செவ்வாய், 29 டிசம்பர், 2015

சி போதம்: 4. பொருளுரை.

இது  முன் இடுகை   http://sivamaalaa.blogspot.sg/2015/12/4-preliminary-notes.html  -யின்  தொடர்ச்சி.


ஆன்மா அந்தக்கரணம்  அவற்றின் ஒன்று அன்று =  ஆன்மா என்பது  மனம், புத்தி, சித்தம்  அகங்காரம் என்ற நான்கு உட்கருவிகளில் ஒன்று ஆகாது; ( ஆகவே  அவற்றின் வேறானது ஆன்மா.)

சகச மலத்து உணராது =  இயல்பான கேடாகிய, ஆணவமென்னும் சகச மலத்தின் காரணமாக,  ‍தன் உண்மை விரிவு நிலையை உணராமையால்;

அரசு அமைச்சு ஏய்ப்ப ‍   =   அரசாள்பவன் தன் அமைச்சர்களுடன் கூடி அவர்கள் தரும் அழுத்தங்களால் உந்தப்படுதல் போல;

அவை சந்தித்தது நின்று  =  அவைகளுடன் கூடி  வாழ்தொறும் நிலையாய்  இயங்கி;

அஞ்சு அவத்தைத்து ‍=  ஐந்து  நிலைகளை உடையதாய் உள்ளது.
ஏ =  உறுதி கருதிய  ஏகாரம் ;  (தேற்ற  ஏகாரம் )

இவற்றுள்  சாக்கிரம் என்பது,  ஆன்மா  புருவங்களின் நடுவில் தங்கி , விடைய  நுகர்ச்சியில் மெத்தென  நிற்கு நிலையாம்,

சொப்பனம் என்பது ஆன்மா  கழுத்தில் நின்று  புலனுணர்ச்சிகள்  sense organs ஒடுங்கி எண்ணங்கள்  mind  ஓடும் நிலை.

சுழுத்தி   என்பது  முழு உறக்கம்;  இதில்  புலன்கள் முற்றிலும் ஒடுங்கி எண்ணங்களும்  ஒடுங்கிய நிலை.

துரியம் என்பது:   ஆன்மா  உந்தியில் நின்று கொண்டு  பிராணனுடன் ஒன்று பட்டு இயைந்து கிடப்பது. ஆகவே  பிராணன் என்னும் உயிர் வேறு; ஆன்மா என்பது வேறாம்.  ஆனால் உந்தியில் அவை இயைந்து நிற்கின்றன.

துரியாதீதம் என்பது:  ஆன்மா  மூலாதாரத்தில் நிற்பது.
துரியம் +  அதீதம் = துரிய + அதீதம் =  துரியாதீதம்.   துரியத்தைக் கடந்தது.
அதீதம்  =  கடந்து நிற்பது.  உந்தியைக் கடந்த இடம் ,    எனவே மூலாதாரம்.
துரிதல்  =  தேடுதல் . ( துருவுதல்  என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும் .  )  ஆன்மா உயிரைத் தேடிக்  கண்டு, ஒன்றுபட்ட இடம்  துரியம் என்றும்  அது கடந்த இடம்  துரியாதீதம் என்றும் சொல்லப்பட்டது.
அதீதம் <   அது +  ஈது  + அம்  =  அதீதம். (முன்னிடம் அது ;  இவ்விடம் - ஈது ; அம்  = விகுதி  ).  அங்கு இருந்தது,  விட்டு  இங்கு வருதல் ,   அதீதம். எனவே கடந்த இடமென அறிக.


திருமந்திரத்தில்:

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே    2122

என்று திருமூலர் சொல்கின்றார்.  இங்கு கள்வன் என்றது ஆன்மாவை.  சரக்கு - இதுவரை எடுத்தோதிய  கரணங்கள்  அவத்தைகள் முதலான பலவற்றைக் குறிக்கும். ("பலவுள " என்றார் ஆதலின் ).  மாயப்பை , மாயும் அல்லது இறக்கும் பை.  அங்கிருந்து புறப்பட்ட ஆன்மாவுக்கு,  மற்றுமோர் பை என்றது  மறுபிறவியிற் பெறும் உடலை. ஒழிந்த அல்லது மாய்ந்த பையோ, மண்ணாகிக் கலந்துவிடுகிறது -  இயற்கையுடன் .

மயங்கிய -  கலந்த .

ஆன்மாவைக் கள்வன் என்றது ஏன் ?  சொந்தமில்லாத ஓரிடத்தில் உட்புகுந்துகொண்டு  குடியிருக்கும்  ஒருவனை  அல்லது ஒன்றை -    புகுந்தது மட்டுமின்றி  என் உடல் , என் தலை, என் கால் கை  என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்போனை /  இருப்பதை,  பின் எப்படிக்  குறிப்பிடுவீர் ?
அவன் கள்வனேயாம். என்ன வியப்பு?  இந்தக் கள்வன் வேறோர் உடம்பைத் தேடிப் போய்விட்டால் இவ்வுடம்பு பாழ்.  மண்.



தொடரும்
will edit









கருத்துகள் இல்லை: