திங்கள், 28 டிசம்பர், 2020

ஊரார்வீட்டு நெய்யும் பெண்டாட்டி கையும். அது கருணை.

 எள்நெய் என்ற சொல்லைத்தான் மக்கள் திரித்து உளைத்து ( = உச்சரித்து) எண்ணை என்று மாற்றிக்கொண்டனர்.  கொஞ்ச நாள் கடைக்காரர்களும் எண்ணை என்றே அச்சடித்துத் தம் புட்டிகளில் ஒட்டினார்கள்.  அது சரியன்று  என்று தமிழ்வாத்திமார் எதிர்த்ததனால் இப்போது மீண்டும் நல்லெண்ணெய் என்று எழுதத் தொடங்கினர். இதில் நமக்கொன்றும் உளைத்தல் ( வெறுப்பு )  இல்லை. நாம் இங்குக்  கண்டுகொள்ள விழைவது என்னவென்றால், நெய் என்பது ணை என்று மாறிவிடத் தக்கது என்பதுதான்.

ஓர் ஊரில் ஒரு மனைவி, அவள் கணவன் சாம்பாரும் சாதமும் சாப்பிடும் போதெல்லாம் அவன் நெய் கேட்டுத் தொந்தரவு செய்வானாம். அவனுக்குத் தினமும் வேண்டுமென்பதற்காக மனைவியானவள் கொஞ்சம்தான் சோற்றில் போடுவாளாம்.  மீண்டும் கேட்டால் அவளுக்குக் காது கேட்காது!  அடுக்களைக்குள் போய்விடுவாள்.

ஒருநாள் நெய் முற்றும் தீர்ந்துவிட்டது.  அடுத்தவீட்டில் போய் நெய் கேட்கவே, அந்த வீட்டுக்காரர்கள் நெய்யைப் புட்டியுடன் கொடுத்துவிட்டனர். நிறையவே இருந்ததாம்.  மனைவியானவள் அதைக் கொண்டுவந்து, அன்று தன் கணவனுக்குப் "போதும் போதும்" என்று சொல்லுமளவுக்கு நெய்யை உருக்கி ஊற்றினாளாம். அதே நெய்யில் வறுத்த முருங்கை இலைகளை வேறு அன்புடன் பரிமாற, அவற்றையும் சோற்றில் பிசைந்தபடி அன்றைத் தினம் நன்றாகச் சாப்பிட்டானாம்.

அப்போது அவ்வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு மூதாட்டியும் அங்கு வந்து சேர்ந்தாள்.  ' எப்படிச் சாப்பாடு?"  என்று அவள் வினவ,  "ஊரார் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்று சொல்லிக்கொண்டு, கணவன் எழுந்து கைகழுவ மகிழ்ச்சியுடன் சென்றானாம்.

தன் சொந்த நெய்யாய் இருந்தால் அது பாராட்டுக்குரிய நெய் என்னலாம். இது அடுத்தவீட்டு நெய்யாயிற்றே.  அது கருப்பு நெய் என்றுதான் சொல்லவேண்டும். பொறுப்பில்லாத மனைவி கருப்பு உள்ளத்துடன் கணவனுக்கு இட்ட கருநெய்.    இது  எள்நெய் எண்ணை ஆனதுபோல் கருநெய் கருணை ஆகி,  சாம்பார் சோற்றில் அதிகமாகவே கலந்துவிட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? கணவனுக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லாமல் போய்விட்டது.

கணவன்பால் மனைவிக்கு வந்த கருணைதான் என்னே!

கை என்ற சொல்லும் கர் என்று திரியும். இந்த இடுகையை வாசித்துக் கொள்ளுங்கள்.  கர்+ அம் = கரம். 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_12.html

அந்தப்பெண்டாட்டி தன் கரத்தால் பரிமாறிய நெய் ஆதாலால் அது  கைநெய் என்று பொருள்படும் கர்நெய் தான். கர்நெய் அப்புறம் கர்ணை,  கருணை  என்று மாறியிருக்கும்.  இந்த நிகழ்ச்சி மிகப் பழங்காலத்தில் நடந்ததனால் இதை உங்கள் ஆய்வுக்கே விட்டுவிடுகிறோம்.


தொடர்புடைய வேறு இடுகைகள்:

தனிமையில் கிடந்து இறந்தவர்கள் 

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_85.html

வீரியம்  https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_24.html

கைகேயி  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_15.html


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்



ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ப - சில சொற்களில் பரவற் கருத்து.

 ஒரு சிறுபிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, ஒரு சொல்லின் எல்லா எழுத்துக்களையும் வாசித்தபின்னரே அச்சொல்லின் பொருளை அப்பிள்ளை உணர்கின்றது. இதுவே வாசித்துப் பொருளுணர்தற்குப் பொருத்தமானது ஆகும். ஆனால் சொல்லின் ஆதிப்பொருளை அல்லது ஆக்கப் பொருளை உணரவேண்டுமானால்  -    அதாவது சொல்லாய்வில் ஈடுபட வேண்டுமானால் -  அதன் முதல் ஒன்றோ இரண்டோ எழுத்துக்களை நோக்கினால் அது புரிந்துவிடுகிறது. அது எப்படி என்று நீங்கள் கேட்கவேண்டும். ஏனெனில் நாம் காண முற்படுவது ஆதிப் பொருண்மையையே. சொற்களைப் பிறப்பித்தோர், ஓர் அடிப்பொருளை அடைந்தே சொல்லின் உருவாக்கத்தைக் கண்டறியத் தொடங்கினர் . மாறாக,  பெரும்பாலும் ஒரு சொல்லை முன்வைத்துக்கொண்டே அச்சொல்லின் தோற்றத்தை முழுமையாக அறிந்துவிட முடிவதில்லை.  ஒரு சொற்குடும்பத்தையே ஒருசேர நோக்கித்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

உலகில் பொருள்கள் பலவும் பல்வேறு உருவில் உள்ளன. சில உருண்டையாய் உள்ளன.  சில சப்பட்டையாய் ( இடப்பரவலாய்) உள்ளன. இன்னும் உருவங்கள் பல. இடப்பரவலாய் உள்ள உருப்பொருளும் உருவற்ற பொருளும் பற்றிய பல சொற்களும் பகரத்திலே தொடங்குதல் காணலாம்.  இதனைச் சில எடுத்துக்காட்டுகளால் நாம் உணரமுடிகிறது.

பரமன்   -  பர  -  எங்கும் பரவலாய் உள்ள ஆனால் காணவியலாத உலகாளும் ஒரு பொருள்.  [  பர என்ற இரண்டு எழுத்துக்களை அறிந்தவுடன் சொல்லின் ஆக்கம் தெரிந்துவிடுகிறது ]

பலகை -   பல  -   சப்பட்டை நிலையில் உள்ள ஒரு மரப்பொருள். இடப்பரவல். காரணம் ஆய்ந்தாலே தெரிகிறது.

பனி  -  பன் -  பரவலாக வான் தெளிக்கின்ற சிறு குளிர் திவலைகள்  

பலி    -   பல் -  ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைப் பலவிடங்களிலும் கொல்லும் முறை.  ( இடப்பரவலும்  செயற்பரவலும் காலப்பரவலும் )

 (ஆறிலும் சாவு, நூறிலும்  சாவு -  பழமொழி).இது காலப்பரவல்.

பரிப்பெருமாள் -  பரி -  எங்குமுள்ள பெருமாள். இடப்பரவல், காலப்பரவல்.

பர > பரி.  பரி என்பது குதிரையையும் குறிப்பதால் குதிரையில் வரும் பெருமாள் என்றும் கூறுதல் உண்டு. இது கடவுள் தன்மையை விளக்காமல் ஒருவாறு தொன்மப் பாணியை முன்வைக்கிறது.

பரிபாடை   பரவலாக பயன்படுத்தப் படும் பேச்சு.

பரணி -பர.  மேலே இடப்பரவலாக அமைக்கப்படுவது.

பார்  - பரந்த இவ்வுலகம்   (வியனுலகம்)

பார் (<   பர )

பஞ்சு  பறந்து ( பரந்து)  பரவும் மெல்லிய பொருள்

ப > பர் > பர > பார்.

பர் > பல்.

பல் > பன். இவ்வாறு அடிச்சொல்லும் திரியும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்பு.

பரந்தாமன்.

"   அத்துவித வத்து " என்ற தொடரைவைத்துப் பாடினார் தாயுமான சுவாமிகள். அத்துவிதமென்பதற்கு நேரடியான இன்னொரு தொடர்:  அத்வைத வஸ்து என்பதாகும்.கடவுள் வேறு மனிதனாகிய "நான்"  வேறு உணர்வோமானால் அது துவைதம் என்பர். 

கடவுளும் நான் என்னும் மனிதனும் ஒன்று என்போமானால் அது அத்வைதம்  ஆகும்.  இரண்டல்லாத ஒருமைநிலை அதுவாகும். இயேசு கூறிய நான் கடவுள் என்ற கொள்கை உண்மையில் நமது வேதங்கள் கூறிய அத்வைத (வேதாந்த)மே ஆகும். இக்கொள்கையை அவர் இந்தியாவிற்கு வந்து சொல்லியிருந்தால் யாரும் அவரைக் குறுக்கையில்* அறைந்திருக்கமாட்டார்கள் என்று நாம் திடமாகச் சொல்லலாம்.

கடவுள் பேரான்மா  அவர்போலவே அமைந்த  நாமோ  ஒவ்வொருவரும் ஒரு சிற்றான்மா.  கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாற்றல் அல்லது ஒன்றைச் செய்து உருவாக்கும் ஆற்றல் உள்ளோனாய் இருப்பதற்குக் காரணமே நாம் கடவுளிலிருந்து போந்ததே ஆம்.

கண்ணன் ஓர் அவதாரம் அல்லது தோற்றரவு என்பதே மகாபாரத நூல் கூறுவது.    இதையும் தாண்டி அவரே கடவுள் என்பது கருத்து. தாமே கடவுளும் ஆனவர் - பரந்தாமர்.

இப்போது பரந்தாமன் என்ற சொல்லை ஆய்வோம்.  இச்சொல்லில் பரம் என்ற சொல்லும் தாம் என்ற சொல்லுமிருப்பதால்,  அவர் தாமே பரம் ஆகிறார். பரம் என்பது கடவுள் எனற்பொருட்டு.  தாம் என்பது தாம் என்று நாம் பயன்படுத்தும் சொல்லே ஆகும்.  தாமே பரம் என்ற சொற்றொடர்,  பரம் தாம் என்று மாறி அமைந்தது. இது அன் விகுதி இணைந்து  பரந்தாமன் ஆகிற்று,  இஃது முறைமாற்று அமைப்பு.

பரம் + தாம் + அன் = பரந்தாமன் 

வேறு பொருள்:  பரந்த ஆகாயத்தில் உள்ளவர்.  பரந்த + ஆம்+ அர்.  ஆம் என்பது ஆகாயம் என்பதன் இடைக்குறை.  ஆகும் என்பதன் தொகுப்பும் ஆவது இச்சொல். அன். அர் என்பன ஆண்பால் பலர்பால் (உயர்வுப் பன்மை ) விகுதிகள்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 *  குறுக்கை -  சிலுவை என்பதற்கு இன்னொரு பெயர். இச்சொல்லுக்கு குறுக்கை என்பதை ஞா.தே, முதலிய அறிஞர் வழங்கினர்.  குறுக்கை என்பதன் பழைய பொருள் வேறு சில.