திங்கள், 23 செப்டம்பர், 2024

தென்றல் வந்தது

 உனைக் காணவில்லை

அணி  பூணவில்லை

அணுகி நீவந்து  தொட்டாய்.


பணி மாறவில்லை

நலம் சோரவில்லை

தனியே நீ கூடிவிட்டாய்


குரு  விகள் குறுகுறு

புற   வுகள் பறபற

ஒலிகளில் யானறிந்தாலும்


வருவதன் முன் அறி

தருவது  நெஞ்சினைக்

குறுகிய தொரு நிலை  கலையே. 


சூழ்ந்தனை முழுமையும்

ஆழ்ந்தனை மேனியுள்

வீழ்ந்திடு களைப்பினைக் களைந்தாய்


வாழ்ந்திடும் புள்ளிசை

வளர்ந்திட அள்ளினை

தளர்ந்திடும் குருவியுள் துளிர்த்தாய்

( ஒரு விடுகதை போல் எழுதப்பட்டிருந்தாலும் தலைப்பினாலிது தெளிவாகிவிடும். கொஞ்ச விளக்கம் தான் தரப்படுகிறது)

தென்றல் வந்தபோது யான் சட்டை அணிந்திருக்கவில்லை. தென்றலும் தயங்காமல் என்னைத் தொட்டுக் கிளர்ச்சி செய்ததை இக்கவி கூறுகிறது. 

புள்ளிசை குருவிகளில் பாட்டு

"அள்ளினை"   -குருவிகளைக் கொள்ளை கொண்டது: 

துளிர்த்தாய் - குருவிக்குள் சென்று மேல்வந்தது.

உடலுக்குள்ளும் சென்று களைப்பினை மாற்றியது.

நான் மேல் உடை அணிந்திருக்காவிட்டாலும் உன் வேலை மாறவில்லை என்பது கவிதை.

நெஞ்சினுள் குறுகியது -  உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

குறுகியது - வந்தது என்பதுமாம்.

அறிக மகிழ்க.

கருத்துகள் இல்லை: