வெள்ளி, 24 அக்டோபர், 2014

தும்பைத் திணை

இனித் தும்பைத் திணைபற்றிப் பேசி மகிழலாமே.

தும்பையில் இருபத்து நான்கு துறைகள் உள . தும்பை என்றது திணை; ஏனைய அதன் துறைகள்.

வீறு என்பதில் விளைந்த வீரம் என்ற வடிவில் அமைந்த சொல்லுக்கு, இணையான மற்றொரு தமிழ்ச்சொல் மறம் என்பது.  மறம், வீரம் 
என்பவெல்லாம் மாறுபட்டு நிற்றல் ஆகும். உம் நாட்டைக் கொள்ள நினைத்த பகைவனிடம் அதற்கு இசையாமல் மறுத்து நிற்றல் ‍மறு + அம் =  
மறம் ஆனது.

செங்களத்து மறங்கருதி
பைந்தும்பை தலை மலைந்தன்று.

என்பது கொளு.

தும்பை என்பது போர்ப்பூ. போரில் இறங்கும் அரசன்  தும்பை மலரைத் தலையில் அணிந்து முன்செல்வான்.  செங்களம் =  போர்க்களம்.  

மலைதல் ‍ :  அணிதல். தலையில் மகுடம் அணிந்து, அந்த மகுடத்தில் தும்பை  மலைந்துகொள்வர்.

தும்பையைச் சூடி நின்ற அர்சனைப் புலவர் பாடினாராயின் அப்பாடல் தும்பைத் திணை. தும்பை மலைந்தவர் போரிற் புகவேண்டும். அதுவே 
தும்பை.  தமிழ் மன்னர் யாரும் ஏமாற்றியதாகத் தகவல் இல்லை.

ஆசிரியர் தொல்காப்பியனார், "மைந்து பொருளாக வந்த வேந்தனை,
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று " என்று போற்றி உரைப்பதனால், இது சிறப்புக்குரிய திணை என்க. ‍‍ மைந்து :  வலிமை. தான் வலியவன் 

என்று போர்செய்யக் கருதி வருதல்.

இதன்பின் ஓரிரு துறைகளைப் பற்றிப் பேசுவோம்.

கருத்துகள் இல்லை: