட்டடிச் சொற்கள். தொடர்புடையவை.

சுண்டு அரு இ > சுந்து அரு இ “ சுண்டி அருகில் இழுப்பது" என்பாரும் ஒரு மாற்றுப் பகர்பவர் ஆவார்.

இதன் மூல அடிகள் உல் சுல் என்பன சுட்டடிகள்.

இதை அறிஞர் உரைத்துள்ளனர்.

இனி அகர வருக்கங்கள் ஏற்ற சகர வருக்கங்களாகத் திரிவன ஆகும்,  அமணர் > சமணர் என்பது பலமுறை சொல்லப்பட்ட பழைய எடுத்துக்காட்டு, புதியவை எம் முன் இடுகைகளிற் காண்க.

சமையலுக்குதவும் சட்டியை மறக்கலாமோ?  அடு > சடு > சட்டி. (சடு இ )
அடுதலாவது : சுடுதல் ,  சமைத்தல்.  
அடு > அடுப்பு.
அடுசில் > அடிசில் :  உணவு,  சோறு.
அடிசிற்சாலை,  அடிசிற்பள்ளி.

எட்டி > செட்டி, எட்டிப்பூ சூடி அரசர்முன் தோன்றும் வணிகர்,

சந்திப்போம்,


மனிதனை விலங்குபோல் படைத்துள்ளார்.

மனிதத் தசையூண் மலைப்பாம்பு ---பூவின்
மதுவுண்ட வண்டாய் மயங்கியதே;

இனிதித் தசையே எனவிழுங்கி ---- ஓர்

எண்ணைந்  தடிக்குள் உறங்கியதே.



இவனுக் குணவாம் விலங்குகளே --- இவன்

எவ்விலங் கினுக்கும் உணவாகுவான்;

இவற்கும் அவற்றுக்கும் வேறுபாடு ----- உண்டோ

இறைவன் படைப்பினில் கூறுபாடு.



மாந்தனை நீயுண்க என்றுசொன்னான் ---பல

மாக்களும் பின்பற்றி வந்துள்ளன;

வாழ்ந்திட மாந்தனே உண்மாவினை --- என

மாந்தனும் வாழ்ந்திடப் பின்பற்றினான்.



ஆய்ந்திடில் மாந்தனுக் கென்ன இடம்--- அவன்

அருந்தலை மைக்கிங்  கறிகுறியோ  

சேர்ந்தெழுப் பிட்டதோர்  கூக்குரலால் ---- இவன்

சீர்பெற்று மேலான தெப்படியோ?

மா = விலங்கு
உண் மா =   விலங்குகளை உண்.


மலைப்பாம்பு விழுங்கிய பெண் கதை. சொடுக்கி வாசிக்க:

மேற்குறித்த செய்தியைப் பாருங்கள். மனிதன் 
விலங்குகட்கு உணவு.  விலங்குகள் மனிதர்க்கு 
உணவு. எல்லாம் இறுதியில் அழிவை எய்துவதும்
படிப்பகர்ப்புகளை உண்டாக்கிக்கொள்வதுமாகவே
உள்ளன. இந்தக் கவிதை இதனைச்  சிந்திக்கிறது.
மனிதன் எப்படி விலங்கினும் மேலானவன் என்று 
சொல்லிக்கொள்கிறான்.

மனிதன் தன் இயல்பினாலும் கடவுள் கட்டளையாலும்
மேலானவன். அப்படியானால் பல நிகழ்வுகளில் 
மனிதனுக்கு ===  குழந்தைக்கும் வளர்ச்சி 
பெற்றவளுக்கும் உள்ள வேறுபாடு ஏன் தெரியாமல் 
போனது? ஆட்டினுடன் ஏன் 
வன்புணர்வில் ஈடுபடுகிறான்?

மனிதனும் ஒரு விலங்கு அல்லனோ? மனிதன் 
தற்பயிற்சி மூலமாகவும் சிந்தித்ததன் மூலமாகவும் 
வேறுபாடுகிறான். மற்றபடி அவனும் விலங்குதான்.

உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். 

Previews failed to load.  Impedes editing. Read with necessary
corrections as you deem fit until we are able to edit. Thank you.




சனி, 4 ஆகஸ்ட், 2018

தலைவரும் தொண்டரும் வேறுபாடு

தலைவருக்குப் படையுண்டு காவல் உண்டு;
தலைநடுங்கும் பயமில்லை நன்றே என்றும்;
தொண்டருக்கு நல்லுதைகள் நையக் குத்தித்
தொண்டைகிழி பட்டுவலி மிண்டா வண்ணம்
ஒண்டுதற்கும் வீடின்றி ஓடும் துன்பம்
உலகினிலே நித்தலுமே உண்டம் மாவே.
பண்டிதுவே இன்றுமுண்டு என்றும்  ஆமே
பாரினொரு பான்மைதனை மாற்றப் போமோ?

குறிப்பு:

யாப்பியல்:

தலைவர் -  தொண்டர்: முரண்தொடை.

என் வீட்டுக்குப் பின் பத்து நாய்கள் போன துன்பம்

பத்துநாய்கள் பின் தெருவில் நத்து நாட்கள்
பறந்தனவே வாராவோ  எங்கே  எங்கே;
ஒத்திருந்த காலமதை உன்னு கின்றேன்;
ஓய்ந்திடாத குரைப்புக்குள் ஊறிப்  போன
அத்திருந்து செவிகட்க  மைதி தானோ
ஆகவிது வேறுலகும் ஆயிற்  றம்மோய்!
மெத்தையிலே கிடந்தாலும் மேவு நெஞ்சில்
மீண்டுமொரு மகிழ்வில்லை யாண்டும் துன்பே.

இங்கு பத்து நாய்களோ அதற்கு மேலோ இருந்தன. பின் வீட்டு சீனப் புண்ணியவான் பகலில் இறைச்சி கோழி உணவுகள் விற்கும் கடைகட்குப் போய் வாடிக்கையாக அவற்றுக்கு  எலும்பு இறைச்சி கலந்த சோறு கொண்டுவந்து போட்டார். தெம்பாகக் குலைத்துக் கொண்டிருந்தன.
அந்த வீட்டுச் சீன அம்மையார் சொன்னார்: புதிதாக இங்கு குடிவந்தவர்கள் போட்ட புகார் மனுவின் காரணமாக எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும்படி நகர அவை உத்தரவிட்டுவிட்டது. எல்லாம் போயிற்று என்றார்.

பாவம், எங்கே போய் என்ன பாடுபடுகின்றனவோ! சிலவற்றை மீளா உறக்கத்துக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டார்களாம்.

இந்தக் கவி அது பற்றியது.

12  12 12 12 12 12 12 12

பின் தெரு -  என் வீட்டின் பின்னால் உள்ள தெரு.
நத்து(ம்)  -   பின்செல்லும்; சோற்றுக்காகப் பின்னால் போகும்.
ஒத்திருந்த - (குலைத்தாலும் வாடை கொடுத்தாலும் ) சம்மதித்திருந்த;
உன்னுகின்றேன் = சிந்திக்கின்றேன்;
குரைப்பு - நாய் குலைத்தல்.
திருந்து செவிகள் - நல்ல செவிகள்; இசை தெய்வநாமம் முதலிய கேட்கத்
தகுதியுடைய காதுகள்;
மேவும் - பொருந்தும் (நெஞ்சில்)
யாண்டும் -  எப்போதும்


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

போட்டாகாப்பி : ஒளிப்பகர்ப்பு


போட்டோகாப்பி   போட்டாகாப்பி ஃபோட்டோகாப்பி.

 போட்டோ என்பது ஆங்கில வழக்குச் சொல்.  இச்சொல் குறிக்கும் படத்துக்கு 

ஆங்கிலத்தில் முன் அமைந்த பெயர் “ஃபோட்டோகிராப்” என்பதுதான். இப்படத் தொழில்நுணுக்கம் இப்போது பழையதாகிவிட்டது. போட்டாகிராப் என்பதன் பேச்சுவழக்குச் சுருக்கமே “ஃபோட்டோ”  (போட்டா என்பதுமுண்டு). ஆகும்.
போட்டோ  என்றால் ஒளி என்பதே பொருள். போட்டோசிந்திசிஸ் என்ற சொல்லைக் காண்க.

ஒளியின் மூலம் எடுக்கப்படும் காப்பி  அல்லது பகர்ப்பு  ஒளிப்பகர்ப்பு ஆகிறது. இன்னொரு வகையில் இதைக் கூறுவதானால் :  படப்பகர்ப்பு என்று கூறவேண்டும்.

படி என்ற தமிழ்ச்சொல்லும் அதன் வட திரிபாகிய பிரதி என்பதும் ஒன்றன்படி இன்னொன்று அமைந்திருத்தலைக் குறிக்கிறது.  ஒன்றுபோலவே இன்னொன்று படிந்துள்ளது..  படி என்ற சொல்லின் அடிச்சொல் படு என்பது.
படு என்பதோ மிக்க அழகாக அமைந்த தமிழ்ச்சொல்..உன்மேல் என் கை படாமல் நடிக்கவேண்டும் என்று நடிகை கூறும்போது படுதல் என்றால் என்ன என்று விளங்கும்.,  பாயில் படு என்னுங்கால்  உன் முதுகு தலை கால்கள் எல்லாம் தரையில் விரித்திருக்கும் பாயில்  படும்படியாகக் கிட என்று பொருள். படுத்துவிட்டால் உடல் முழுமையாகப் பாயில் படிந்து கிடக்கிறது. 

படிதலாவது பொருளின் படத்தக்க எல்லாப் பகுதிகளும் படும்படியாக இருத்தலாகும்.  இப்படி ஒன்று இன்னொன்றில் படிந்து அதனால் உண்டாகும் உருவமைப்பே படி என்று உணர்க.  இனி வட அமைப்பு:  ப = ப்ர.  டி = தி.

படு > படி,
படு+ அம் =  படம்..

இனி போட்டோகாப்பி என்பதை படப்பகர்ப்பு அல்லது ஒளிப்பகர்ப்பு என்பதே நன்றாம்.



றம்பம் < அறம்பம் ( ரம்பம் )


ஆரம்பம் அம்பு முதலிய சொற்களை ஓர் இடுகையின் மூலம் விளக்கினேம். 1 அம்பு என்ற ஏவப்படும் குத்துகோலுக்கு எப்படிப் பெயர் அமைந்தது என்று சொன்னோம். இச்சொல்லில் அமைந்துள்ள சுட்டடிச் சொல் வளர்ச்சியை அவ்விடுகையிற் புலப்படுத்தியிருந்தேம்.
அதை இங்குக் காணலாம்:

இவை முன்பும் எம்மால் வெளியிடப்பட்டவைதாம்.

இன்று ரம்பம் என்ற சொல்லை அறிந்தின்புறுவோம்.ஒரு புறத்தோ  இருபுறத்துமோ அறுபல் உள்ள நெட்டிரும்புத் தகடு ஒரு கைப்பிடிக்குள் மாட்டப்பட்டு மரத்தை அறுக்க வழிசெய்யும் ஓர் கருவியே ரம்பம் என்று சொல்லப்படுகிறது. இது உங்களுக்குத் தெரிந்ததே.  ஒரு வரையறவு தரவேண்டுமெனற் பொருட்டு இதைச் சொன்னோம்.

ரம்பத்தின் வேலை அறுப்பதுதான்.  ஆனால் இந்தச் சொல்லை உற்று நோக்கின் இது தெரியவில்லை.

வேற்றுமொழிச் சொல்போல் தெரிகிறது. ஒன்றும் ஆய்வு செய்யாமலும் சிந்திக்காமலும் இது தமிழன்று, காரணம் ரகரத்தில் சொல் தொடங்காது  என்று சொல்லிக்கொண்டிருக்கலாம்.  இப்படிச் சொல்பவன் மூளையைச் சற்றும் பயன்படுத்தாத முட்டாளே ஆவான்.
ரம்பம் என்பதை இரம்பம் என்று எழுதி, ரகரத்தில் சொல் தொடங்காது, ஆகவே அது உருது என்று எண்ணி, சரிப்படுத்தச் சிலர் நல்லோர் முயன்றுள்ளனர்.  அவர்களுடைய முயற்சி பிழைத்தது என்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
பழைய தமிழ் வாசகங்களில்  (பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் ) ஆசிரியர் சிலர் இதனை றம்பம் என்று எழுதியிருப்பர்.  ஆனால் றம்பம் என றகரம் அயற்சொற்களில் வருவதில்லை என்ற மறுப்பு எழுமென்பதால் பின்னர் இச்சொல் ரம்பம் என்றே எழுதப்பட்டது.

மரத்தை அறுப்பது ரம்பம்.  ஆகவே அறு என்பதே இதன் பகுதி.

அறு+ அம் + பு + அம்  என்ற வழியிற் புனையப்பட்டது இச்சொல். இதில் இரண்டு அம் வந்துள்ளன. ஒன்று இடைநிலையாகவும் மற்றொன்று இறுதியாகவும் அமைந்துள்ளன.2 

இதில் ஏன் இரண்டு அம் வரவேண்டும் எனலாம்.  இச்சொல்லை அமைத்தவன் ஒன்றை விகுதியாகவும் இன்னொன்றை இடைநிலையாகவும் பொருத்தியுள்ளான். இது பேச்சுவழக்குச் சொல். முதன்முதலாய்ச் சொல் அமைத்தவனைப் பாராட்ட வேண்டும்.  நடுவிலுள்ள அம்மினை நீக்கிவிடில் அறுபம் என்று வரும். அல்லது வலிமிகுத்து அறுப்பம் என்று வந்துமிருக்கலாம். புனையப் பல வழிகள் இருப்பின் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.  அதனை இன்னோசை கருதிய முடிவு என்னலாம்.

அறுப்பம் என்பதுதான் பிடிக்குமென்றால் உங்கள் குடும்பத்திலோ வட்டாரத்திலோ அதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். கூடாது என்று நாடாளுமன்றச் சட்டம் எதுவுமில்லை.

ஆனால் அமைந்த சொல்:  அறம்பம் என்பதே.

அறம்பம் > றம்பம் > ரம்பம்.

ஒப்புக்கு:   அரங்கன் > ரங்கன்.


அடிக்குறிப்பு.
1        (ஆம்  ஓம் என்பன வினைமுற்று விகுதிகள்.  வந்தேம் என்றும் எழுதலாம். வந்தோம் என்றும் எழுதலாம்.  இவை பிழைகளல்ல. வந்தோம்  என்பதே இன்று பெரிதும் வழங்குவது .) நன்னூலிலே வேறு இலக்கண நூல்களிலே படித்தறிக.

2  இறுதி, சொல்லின் மிகுதி:  மிகுதி> விகுதி;
ஒப்பு நோக்குக: மிஞ்சு > விஞ்சு.



அரை> அரைசு> அரைசம் > ரசம்.

வினைச்சொற்கள் பெரும்பாலும் பிறமொழியிற் சென்று இயைவுடையவாகுவதில்லை. பிறமொழியிற் பயன்பாடு காணும்போது
வினைச்சொல் ஒரு பெயர்ச்சொல்போல் இயலும் நிலையை அடைகின்றது.  எடுத்துக்காட்டாக ஆங்கிலச் சொல்: "டிரைவ்" இது தமிழில் வந்து வழங்குங்கால் அதன் வினைத்தன்மையை உள்ளுறுத்த, "பண்ணு" அல்லது "செய்" என்ற இன்னொரு சொல் தேவைப்படுகின்றது.

எடுத்துக்காட்டு: " மானா மதுரையிலிருந்து டிரைவ் பண்ணித்தான் மதுரைக்கு வரமுடியும்" என்ற வாக்கியம் ஆராய்தற்குரியது.

மானாமதுரையிலிருந்து மதுரைக்கு டிரைவித்தான் வந்தேன்" என்றால் உடனே இவளுக்குத் தமிழ் தெரியவில்லை என்று என்னை முதுகில் தட்டி மூலையில் நிறுத்திவிடுவார்கள். பண்ணு செய் என்ற உதவும் வினைகள் தேவைப்படுவது நன்`கு புரிகிறதல்லவா

உண்மையில் இந்த டிரைவ் என்பது தமிழ் வினைச்சொல்லுடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஆங்கிலத்துக்குள் நடமாடும் தமிழ்மணி அது என்றுகூடச் சொல்லலாம். எப்படி என்று கேளுங்கள்.

"நாயைத் துரத்து " என்பது ஆங்கிலத்தில் "டிரைவ் எவே த டாக்"  என்று வரும்.
இதில் வரும் "துர(த்து) " என்பதே டிரை(வ்) என்பதன் மூலம். பிறைக்கோடுகளுக்குள் அடைபட்டுள்ள  வேறுபடு ஈறுகளை மெல்ல அகற்றிவிட்டுச் சொற்களை நுணுகி ஆய்ந்தால்,   துர>டிரை என்பது நன்றாக விளங்கும். பெரும்பாலும் வண்டிகளை எத்திசையிலிருந்தும் எத்திசைக்கும் செலுத்தலாம் என்றாலும் அடிப்படையில் அது முற்செலுத்துதலே ஆகும். இதைக் கூறுகையில் உருண்டையான உலகின்மீது  எது பின் எது முன் என்பது உங்கள் சொந்த ஆய்வுக்குரியதாகும்.

 ஏன் இதை விளக்குகிறேன் என்றால்  வினைச்சொல் என்பது ஒரு மொழியினோடு  குருதியிற் கலந்து நிற்பது. துரத்து அல்லது துர என்பது வினையாதலின் தமிழுக்கே உரியது.  டிரைவ் என்பதும் வினைவடிவில் ஆங்கிலத்துக்கே உரிமை பூண்டு நிற்பது. வினைச்சொற்கள் அதிகமுள்ள மொழி கருத்துரைக்க ஏற்ற திறன்படு மொழியாகும். மேலும் சொல்லின் வினைவிசையானது பொருளில் நிற்கின்றது.  அதனால்தான் துணைவினை இன்றிப் பிறதடத்துக்குத் தாவமுடிவதில்லை.

பெயர்களைக் கடன்பெறுவதும் பிறமொழியில் ஆள்வதும் எளிதிலும் எளிதே. அரிதாவது வினையே. தமிழ் வினைச்சொல் என்பது தமிழ்ப்பெண் போன்றது. தன்னினத்துடன் மானங்காத்து மகிழும். அவ்வம் மொழியினருக்கும் ஆங்காங்கு மானமுண்டு; பிறருக்கில்லை என்பது இதன் பொருளன்று.

இப்போது ரசத்துக்கு வந்திடுவோம்.  முன் காலத்தில் உரிய துணைச்சரக்குகளைக் கல்லில் அரைத்தோ அம்மிக் குழவியால் தட்டியோ பொடிகளாக்கி நீரிலிட்டுக் காய்ச்சி எடுத்துக் குடித்தனர். தட்டக் கல் இல்லாதவிடத்து ஒரு பானை நீரிட்டால் அது அரை காலாவதுவரை நன் கு கொதிக்கவைத்து சரக்குகளின் உட்பொதிவை நல்லபடியாக இறக்கி ரசத்தைச் செய்தனர். அரைக்கப்பட்டமையின்  அரை > அரைசு > அரைசம் >  அரசம் ( இது ஐகாரக் குறுக்கம் ) > ரசம் ஆயிற்று.   அரை என்பது தமிழ் வினைச்சொல். அரங்கன் என்ற சொல் தன் முதல் எழுத்து விழுந்து ரங்கன் ஆனது போலவே அரசம் என்பதும் ரசம் ஆனது.

உரசி எடுத்த சாறு சுரசம் ஆனது எப்படி?  அதை இன்னொரு நாள் காண்போம்.

பின் தோன்று பிசகுகள் பின் திருத்தப்பெறும்.


வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சால நித்தியமான சானித்திய நிலை: பொருள்

இன்று அடிக்கடி வழங்காத ஒரு சொல்லை அறிந்து இன்புறுவோம்.  எப்போதும் நம் புழக்கத்திலும் பழக்கத்திலும் உள்ள சொற்களை மட்டும் அறிந்துகொண்டு உறக்கம் மேற்கொள்வதிலிருந்து இது சற்று வேறுபட்டுக் கேட்பாரை மகிழ்வுறுத்தும் என்று எண்ணுகிறோம்.

நாம் தெரிந்தெடுத்துள்ள சொல்:  சானித்தியம் என்பது.  இது செந்தமிழ்போல் இல்லை அன்றோ?

இதில் இரண்டு துண்டுச் சொற்கள் உள்ளன.  இவற்றுள் இறுதித் துண்டினைப் பார்ப்போம்.

இறுதி:  நித்தியம் என்பது.  ஒன்றை நித்தியமென்றால் அது என்றுமுள்ளது என்று பொருள்படும்.

ஒன்று உள்ளது என்றால் உள்ளிருக்கிறது என்பதே அதன் பருப்பொருள். ஒரு பொருளாய் அகத்திருந்தால் அங்கு உள்ளே இருக்கிறது என்போம்.  சுருக்கமாக, அது உள்ளது  என்றும் சொல்வோம்.  அது உண்டு என்பதும் வழக்காகும்.

இப்போது உள்ளது என்பதில் " உள்" என்பதன் பொருள் வலிவற்று நிற்கிறது. ஒரு கடையில் போய் அரிசி உள்ளதா என்றால் :  கடைக்காரனும் உள்ளது என்றால்,  அது உள்ளே எங்கோ இல்லாமல் வெளியிலே ஒரு பெரும் பாத்திரத்தில் இருந்தால்,  " என்ன உள்ளது என்கிறாய், அது வெளியதாய் இருக்கிறதே!"  என்றால்  பொருட்கேடு விளைந்ததுபோல் தோன்றுமே.  உள்ளது என்று நாம் சொல்லும் ஒரு பொருள் உள்ளே இல்லாமல் வெளியிலும் இருக்கலாம்.  ஆகவே உள் எனில் இருக்கின்றது என்றே பொருள்.  இஃது இவ்வாறாக  'என்றும் உள்ளது' என்பதற்கு என்றும் உள்ளிருப்பது என்பது பொருளன்று.

அகடுற யார்மாட்டும் நில்லாது ---- என்றால் நித்தியமானது அன்று,   நிலையானது அன்று என்று பொருள் கூறுவோம்.  நித்தியம் என்றால் நிற்பது என்பது.  நிற்காமல் வீழ்வது, நிற்காமல் ஓடிப்போவது, நிற்காமல் கரைந்துவிடுவது, நிற்கும்போதே ஆவியாகிவிடுவது ----- என்பவெல்லாம் நித்தியம் அற்றவை  ஆகலாம். நிற்கவேண்டும்; அதுவே நித்தியம்.  நில் > நி > நித்து> நித்தியம்  அல்லது நில் > நிற்று > நிற்றியம் > நித்தியம்.  எப்படியானாலும் நிற்பதே நித்தியம். ஓடிப்போவதும் கரைந்துவிடுவதும் சாம்பலாவதும் நித்தியமன்று.

நித்தியம் என்றால் நிற்பது; நித்தியம் என்றால் நிலையானது,

நிலை என்றாலும் நில் என்ற அதே அடியிலிருந்தே சொல் வருகிறது.

நிற்றல் > நித்தல்;  நிற்றம் >  நித்தம்.

ற்ற எனற் பாலதை த்த என்று மாற்றி அழகு கண்டுள்ளனர்,  எனினும் இவையாவும் கிருதப்புதுமை ஒன்றையும் வெளிக்கொணரவில்லை,

நித்தியம் என்றபடி சொல்லமைக்காமல்:  உள் என்பதிலிருந்து தொடங்கி,  உள்> உள்ளி > உள்ளியம் என்றும் அமைத்திருக்கலாம் எனினும் அமைக்கவில்லை. இரு என்பதிலிருந்து தொடங்கி  இரு > இருத்து > இருத்தியம் என்று வந்திருக்கலாம். வரவில்லை. அமைவுறாதன வேறு சுற்றுச்சார்புகளில் எழும் புதிய கருத்துகளுக்குச் சொல்லமைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்,

நித்தியமென்ற சொல்லினழகும் அமைப்பும் அறிந்தின்புற்ற நாம், முழுச்சொல்லையும் அறியத் தயாராய்விட்டோம்.

தயார் என்றாலே தயக்கத்தின் நிறைநிலை என்று பொருள்.  ஒரு படை உடனே போருக்குள் இறங்கிவிடாமல் தயக்க நிறைநிலையில் நின்றிருத்தலே தாயார் நிலை. படைகளும் தமிழரசும் தொலைந்த பின், தயார் என்ற சொல்லிருந்தது; ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று புரியாத நிலையில் தயார் தமிழா என்று ஐயம் ஏற்பட்டுவிட்டது.  தய:  தயக்கம் அல்லது தயங்கிடுதல்;   ஆர்:  நிறைவு;  ஆர்தல் -  நிறைதலே.  தய+ ஆர் . =தயார்.  இது உருதுமில்லை; கிருதுமில்லை,  இந்தோனேசியாவின் பாலிம்பாங்க்  வரை படைநடத்தி, சிங்கப்பூருக்குள்ளும் புகுந்தான், நீல உத்தம் சோழன் என்னும் இராஜ ராஜனின் தளபதி.  அவன் படைகட்கு உத்தரவுகளை உரக்கக் கூவினான்.  எங்கே அவன் பயன்படுத்திய சொற்களெல்லாம்?

யாம் இப்போது தயார்.

நித்தம் என்பதறிந்தோம்.  நித்தியம் என்பதுமறிந்தோம். இனிச் சானித்தியம் அறிவோம்.

சா+ நித்தியம் என்று பிரிப்போமானால் --- சாவு நித்தியம் என்று பொருள்பட்டுப்
பிழைக்கும் என்பதறிக.

சாலவும் நித்தியமானதே சால நித்தியம்; சால் நித்தியம்:  > சானித்தியம்.
சாலுதல்: நிறைதல் சான்றோர்: நிறைந்தோர். 

இது சான்னித்தியம் என்றும் எழுதப்படுவதுண்டு.  தெய்வத்தின்முன்  என்பது இதன் வழக்குப் பொருளாகும்.  சொல்லமைப்புப் பொருள்: மிகுந்த நிறைவு அடைந்த நிலை என்பதாகும். திருமுன் என்பதும் பொருள்.

தெய்வம் தோன்றி நிறைவு தந்த நிலை. மாறாத இன்ப நிலை.

புதன், 1 ஆகஸ்ட், 2018

சொல்லுங்கண்ணே........

சொல்லுங்கண்ணே :

இந்தத் தொடரைப் பிரித்தால் இப்படி வரும்:

சொல்லும் + கண்ணே :    இது கண்ணே சொல்லுவாய் என்று பொருள் தரும்.

சொல்லுங்க  + அண்ணே :   இது அண்ணனாகிய நீர் சொல்லுவீராக என்று பொருள் தரும்.

காள மேகப் புலவர் என்ற பெயரில் " காள "  என்பது கருப்பு என்று பொருள் தரும்.  வேறு சொற்களில் சொல்வதானால்  கருமேகப் புலவர்;  புலவர் கார்முகிலார் எனலாம்.  15ம்  நுற்றாண்டினர்  என்று கருதப்படுபவர். கருமேகம் மழை தருவது.  இவர் அதுபோல் பாக்கள் தந்தவர் . இயற்பெயரா என்று தெரியவில்லை .

சொற்களையும் தொடர்களையும் பிரித்துப் பல்வேறு பொருள் போதரும்படி பாடுவது இவரது சிறப்பாம்.

சில+ எடு +ஐ =  சிலேடை :   ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் எடுத்தல்.  சில = ஒன்றின் மிக்கவை.

பெண்கள் அடிமைப்பட்டதும் விடுதலையும்.

பெண்ணாதிக்கம் அல்லது பெண்வழி  நிறுவாகம் நடப்பிலிருந்தது என்பதைத் தமிழ்மொழி காட்டுகிறது என்பதை முன்னரே நாம் குறித்திருந்தோம். இதைத் தெளிவாக ஆள்  என்னும் ஆட்சி குறிக்கும் சொல் விகுதியாகிப் பெண்பாலைக் குறிப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

பெண்ணடிமை மிக்குவந்த பிற்காலத்திலும் பெண்கள் தெய்வங்களாக்கப் பட்டுச் சென்றுவிட்ட அவர்களின் ஆட்சி ஒருவாறு நினைவு கூரப்பட்டது காண்கிறோம்.  ஆதிபராசக்தி, பராசக்தி, பல்வேறு தெய்வத் துணைவிகள்  ஆகியோர்  இதையே வலியுறுத்துகின்றனர்.  பெண் இல்லாமல் ஆண் தெய்வங்களும் இயங்கா என்பது தத்துவம் ஆகும்,

இதன் தொடர்பில் நீங்கள் படிக்கவேண்டிய  இடுகை:


இலங்கைப் புலவர்களும் பெண்ணடிமையை  எதிர்த்துள்ளனர்.  ஞானப்பிரகாச அடிகளின் மாணவர் ஆசிரியர் பண்டித  சேகரம்பிள்ளையாரின் ஒரு குறள் வெண்பா: 

சாதிசமம்  அக்கொடுமை தானெண்ணார் பெண்ணடிமை
ஆதிப் புதியஉல கார்

என்பது அதுவாகும்,  இதுவும் அவர் வெளியிட்ட  மாத  இதழ்தோறும் குறிக்கப்பெற்றது. (1938).  பெண்கள் விடுதலைக்காகப் பலர் குரல் கொடுத்தனர்.

பெண்களை இழிவுபடுத்திய வரிகள் மனுவில்(  மனுசாத்திரத்தில் )  உள்ளன. இவை பிற்கால இடைச்செருகல்களாக இருக்கலாம். இடைச்செருகல்களுக்குத் தப்பிய பழைய நூல்கள் எவையும் உளவா என்பது ஐயத்துக்குரியதே ஆகும்.

பெண்ணை ஆணின் விலாவிலிருந்து கடவுள் படைத்ததாக விவிலிய நூல் கூறியிருப்பினும்  வரலாற்றில் பெண்கள் குமுகாயத்தை வழிநடத்தினமை தெளிவே ஆகும்.  ஒரு முன் படைப்பின் உதவியின்றி எதையும் படைக்குமாற்றல் உள்ளவர் கடவுள்.

பிற்கால நூல்கள் அல்லது செருகல்கள் பெண்டிருக்குச்  சமயத் தலைமை அளிக்க மறுத்துவிட்டது.  ஒரு பிராமணப் பெண் பிராமண ஆடவனுக்கு இணையாக வைக்கப்படாதொழிந்தாள்.

ஆதிக்கடவுள் ஆதிபராசக்தியே ஆகும், இது மக்கள் மதக்கொள்கை.

பதி என்னும் சொல் பெண்ணை மணந்து அவள் இல்லத்தில் பதிவானவனையே  ஆதியில் குறித்தது. பின்னர் இச்சொல்லுக்குப் பொருள் உயர்பு ( ELEVATION ) நிகழ்ந்து  பதி என்போன் தலைமை உடையோன் என்ற நிலை உருவானது, ஒன்றில்  பதிவதென்றால் தனக்குப் பெரிதான ஒன்றில் பதிவதே ஆகும் என்பதுணர்க. தளத்தில் உட்பதிந்திருப்பவனே தளபதி.  பதி தலைவன் என்பது சொற்பொருளன்று; அஃது பெறப்பட்ட பொருளே.1

புதுமைக்கவி பிற்காலத்தில் மாதரை இழிவுபடுத்தும் மடமையைக் கொளுத்தினான்.

1  derived meaning.  Not etymological meaning.

Will edit.