புதன், 23 டிசம்பர், 2020

அன் அடியில் இரு சொற்கள் அமைத்த திறம்

 அன் என்ற அடிச்சொல் இருவேறு சொற்களின் அமைப்புக்கு நிலைக்களனாய் மிக்க அழகாகப் படைக்கப்பட்டுள்ள தன்மையைக் கண்டு தமிழன் மகிழாமல் இருக்கமுடியாது. இதை அறிந்தபின் இதே புனைவுத் தந்திரத்தை இன்னொரு சொல்லமைப்பின்போது கையாண்டு திறனைப் பெருக்கிக்கொள்ளலாகாதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளத் தோன்றுமே.

சுட்டடிச் சொல் வளர்ச்சியில் அன் இன்றியமையாத சொல். அ, இ, உ என்பவற்றில் அ என்பது அங்குள்ள பொருளை அல்லது மனிதனைக் குறிக்கவருகின்றது. அங்கிருத்தலாவது இலக்கணத்திற் படர்க்கை என்று சொல்லப்படுவதாகும். மிகு எளிய சொல்லாகிய அவன் என்பதில் இக்கருத்து இலங்குகிறது. அவன் என்பது அ+ அன் என்று பொருந்தி,  இடையில் ஒரு வகர உடம்படுமெய் (வ்) இடைப்புகுந்து, அ+ வ் + அன் = அவன் ஆயிற்று.  அ என்ற சுட்டுமட்டும் இருமுறை வருகின்றது.   அ, அன் என்ற இரண்டு.  அ என்பது இடம்; அன் என்பது இங்கு மனிதனைக் குறித்தது. இதை வாக்கியமாக்க வேண்டின், அவ்விடத்து அம்மனிதன் என்று கூறி முடிக்கலாம்.

இப்போது உள்ள காலம் இன்று என்று அமைத்தனர்.  அ அன் அவன் என்று இனிதாய் அமைத்த தன்மைபோலவே,  இந்நாளைக் குறிக்க,  இ என்ற சுட்டிலிருந்து  இன்+ து > இன்று என்று அமைத்தனர்.  பேச்சு வழக்கில் இன்று என்பதில் அமைந்த தகர ஒற்றை நீக்கிவிட்டு, இன்+ உ > இன்னு என்றனர். இதை வாக்கியப்படுத்தினால் இந்த நாள்,  ( இன் ) நம் முன் உள்ளது ( உ ) என்றவாறு  அழகாக வருகிறது.

இப்போது உள்ள காலம் இன்று ஆதலால் அப்போது உள்ள காலம் அன்று ஆகவேண்டுமே.   அங்குள்ள என்பதற்கு  அன் என்றும் து விகுதியை இறுதியில் வைத்தும் அன் + து >  அன்று என்ற சொல்லை உருவாக்கினர்.  பேச்சுவழக்கில் இன்னு என வந்தமை போலவே  அன்று என்பது அன் + உ > அன்னு என்று வந்தது.  எழுத்து மொழி "திருந்திய மொழி" என்று கருதிக்கொண்டு அக்கால மனிதர்களால் அமைக்கப்பட்டது. ஒலிகளால் அமைந்த மொழி எம்மொழியாயினும் திருத்தம் பெற்ற மொழி என்பது ஒரு கருத்தமைவு அல்லது  அபிப்பிராயமே ஆகும். இயற்கையாய்க் கருதுவதானால்,  திருந்தியது என்று ஒன்றுமில்லை.  இன்னு என்பது இன்று ஆகினால் ----அப்போது உள்ளவர்கள் "இன்று" எனச் சொன்னால்----- கேட்க நன்றாக உள்ளது என்று எண்ணினர்.  அவ்வளவுதான். மரபின் காரணமாக நாமும் அதைத் திருத்தமான சொல். என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். சொல்லில் திருத்தம் என்று ஒன்று இல்லை. கருத்தமைவில் ஏற்புடையதாய்ப் பெறப்பட்டது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். Many a time, it is an opinion; there is nothing factual about it.

சென்ற நாளைக் குறிக்க " அன்று " என்னும் அழகிய சொல்லைப் புனைந்த மனிதன்,  அது ஒரு நீண்ட கால ஓட்டத்தில் முடிந்துவிட்ட காலத்தைக் குறித்தது என்று உணர்ந்திருந்தான்.  ஆயின் இன்று உள்ள நேர நிலையின் விளிம்பு என்பதைக் குறிக்க ஒரு சொல் தேவைப்பட்டதை உணர்ந்தான். மீண்டும் அன் என்ற சொல்லை எடுத்தான்.  து என்ற விகுதியை மீண்டும் எடுத்து அன் + து என்று பூட்டினான். ஆனால் அது மீண்டும் அன்று என்று முடிந்த நாளையே குறிந்த்தது.  அந்தக் குறையைப் போக்க,  இன்றைய நாள் என்று வருவித்துக்கொள்ள,  இ என்ற சுட்டினை இணைத்துக்கொண்டான்.  அது அன்+ து + இ =  அந்தி ஆகிவிட்டது. மீண்டுமோர் அழகிய சொல் கிடைத்தது.

ஒரு நாள் முடியும் நேரத்துக்கு,  முடிதல்தான் அந்தி. இந்தப் பொருள் ஊட்டப்பட்ட பொருண்மையாகும்.  ஊட்டப்பட்டதால் அது அருத்தம் ( அருந்து + அம் = அருந்தம்  அருத்தம்  அர்த்தம்)..  சொல்லின் உள்ளுறு பகுப்பில் அந்தப் பொருள் இல்லை. நாளின் முற்றுநிலையைக் கருதிக்கொண்டு சொல்லை அமைத்தபடியால் அது அந்த நாள்முடிவைக் குறிக்கலாயிற்று.  காரணக் காலப் பெயராய் அது மலர்ந்தது.  அன் + து + தல் >  அன்றுதல் என்பது முடிதலைக் குறிக்க வழக்குப் பெற்றது. தாள் முதலியவற்றைக் கடித்து அதைக் கெடுக்கும் பூச்சிக்கு " அந்து" என்ற பெயரும் வந்தது. அன்றுதல் என்ற முடிதல் குறிக்கும் "திருந்திய" சொல் அமைந்துவிட்டதால், " அந்துதல்" என்ற பேச்சுமொழி இணை ஏற்படவில்லை. ஆனால் அந்து + அம் = அந்தம் என்ற சொல் அமைந்து ஒருவாறு சமநிலையைக் காத்தது.  அன்+ து + அம் =  என்பது இன்னொரு வகைப் புணர்ச்சி விதிப்படி அமைந்து சொற்பெருக்கத்தினை விளைத்தது.

அந்தி என்பதும் அழகிய தமிழ்ச்சொல் ஆயிற்று.

"அந்தி சாயுற சேரம், வந்தாரைத் தேடி ஓரம் "  --  என்றான் ஒரு கவி.

"ஏடி ஒளி முகத்தாளே அந்தி "  என்றான் இன்னொரு கவி.

"அந்திப் பெண்ணாள்" என்றான் இன்னொருவன்.

அன்+ து = அன்று.

அன் + து = அந்து.

அடியும் விகுதியும் ஒன்றுதான்.  இருவேறு வடிவங்கள் வந்து மொழியின் வளம் ஆர்ந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



 




செவ்வாய், 22 டிசம்பர், 2020

அண்டிரண்டு பட்சி

 நம்மிடம் உள்ள கதைகளில் சிலவாவது அகவை குறைந்த அருங்கனிக் குழந்தைகளிடம் அவர்களில் சிலர் உண்டாக்கிய கதைகளாக இருந்து, பிற்பாடு அவை கற்பனையும் கேட்டுமருள் தன்மைகளும் ஊட்டப்பெற்று வயதுமிக்கப் பெரியோரிடமும் பெருமிக்கும் *1 வண்ணமாக வழங்கத் தலைப்பட்டவையாய் இருக்கவேண்டுமென்பதைச் சிலர் ஆய்ந்து கருத்துகள் வழங்கியிருக்கலாம். ஆனால் அவை நம்மை எட்டவில்லை.

அவற்றுட் சில தெய்வ நம்பிக்கையுடன் விரவி,  ஆய்வுரி நிலையினின்றும் எழுந்து தொடாமைத்திறம் அடைந்துவிட்டனவாய் இன்றிருத்தல் கூடும். அவற்றை யாம் ஈண்டு கருதாமை அறிவுடமையாகும்.

ஆயினும் அண்டிரண்டு பட்சிகள் பற்றிய கதை அவற்றுள் இன்னும் கருதற்குரித்தாகவே உள்ளது.  உலகிற் சிலவிடத்து வானிலிருந்து வந்து இறங்குவன இப்பட்சிகள் என்றும், காட்சிக்கு மருட்சி விளைக்கும் தகையனவாய் அவை விளங்குமென்றும் கூறுவர்.  இக்கதை கேட்ட சிறுவர், தாம் வளர்ந்துவிட்ட நிலையில் அவற்றை மறந்துவிடுதல் பெருவரவாகும்.

இப்போது " அண்டிரண்டு" என்ற சொற்றொடர் காண்போம்.

இதை அண்டு இரண்டு என்று பிரிக்க.

இது வினைத்தொகை.  அண்டும் இரண்டு பட்சிகள் என்று விரிக்கலாம்.

ஒன்றை ஒன்று அண்டும் இரண்டு பறவைகள்,  உண்மையில் காதற்பறவைகள். இவற்றை உருவிற் பெரியன என்று கற்பித்து,  ஒன்றாக வந்து இறங்குவன என்று கூறினமை,  இவைபோலும் காதலாய்க் கூடித்திரியும் பறவைகளை சிறு குழந்தைகள் காணாமை வேண்டும், அப்போது ஒழுக்கம் கெடாது வாழ்வர் என்ற கருத்தினடிப்படையில் கதையின் சிறப்பியல்புகளைக் கூட்டியுள்ளனர் என்பதன் உண்மை புலப்படுகின்றது.

எனவே அண்டு இரண்டு என்பது அண்டும் இரண்டே ஆகும்.

குறிப்புகள்

*1 பெருமிக்கும் -  பிரமிக்கும், கண்டு பெரியதாய் வியக்கும்.

*2 https://sivamaalaa.blogspot.com/2017/02/bird.html பட்சிபற்றி.

*3 பகு+இ = பக்கி.  ககரம் இரட்டிப்பு.  பக்கி> பட்சி. க்ஷ = ட்ச. எனினுமாம்.


மெய்ப்பு பின்.



ஞாயிறு, 20 டிசம்பர், 2020

பாரியையும் பர ஐயன் மொழியும்.

 கூரிய வெயில் காயும் இடங்களில் வாழ்வோர் நாளடைவில் சீரிய கருநிறத்தோர் ஆகிவிடுகின்றனர் என்று அறிவியலாளர் நமக்கு அறிவிக்கின்றனர். குளிர்வாட்டும் நிலப்பகுதி வாழ்நர் பளிச்சென்ற பாங்கான வெண்ணிறமுடையாராய்க் கவின் காட்டுகின்றனர். இங்கிருப்போர் அங்குச் சென்று புதிய உறைவிடம் புகுதலும் அங்கிருப்போர் இங்குவந்து மங்காத மாண்புறு வாழ்வின் வைகுதலும் உலகில் எந்நாட்டிலும் பலகாலும் காண்புறுமொரு நற்காட்சியே  ஆகும்.   ஆனால் ஆரியர் என்றொரு மக்கள் இவண் வந்தேறினர் என்ற தெரிவியற் கருத்து ( theory )  ஒரு வெற்றுத் தெரிவியலே அன்றி அதற்கு உரிய சான்றுகள் கிட்டிற்றில என்பதே உண்மையாகும்.  சமத்கிருத மொழியினிற் சொல்லாய்வு செய்து அதிற் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளமையினால் ஆரியமக்களென்பார் புலப்பெயர்வும் கலப்புறவும்  நடைபெற்றன வென்பது ஆதாரமற்றதாகும்.  ரோமிலா தாப்பார் முதலிய வரலாற்றறிஞரும் இப் புலப்பெயர்வுத் தெரிவியலை ஏற்றுக்கொள்ளவில்லை.

சமஸ்கிருதமென்பது வெளிநாட்டு மொழியன்று.  அம்மொழிக்கு வழங்கிய பண்டைப் பெயர்களும் தமிழிலிருந்து அமைந்த பெயர்களே.  சமஸ்கிருதமென்பது ஒலிச்சிறப்பு மிக்க மொழி.  அதற்குப் பலபெயர்கள் வழங்கி மறைந்துள்ளன. அதற்குச் சந்தமொழி என்று பொருள்படும் சந்தாசா என்ற பெயர் வழங்கியது.  அது  சந்த அசைவு*1 என்ற தமிழ்ச் சொற்றொடரின் மூலம் ஏற்பட்ட பெயராகும்.  சமஸ்கிருதமென்பதும்  சமைந்த ஒலி என்று பொருள்தரும் சொற்றொடரிலிருந்து பெறப்பட்டதாகும். சமை > சம.   கதம்.> கிருதம்  ( கதம் என்பது ஒலி எனற்பொருட்டு.  கத்து >  கது > கது அம் > கதம். அதற்குமுன் வழங்கிய மொழிகள் பாகதங்கள்.  பா என்பது பர என்பதன் முதல் நீண்ட சொல்.  கதம் என்பது முன் சொல்லியதே.  பர > பார் > பா கடைக்குறை எனினுமாம். நானிலம் எனப்பட்ட பண்டைத் தமிழ் நிலப்பகுதிகளும் ஒன்றில் வைகாது எல்லா நிலங்களிலும் பரவலாக வாழ்ந்த பரையர் என்ற பறையர் வழங்கிய மொழி. இவர்களே ஆதிப்பூசாரிகள்.  இராமாயணம் பாடிய முந்து கவியாம் வால்மிகி என்னும் பெரும்புலவனும் அம்மொழியின் இணையற்ற புலவன்.  அம்மொழியின் முந்து அமைப்புக்கு உந்தும் இலக்கணம் அமைத்த பாணினியும் பரவலாக வாழ்ந்த கூட்டத்துப்  பர ஐயனே. மனுநூலை வரைந்த ஆசிரியனும் ஒரு திராவிட அரசனென்ப.  ஆரியன் என்று இன்று கூறப்படும் "பிறமண்ணான்" .  என்று கருதப்படுவோன் அல்லன். எந்த ஆரியன் என்பானும் எந்த முதன்மை  நூலையும் இயற்றவில்லை.  வியாசன் மீனவன்.   எப்படி வெள்ளைக்காரன் ஆரியர் எழுதியவை என்று இந்த நூல்களைச் சுட்டினான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

சமஸ்கிருதமென்பது தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பண்டை நாட்களில் பண்படுத்தப்பட்ட மொழியென்று அறிஞர் கா.  அப்பாத்துரைப் பிள்ளை தம் ஆராய்ச்சி நூலில் வெளியிட்டிருந்ததும் மறக்கலாகாது.

சமத்கிருதமென்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் சொற்கள் பல தமிழ் மூலங்கள் உடையவை என்பது இங்கு நிறுவப்பட்டுள்ளது.

இந்து என்ற சொல் சிந்து என்ற  சிறு நூல்வகையைக் குறிக்கும் என்றும்  அந்நூலால் ஆன துணி பண்டமாற்றுச் செய்யப்பட்ட இடமான ஆற்று நிலப்பகுதி குறிக்குமென்றும் வரலாற்றசிரியர் கண்டுபிடித்துள்ளனர் என்பதை அப்பாத்துரையாரே கண்டெழுதியுள்ளார்.  எம் நினைவில் அது தென்னாடு என்ற நூலில் உள்ளது. தென்மொழி என்ற அவரே எழுதிய நூலையும் படித்தறிக. கோவிட்19 காரணமாக இந்த நூல்கள் இப்போது எம் வசமில்லை. சிந்து மொழி என்பதோ திராவிட அல்லது தமிழின  மொழிகட்கு நெருக்கமானது.  இதை முன்பு இங்கு வெளியிட்டிருந்தோம்.

இனி மனைவியைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள நம் இடுகைகளில் காண்க.  அவை வருமாறு:

பாரியை என்பதன் திறப்பொருள் : https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_30.html

பாரியை  https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_6.html

வாழ்க்கைத் துணை https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_47.html

இவற்றைப் படித்துத் தமிழ் மூலங்களை உணர்க. சமஸ்கிருதமென்பது ஆரிய ர் மொழியன்று என்பதையும் உணர்ந்துகொள்க.  ஆனால் கல்வி கலைகளினால் பெயர்பெற்ற உயர்ந்தோர்தம் மொழி. இவர்கள் இனத்தால் உயர்ந்தோர் அல்லர்.  அறிவால் உயர்ந்தோர்.  ஆர் என்ற உயர்வு குறிக்கும் தமிழ் விகுதியும் ஆர்தல் என்ற வினைச்சொல்லும் இனக்குறிப்புகள் அல்ல. பிராம்மணர் சூழ்ச்சி ஏதுமில்லை. சாதிகள் என்பவையும் தமிழர் நிலம் நான்கென்பதால் விளைந்தவை.  சாதிகள் என்ற பாகுபாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பின்னாள் ஒட்டு ஆகும். இவ்வேற்றத் தாழ்வுகள் சாதியாக்கத்தின் உடன்விளைவுகள் அல்ல. சாதி என்பது கடல்வாழ் உயிரினங்கட்கு ஏற்பட்ட குறிப்பு. "நீர்வாழ் சாதி" என்கின்றது தொல்காப்பியம். சார்தல் - வினைச்சொல். சார்பு:   சார் >  சார்தி > சாதி. (ஜாதி வேறு சொல்).

வான்மிகி பாடிய சங்கப் பாடலொன்றும் உள்ளது.  அவர் இன்னொரு வான்மிகி என்பது கற்பனை. பாத்திரப் படைப்புகளில் தமிழ் மூலங்கள் உள.  எ-டு: விபீடணன் < வி( ழு ) + பீடு + அண(விய) + அன் = விபீடணன் > விபீஷணன். விழுமிய பீடினை அணவி நின்ற பெரியோன்.. கைநீட்ட முடியுடையாள்:  கை+ கேச(ம்) + இ > கைகேயி. இரா + வண்ணன் > இராவணன்.

அறிக .நோயினோடு அணுக்கம் தவிர்க்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


குறிப்புகள்

*1  சந்த அசை -  https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_13.html

மற்றும்  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_6.html.