வியாழன், 7 ஆகஸ்ட், 2014

செல்வம்

செல்வம் என்பது மிக அழகான தமிழ்ச்சொல். தமிழ்ச் செல்வி, செல்வ குமாரி என்பன போலப் பெயர்கள் பல, இட்டமுடன் நான் அணுகும் நற்பெயர்கள் இவை. இட்டம் என்றால் மனத்தை அதன்பால் இடும்படிக்கு அமைந்தவை. இடு+அம்.

அது நிற்க:

செல்வம் என்பது  நிலையாது என்கின்றனர்.  நெல்லை அப்படியே வைத்திருந்தால் பூச்சிகள் வண்டுகள் எல்லாம் வந்து நிலையாமையை உணரச் செய்து விடும்.என்னதான் செய்வது? தானம் செய்துவிட வேண்டும். மற்ற மனிதர்கள் ஊணாகக் கொள்வர் அல்லரோ?  கடவுள் படைத்த பூச்சிகளுக்குத் தர மனிதன் ஒப்பான். இந்தத் தொல்லைகள் இல்லாமல் நெல்லை விற்றுப் பணத்தை இருப்பகத்தில் இட்டுவிடலாமே. பனத்தைக் கண்டுபிடித்தது நிலையில்லாத செல்வத்தைச்  சற்று   நிலையுள்ளதாக மாற்றுவதற்குத் தான்.  பூச்சிகளையும் கடவுளையும் ஏமாற்றும் செயலா...?

கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றாகிய செல்வத்துக்குப்பெயர் ஏற்பட்டது அது செல்லும் தன்மை கொண்டது என்பதால்தான்.   செல்லும் ‍‍ கையைவிட்டுச் சென்றுவிடும்.

செல்>  செல்வு > செல்வம்.

அது சென்றுவிடும் தன்மை உடையது என்பதால் ஏற்பட்ட சொல்.
சொல்லாராய்ச்சி செய்தால் இந்த  நலமற்ற பொருண்மைகளெல்லாம் வெளிப்படும். பின் செல்வம் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம் இந்த நிலையாமைக் கருத்து மனத்துக்குள் வந்துவிடும்.  வரக்கூடாது.  கண்டிப்பாக வரக்கூடாது.  சொற்பிறப்புப் பொருள் வேறு.   அதன் இன்றையப் பயன்பாட்டுப் பொருள் வேறு.

எந்த மொழிக்கும் அதன் இன்றைய வழக்கு முதன்மையும் முன்மையும் உடையதாகும்.

தேகம் என்ற சொல்லைப் பற்றிய ஆய்வு  இடுகை காண்க. அதுவும் செல்வம் போன்ற கருத்திலிருந்து தொடங்கிய சொல்தான். தேய்தல் கருத்து.
  

கருத்துகள் இல்லை: