செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

மொழி என்ற பொருளுடைய இன்னொரு சொல்.

 வாணி  என்பதற்குப் பல பொருட்கள் உள்ளன.  அவற்றைக் கண்டுவிட்டு மேல் செல்லுவோம்:

1  அம்பு என்னும் பொருள்.  இஃது உண்மையில் பாணம் என்ற சொல்லுடன் தொடர்புடையது.   பாணம் -  வாணி என்று திரிவது  ஆகும்.   அம் விகுதி ஈற்றில் பெற்று முடியும் பாண் என்ற அடிச்சொல்,  வாண் என்றும் திரிதலுடையது ஆகும். வாணென்று திரிந்து அம் விகுதியைப் பெறாமல் இ என்னும் இறுதியைப் பெற்று வாணி என்று முடிகிறது,  இதற்கு ஒப்பு  நோக்க,  பகு -  வகு என்ற சொற்களைப் பாருங்கள்.  இன்னும் ஒரு   காட்டு வேண்டின்  பண்டி -  வண்டி என்பதும்  கொள்க. பண்டி எனற்பாலது பாண்டி என்றும் திரிந்து வண்டியையே குறிக்கும்  எனினும் இந்தச் சொல்வடிவம் இப்பொருளில் தற்காலத்து  எழுத்தாளர்களால் எழுதப்படுவது இல்லை.  இரண்டு ஈறுகளிலும அம், இ என்பன களைந்துவிட்டு, பாண் -  வாண்  என  அடிகளை மட்டும் ஒப்பு நோக்குக.


2  ஓமம் என்ற பொருள்.    இக்காலத்தில் இப்பொருளும் வழக்கில் இல்லை. இது யவணி என்ற சொல்லின் திரிபு என்பர்.


3  பாணி என்ற சொல்லும் திரிந்து வாணி என்றாகும்.  பாணி என்பது  நீரைக் குறிக்கும்.  நாம் புழங்கும் அல்லது மழையாகப் பெய்யும் நீர்,  பல்  துளிகள் ஆகும்.  பல்நீர் > பன்னீர்>  பனி >  பாணி என்னும் திரிபில் வருவது இச்சொல்.  பஃறுளி  என்னும் யாற்றுப் பெயரை  நினைவு கூர்க.  பாணி : இதுவும்   திரிசொல்.

4  வாணி என்பது கல்லுப்பையும் குறிக்கும்.

இறுதியாக,  வாணி என்பது  சொல், மொழி ,  பேச்சு என்ற மூன்றையும் குறிப்பதுடன்,  கலைமகள் என்றும் பொருள்தரக் கூடிய சொல் ஆகும்.  இப்பொருளில் இன்றும் இச்சொல்  வழங்கி வருகிறது.

இங்கு கூறப்பட்ட இறுதி மூன்று பொருளும்  வாய் என்பதிலிருந்து தோன்றியுள்ளது.   வாயில்  அல்லது அவண் உள்ள நாவில் நிற்பன இம்மூன்றும்..  வாய் +  நி >  வாணி என்று இச்சொல் மருவி அமைந்துள்ளது,  நி என்பது நிலை என்பதன் கடைக்குறையாகும்.   வாய்நி >  வாணி என்று உணர்க.  இது  பழம்நீ >  பழனி  என்பதுபோலும்  ஒரு திரிபு,

அறிக மகிழ்க

,மெய்ப்பு  பின்னர்.



கருத்துகள் இல்லை: