சனி, 23 நவம்பர், 2019

யாதவர்

வகரமும் மகரமும் தொடர்புடை ஒலிகள்.  ஒன்று  மற்றொன்றாக மொழியில் திரிந்து வரும். இப்படித் தொடர்புபட்டு வரும் சில கிளவிகளைக் கண்டு போல வருதலின் போலி என்றனர் தமிழிலக்கணத்தார்.  இலக்கண நூல்களில் இவ்வாறு தெரிவித்த இவ்வாசிரியர் மிக்க நுண்ணறிவுடையோர் என்று நாம் அவர்களைப் புகழலாம். அவர்கள் அதைச் சொல்லாமல் நீரே இதைக் கண்டு உணர்ந்திருந்தால் உம் நுண்ணறிவினுக்காக நீரே உம் முதுகில் நாலு தடவை தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம்.

செய்யுள் இயற்றும்போது முதலில் வகரத்தில் தொடங்கிய ஒரு வரிக்கு அடுத்த வரியிலும் வகரத்தில் தொடங்க ஒரு சொல் கிட்டவில்லையென்றால்
(  மோனை )  மகரத்தில் தொடங்கிக்கொள்ளலாம்.  மோனை கிட்டிவிட்டதென்று தட்டிக்கொள்ளலாம் உம் கைகளை.

பொருள் மாறாமல் எழுத்துமட்டும் மாறியிருந்தால் ஆனந்தம் தான். எடுத்துக்காட்டு:   மிஞ்சுதல்  > விஞ்சுதல்.  பொருள் அதே.

சில வேளைகளில் எழுத்தும் மாறிப் பொருளும் சற்று மாறியிருக்கும். உதாரணம்:

மிகுதி  > விகுதி.

விகுதி என்பது சொல்லில் இறுதியாக மிகுந்து நிற்பது.

தணி > தணிக்கை.  இங்கு கை என்பது தனிப்பொருள் ஏதுமின்றிச் சொல்லை மிகுத்து  வேறு பொருளை வருவித்தமை காண்க.

இது நல்ல உது+ஆர்+ அண் +அம்.  ( நிறைவாக அண்மி முன் நிற்கும் ஒரு சொல் ). உது - முன் நிற்பது.  ஆர்(தல்) : நிறை(தல்). அண் : அண்மியது.  அம்: விகுதி.

சரி. இனி யாதவர் என்ற சொல்லைக் கவனிப்போம்.

ஆகரத்தில் தொடங்கிய சில சொற்கள் யாகாரத்திலும் தொடங்கிடலாம்.

ஆனை > யானை.
ஆடு > யாடு.
ஆதல் >  யாத்தல். ( மாறித் தொடங்கியது மட்டுமின்றி தகர ஒற்றும் தோன்றிற்று ). யாத்தல் எனின் தானே ஆகுவதன்றி ஆக்கப்படுவதாகும். புலவன் பாவினை ஆக்குகின்றான்.  அவனே ஆக்கியோன்.
ஆக்குதல் > யாக்குதல்
ஆண்டு > யாண்டு
ஆறு > யாறு.
ஆமை > யாமை.
ஆய் > யாய்

யாதவர் என்ற சொல்லில் முன் நிற்பது உண்மையில்   "ஆ" தான்.   ஆ என்றால் மாடு.  ஆ என்பதே யா ஆகி நின்று உம்மை மயக்குகிறது.

தவர் என்பது தமர் ஆகும்.  மேலே வகரம்<> மகரம் பரிமாற்றம் கூறினோம்.  அதை மீண்டும் பார்த்து மனப்பாடமாக்கிக் கொள்க.

மொழி இடை வரு இத்தகு பரிமாற்றத்திற்கு இன்னொரு காட்டு:

அம்மையார் >  அவ்வையார்  ( மகரம் வகரமாகிப் பரிணமித்தது.)

*ஆகவே  தமரே தவர்.   தமர் எனின் தம்மவர்.

ஆக்களை மேய்க்கும் தம் பெருமக்களே யா+தமர் >  யா+தவர்.

தவர் என்பதைத் தவமுடையார் என்று விளக்கினும் ஒக்கும்.

வட இந்திய மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் அன், அர் . அள் முதலிய ஒழிந்து வழங்கும். அவ்வதே நிகழும் ஈண்டுமென்றுணர்க.

தமிழ் மொழி இயன்மொழி ஆயினும் பற்பல - எண்ணிறந்த திரிபு வசதிகளைத் தன்னகத்தே இயக்கிக்கொண்டு உலக மொழிகளையும் வளப்படுத்தியுள்ளமை உணர்க.


அறிவீர்  மகிழ்வீர்.

திருத்தம்
7.12.2019 ஓர் எழுத்துப்பிழை  * (அ - ஆ) திருத்தம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: