செவ்வாய், 21 அக்டோபர், 2014

உழிஞைத் துறைகள்

உழிஞைத் திணையில் துறைகள்  முப்பத்து ஒன்றாம்,

அவற்றுள் சில  இப்போது அறிந்து மகிழ்வோம்.

எந்த முன்மையும் முதன்மையும் வாய்ந்த காரிய மாயினும் அதனை நல்ல நாள் பார்த்துச் செய்வது பண்டைத் தமிழர் வழக்கம். உழிஞை என்னும் பகையரண் மேற்கொள்ளக் கருதிச் செயலில் இறங்கியபோதும் நல்ல நாள் பார்த்துவிட்டு அங்ஙனம் இறங்கிய மகிழ்வுடன் செல்வதையே 
அந் நாளில் விரும்பினர். கொற்றக் குடையைச் செல்ல விடுதற்கும் நாள் பார்த்தனர். வாள் எடுத்துச் செல்லுதலுக்கும் அங்ஙனமே நாள்  பார்த்தனர்,

கொற்ற‌க்குடையை (அதனை ஏந்திய படைப்பிரிவை) புறப்படச் செய்யும் நிகழ்வு  "குடை நாட்கோள்" எனப்படும். இது குடை புறவீடு விடுதலெனவும்
படும். இந் நிகழ்வினைப்பாடிய பாடல், உழிஞைத்  திணையில் குடை நாட் கோள் என்னும் துறையைச் சேர்ந்ததென்று குறிக்கப்படும். புறவீடு என்னும் சொல்லில் வீடு என்பது "விடுதல்" : விடு> வீடு முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  அதாவது வினைச்சொல்லினின்று பிறந்த பெயர்ச்சொல்.


இரண்டும் ஒரே நேரத்தில் புறப்படுமா,  ஒன்றடுத்து ஒன்று புறப்படுமா என்றார்க்கு, இவை படை ஒருங்கிணைக்கும் மேற்பார்வையாளன் உரிய 
கட்டளைகளைப் பெற்று செயல்படுத்துவனவாகும். நாம் அறியற்பாலது, இவை பற்றி எழும் புலவர் பாடல்கள் எங்ஙனம் துறைப்படுத்தப்படுமென்பதே.

போர்முரசு தெய்வத்தன்மை வாய்ந்தது என்று கருதினர். அதற்குப் பொன்னால் ஆன உழிஞைப் பூமாலை போன்றது சூடப்பெற்று, ஆடு வெட்டப்பட்டு, பலிப்பூசை நடத்தப்பட்டது. இதைச் சொல்லும் பாடல் "முரச உழிஞை"த் துறை சார்ந்தது. இது பொன் புனை முரச உழிஞை என்று பாடல்களில் சிறப்பிக்கப்படும்.

இப்படியே உழிஞைத் துறையில் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாற்றுத் துணுக்குகள் பலவாகும்.

கருத்துகள் இல்லை: