சனி, 23 ஏப்ரல், 2022

ஆயிரம் என்ற சொல்லின் அருமையும் அடைவும்.


ஆ என்று மனிதன் வாய்பிளந்து நோக்கும் பல பொருள்களும் உண்மையில் மிக்க விரிவுடையனவே.  இதனை மெல்லச் சிந்தித்து   ஓய்வாக இருந்து எண்ணி அறிந்தாலே  முடியும்.  எம் பரிந்துரை யாதெனின்  பெரிதும் தனியாய் இருந்து சிந்திக்க வேண்டும்.  தோன்றும் கருத்துக்களைப் படம்பிடிப்பதுபோல் எழுதி வைத்துக்கொண்டு சிந்தித்து முடிவு செய்யவேண்டும்..  

காயம் என்ற சொல் தொல்காப்பியர் கால முதல்கொண்டே தமிழில் உள்ளது.  காயம் என்றால்,  சூரியன்,  நிலா,  உடுக்கள் முதலியவை " காயும் இடம்.  அதன் விரிவை உணர்த்த,   அது பின்  ஆகாயம் என்று விரிக்கப்பட்டது.   ஆ + காயம் > ஆகாயம் என்பதுதான் சொல்.   ஆஹாய, என்பதில்லை.  ஆஹாய என்பது திரிபு  ஆகும்.

மேல் விரிந்த வானமான இடத்துக்கு   ஆ+ காய என்று பெயர் அமைந்தது போலவே,  கடலுக்கும்   ஆழி   என்று பெயர் வந்தது.    ஆ>  ஆழ் > ஆழ்தல் என்ற வினைச்சொல் தமிழில் மிக்க இயற்கையாக அமைந்த சொல்..


ஆயிரம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர்கள் எப்படி அறிந்தனர் அல்லது அமைத்துக்கொண்டனர்?


தாமே அமைத்தற்குத் திறமோ அறிவோ முயற்சியோ இல்லாதவிடத்து, அல்லது அமைத்துப் பயனோ பயன்படு தருணங்களோ இல்லாதவிடத்து, அல்லது குழப்பம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுமிடத்து அமைக்கமாட்டார்கள். அங்கனம் இல்லையாயின் அமைத்திருப்பர்.


காட்டிலோ, கரையிலோ காலங்கழித்துக்கொண்டிருந்த முந்தியல் மாந்தனுக்கு, ஆயிரமென்பது ஒரு பெருந்தொகையே. பத்தும் நூறும் அறிந்தபின்பே அவன் ஆயிரத்தை எட்டமுடியும்.


ஒன்றை அறிந்து பழகியபின் இரண்டு அறிந்தகாலை அவன் அதைப் பெரிது என்று கருதினான். இரு என்ற சொல்லுக்கு இன்னும் பெரிது என்ற பொருள் தமிழில் இருக்கிறது.

இம்மாம்பெரிது  என்று கூறுகையில்  "ஈ"  வந்துவிடுகிறது..  இரு என்பது பெரிது என்று பொருள் தந்ததில் என்ன வியப்பு?  


ஒன்பதின் பின் பத்து என்பது பலவாகத் தெரிந்தது. அங்கனமே பொருள்படுஞ் சொல்லை அவன் அதற்கு ஏற்படுத்தினான்.


ஆயிரமென்பது ஆகப் பெரிதாகத் தோன்றிய எண்.
ஆ = வியப்பும் குறிக்கும் சொல். ஆக என்பது இறுதியும் குறிக்கும்.
இரு= பெரியது.
அம் : விகுதி.
இச்சொல்லின் பொருளும் “ ஆகப் பெரிது” என்பதுதான்.
ஆ+ இரு + அம் = ஆயிரம்.
ஆ என்று வியத்தகு பெரிதாய ஓர் எண்.
இலக்கம் கோடி என்பன கண்டகாலை, ஆயிரம் சிறிதாகிவிட்டது.


கருத்துகள் இல்லை: