வியாழன், 28 நவம்பர், 2019

ரோகியுடன் சில சொற்கள்

இன்று "ரோகி" என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

மனிதன் "உறுகின்ற"வற்றுள் முதன்மையாக வெறுத்து ஒதுக்கற்குரியது நோய் என்று சொல்லலாம். இதற்குக் காரணம் நோய் என்பது முற்றினால் உயிரிழப்புக்கு இட்டுச் சென்றுவிடும்.  அப்புறம் அம்மனிதன் உலகின்கண் இலனாகி விடுவதால் நோய் அஞ்சத்தக்கது. நல்லவேளையாக நோய் நீங்கி வாழ மனிதன் பல்வேறு சிகிச்சைகளைக் கண்டுபிடித்துள்ளான். சிகிச்சையாவது சீர்படுத்திக்கொள்ளுதல்.   சீர்ச்சை > சிகிச்சை.  சீர்ச்சை சிகிச்சை என்பவெல்லாம்  "சீர் செய்" என்பதன் திரிபுகளே.   ஆதலின் இவை திரிசொற்கள்.

செய் என்பது சை எனத் திரியும்.  எடுத்துக்காட்டுகள்:

செய்கை >  சைகை.
பூ செய் > பூசை.  (>பூஜை).
நன்செய் >  நஞ்சை
புன்செய் >  புஞ்சை
தண்செய் > தஞ்சை  (ஊர்ப்பெயர்).

சீர் என்ற சொல்லும் சொல்லிறுதியில் சி என்று குறுகிவிடும்.

வன்சீர் >  வஞ்சி.  (வஞ்சிப்பா )

இனி நோய் என்னும் ரோகத்தையும் நோயுடையோனாம் ரோகியையும் சந்திப்போம்.

கெடுதல் குறிக்கும் ஊறு என்ற சொல்லும் உறு என்ற வினை முதனிலை திரிந்தமைந்ததாகும்.  முதனிலை நீண்டுள்ளது.  படு > பாடு எனற்பாலதுபோல் உறு > ஊறு ஆயிற்று.

உறுவது ஓங்குவதே ரோகம்.

உறு ஓங்கு அம் >  உறு ஓகு அம் >  உறோகம்.
இச்சொல் தலையிழந்து  றோகம் > ரோகம் ஆயிற்று.

ரோகமுடையான்  ரோகி.

ரோகம் ரோகி என்பவெல்லாம் திரிபுகள்.

ஒருவேளையே உண்பான்  யோகி;
இருவேளை உண்பான்  போகி;
மூன்றுவேளையும் முடிப்பவன் ரோகி.

இவ்வரிகளில் ரோகி என்ற சொல் இலங்குவதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


குறிப்புகள்

இலக்கணம்

ஓங்கு >  ஓகு  (  இடைக்குறை).
ஓகு > ஓகம்.

சீர்ச்சை  >  சிகிச்சை.    பகு என்பது பா என்று திரிந்தன்ன சீ(ர்) என்பது சிகு> சிகி ஆனது.  இது மறுதலைத் திரிபு  மற்றும் உகர இகரத் திரிபு.

இவை போல்வன எம் பழைய இடுகைகளிற் கண்ணுறுக.

ஓகம் என்பதே பின் யோகமும் ஆனது.  பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் வாழ்ந்தவர்.  சூழ்ந்து திறமாக அமைவுற்றது சூத்திரம்.  (சூழ்த்திறம்  > சூத்திரம்,  இது வாழ்த்தியம் > வாத்தியம் போலும் திரிபு ஆகும்.)

தட்டச்சுப் பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: