ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கோலுதல், கோலிவருதல். அடிகோலுதல்.

கோலுதல் என்ற சொல்லையும் அதன் பல்வேறு பொருட்சாயல்களையும் அறிந்து இன்புறுவோம்.  

பண்டைக் காலங்களில் ஒருவன் ஒன்றை இன்னொருவனிட மிருந்து  வேண்டு மென்று எண்ணினால், அதைச் சுற்றுவட்டத்தி லிருந்துகொண்டு கேட்பான். கேட்பவன் சண்டைக்கு வருகிறானா அல்லது வேறு எதுவும் ஒரு காரணத்திற்காக வருகிறானா என்று தெரியாதநிலையில் இது முதன்மையான கேள்வியாகும்   இணங்கிவாழ்தல் முதலிய ஆகுநெறிகளைக் கண்டுகொண்டபின் இந்த நிலையில் தளர்வு ஏற்பட்டிருக்கும்.  ஆகவே கோலிநிற்றல், கோலிவர நிற்றல், அடிகோலுதல் முதலிய சொற்கள் அன்று தெரிவித்த பொருளும் இன்று நாமறியும் பொருளும் சற்று வேறுபடுமென்பது உணரத்தக்கது ஆகும்.  வாங்குதல் என்ற சொல்லும் வளைந்து நின்று பெறுதல் என்றுதான் பொருள்படும்.  அடிக்கவந்தவன் தான் நிமிர்வு காட்டுவான் என்பது அறிக.  இருநூற்றாண்டுகளின் முன் ஆய்வாளர்கள் இவ்வளவு ஆழமாகச் சொற்களை உணர்ந்துகொள்ள முற்படவில்லை. "  வாங்குவில் ( தடக்கை வானவர் மருமான்" ) என்ற இலக்கியத் தொடர்,  வளைந்த வில் என்று பொருள்படுவது காண்க.   வாங்கரிவாளென்ற சொல், வளைவான அரிவாள் என்று பொருள்தருவது,  இற்றைநாளில்  வாங்கு என்ற சொல்லிலிருந்து  வளைவுக்  கருத்து ஓரளவு அகன்றுவிட்டது.   ஆகாரம்  (ஆ)  என்பது ஏகாரமாகவும் திரியும், எடுத்துக்காட்டு:  வாங்குதல் -  வேங்குதல். வா என்னும் எழுத்தும் வளைந்தே உள்ளது.  இதற்குள் நாம் செல்லவில்லை.

அணையின் மூலமாக நீர்வரவு ஒழுங்குசெய்தலை  "அணைகோலுதல்"  என்ற வழக்கு உண்டென்று தெரிகிறது.  வெள்ளத்தை எதிர்ச்செறித்தல் என்பது ஏற்கத் தக்கது என்பர்.

அடிகோலுதல் -  அடிப்படைகளைத் தயார் செய்துகொண்டு ஒன்றைத் தொடங்குதலை அடிகோலுதல் எனலாம்.

நாலு திருடர்களும் கோலிவர நின்றார்கள் எனில்,  சூழ்ந்து நின்றார்கள் என்று பொருள்.

கோலுதல் என்பதே பின் கோருதல் என்று திரிந்தது. கோருதலாவது கேட்டுப்பெற முனைதல்.  எ-டு:  சம்பளப்பாக்கியைக் கோருதல்.  ஓர் ஆடவனின் நேசத்தை விழைதலையும்  " கோருதல்"  என்னலாம் என்பது,   " பாரினிலே என் கோரிக்கையே பலித்தது இந்நாளே"  என்ற  கவி இலட்சுமணதாசின் பாடலிலிருந்து தெரிகிறது.  கோருகை என்பது கோரிக்கை என்று  திரிந்தது. வேடத்தினால் மறைந்துகொண்டு ஆடுதலை  வேடிக்கை என்றனர்.  வேய் வேடு   என்பன தொடர்புடையன.  வேடுகட்டுதல்என்பது பானைவாய் கட்டுதல்.    மனிதன்  இவ்வாறு கட்டிக்கொள்ளுதல்  வேடம் ஆனது. பறவைகளைப் பிடிப்பவன் இவ்வாறு தன்னை மறைத்துக்கொண்டு பிடிப்பதால்  அவனும் வேடன் எனப்பட்டான்.  வேய் இடு அல்லது வேய் உடு என்பனவற்றின் திரிபு இவை.  நாயை வைத்து வேட்டையாடுகிறவன்  நாயிடு அல்லது நாயுடு என்று பிறர்கூறியதும்  காண்க. மாடு வளர்த்தல் போல் நாய் பழக்குதலும் வேட்டை யாடுதலும் செய்தோர்  முதலுடையவர்கள் ஆயினர்.  வேய் இடு திரிந்து அல்லது குறுகி வேடு  ஆகும்.  டு என்பது வினை ஆக்க விகுதி என்பது முன்னர்க் கூறப்பட்டது,   கோரி இருக்கை >  கோரிக்கை எனக் குறுகும்.  வேடு இடுகை > வேடிடுகை > வேடிக்கை.    வேடு இடுக்கை > வேடிக்கை என்று திரிதல் கூடும்,  அதாவது வேடு இடுக்கிக்கொள்ளுதல்.  இடுக்கு +  ஐ > இடுக்கை.

கோலி வருதல் என்பதோ இப்போது அருகியே வழங்குகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.




கருத்துகள் இல்லை: