சனி, 4 ஜூன், 2022

இறக்கும்போதும் உமக்காகத் துடிக்கும் நாயின் இதயம்.

 

நேரிசை வெண்பா


அன்பினோர்    ஊற்றாக வாழ்ந்தே,   உயிர்விட்டால்

அன்புக்  கெனநின்ற  நாய்தனை ---- தன்பக்கல்

என்றும்நீக் காதீர் இதயம் உமக்கன்றோ 

கொன்றும் துடிக்கும்  அது.


அன்பினோர் -  அன்பின் ஓர்;   உயிர்விட்டால் - இறக்கும்போதும்; 

அன்புக் கென நின்ற =  உயிர் இருக்கும்போதும் உமக்காக;  அது 

போம்போதும் உமக்காக என்பது;   தன் பக்கல் -  தன் பக்கத்திலே; ( தன் பக்கத்திலிருந்து )

எந்தக் காலத்திலும்;   நீக்காதீர் - உம்  அரவணைப்பிலிருந்து விலக்காதீர்

என்பது;    இதயம் உமக்கன்றோ  -  அதன் இதயம் முழுமையும்

உமக்கு என்பதில் ஐயமில்லை;   கொன்றும் துடிக்கும் அது -   நீர் அதைக்

கொன்றாலும் அதன் இறுதித் துடிப்பு உமக்காகத்தான்.

உமக்கன்றோ என்பதை இருபுறமும் இணைத்துப் பொருள் கொள்க. இச்

சொற்றொடர் " நடுநாயகம் ". ( இருபக்கம்  மாட்டும்படி நட்டு 

நயக்கப்படுவது).  

நடுநின்ற  " நாயகம்".   நய அகம் - நயமுடைய உட்பகுதி. அல்லது நயக்கப்பட்ட ~.

Pl click: செய்தி.

https://theindependent.sg/shiba-inu-loyal-dog-runs-8km-back-home-after-owner-gives-him-up-due-to-asthma/

..................At one point, it appeared that Saisai was crying, so Zhao gently caressed his head and told him not to cry. She, too, sniffled at the end of the video......................


நம்  வலைபூவின் ஆதரவாளர் திருமதி ரெதி  அவர்களின் நாய்,  நோய்வாய்ப் பட்டு இறக்கும் தறுவாயில் செய்திவர,  விலங்கு நோய்மனைக்கு ஓடினார்,  இன்னும் இறக்கவில்லை, போய்ப் பாருங்கள் என்றனர்  மருத்துவர்கள். அருகே சென்று ரெ பெயர்சொல்லிக் கூப்பிட, தலையைத் தூக்கி  அது அவரைப் பார்த்துவிட்டு தலையைக் கீழே போட்டுவிட்டு ஒரு பெருமூச்சு விட்டது.  தலையை மீண்டும் தூக்க இயலாமல் இன்னொரு மூச்சுடன் நின்றுவிட்டது.   என்னே கொடுமை.

இவ்வாறெல்லாம் அன்புகாட்டும் நாயை  நாய் என்பதே தவறு. அதுதான் உண்மை இதயக்கனி.

 




துர்க்கையம்மன் அருள்


 எத்துணை மாட்சிமை துர்க்கையம்மா!

இத்தனை அழகும் சன்னிதியில்.

உத்தமச் சத்தியக் கருணையிலே

எத்தனை நாட்கள்யாம் இணைந்துநின்றேம்

பத்தருக் கினியும் அருள்புரிவாய்

பனிபக  லோன்முன்  மறைந்துவிடும்

நித்திய வாழ்வினில் எமைநிறுத்தி 

நேரு  மின்னல்களும்  இலவாக்குவாய்..


சிவமாலையின் கவி.


பொருள்

எத்துணை மாட்சிமை துர்க்கையம்மா!

--- மாட்சிமை என்பது பெரும்பாலும் மன்னரவையில் நிலவும் மேன்மை நிலை.  இது அலங்காரங்கள் மக்கள் அஞ்சுதலன்புடன் நிற்றலைக் குறிக்கும். இறைவிக்கும் ஏற்றசொல்தான்.

மாட்சி மை துர்க்கையம்ம  மை  my என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

இத்தனை அழகும் சன்னிதியில்.===  தெய்வம் நிற்குமிடம்  சன்னிதி.

உத்தமச் சத்தியக் கருணையிலே  (  சத்தி - சக்தி;  அக் கருணையிலே என்று இருவாறு பொருள் கொள்ளவும் இடமுண்டு.)

அதாவது சக்தி அக் கருணையிலே என்றும் வரும்,

கருணை என்பது  கருநெய் என்றுகூட வைத்துக்கொண்டாலும் ஒரு பொருண்மை உண்டு.  அக்கினிக்கு வத்திரங்கள் உணவெல்லாம் கொடையாக்கியபின் எரிந்த கருப்பில் கொஞ்சம் எடுத்து நெய்விட்டு,  பொட்டுவைத்துக் கொள்வதுண்டு.   கருணை - என்பதைக் கருநெய் என்று எடுத்துக்கொண்டாலும் அதையும் குறிப்பாகக் கொள்ளலாம்.  இதைப் பலமுறை பெற்றுள்ளேம்.  நீங்களும் பெற்றிருப்பீர்கள்.

எத்தனை நாட்கள்யாம் இணைந்துநின்றேம்  -  இவ்வாறு ஈடுபாடுகள் உள.

பத்தருக் கினியும் அருள்புரிவாய்  : இனியும் என்றால் முன்னும் அருள் கிட்டியபடி. இனியும் வேண்டும் அந்த இனிமை என்பது.

பனிபக  லோன்முன்  மறைந்துவிடும்  அவ்வாறு அருள் கிட்டினால் இன்னல்கள் மறைந்துவிடும்.

பக -  வெட்டிவிட, பக எனில் அது பெய்யாத இடம் செல்லுதலுமாம். ( என்றும் பொருள் )

கடவுள் ஒரு லோன் (கடனாக அருள்) கொடுத்தாலும்  தாழிருஞ்சடைகள் தாங்கி தாங்கருந்தவமேற்கொண்டாவது கட்டிவிடலாமே.  அப்படியும் கொள்ளலாம்.

நித்திய வாழ்வினில் எமைநிறுத்தி   நித்தியம் என்பது நிற்றலுற்ற தன்மை.

நில் . நிற்றல் > நித்த(ல்)  :>  நித்தி(யம்.).

நேரு  மின்னல்களும்  இலவாக்குவாய்..  நேரும் இன்னல்.

இல என்பது பன்மை, இல்லை என்பது  தற்காலத் தமிழில்.

இல்லை - ஒருமையும் இல்லை; பன்மையும் இல்லை.

இல என்பது பன்மையில் மட்டும் வருவது.

நின்றேம் என்பது தம்மைச் சார்ந்தோரை மட்டும் உட்படுத்த, நின்றோம் என்பது  முன்னிலையில் உள்ளோரையும்  ( இங்கு துர்க்காதேவி) உட்படுத்தும்/. ஆதலால் நின்றேம் என்பதே ஏற்றுக்கொண்டேம்.  ஏம் விகுதி இப்போது வழக்கு குன்றியுள்ளது.)

மறைமலையடிகள் பெரிதும் ஏம் விகுதியைப் பயன்படுத்தியுள்ளார்.

நின்றேன் >  நின்றேம் (பன்மை)

நின்றோன் >  நின்றோம்  (")

வழக்கில் சற்று வேறுபடுதல் உண்டு. இதை ஒருமுறை விளக்கவேண்டும்.

இம்மில் முடிவது பண்டைத் தமிழில் பன்மை.

சீனமொழியில் மகர ஒற்றில் முடியும் பன்மை உண்டு. அது இன்னும் ஓர் அன் பெற்று ஆங்கு முடியும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்





வெள்ளி, 3 ஜூன், 2022

சம்சாரம்.

 பெண்ணாதிக்கக் காலத்தில் மணந்துகொண்டவன் பெண்ணின் வீட்டிற் சென்று பதிந்து வாழ்ந்தான். பெண்ணே அவ்வீட்டில் ஆட்சிசெய்தாள். நிலங்கள் தோட்டந்துறவுகள் அவளின் 'நிறுவாகத்தில்'  இருந்தமையால், பெரிதும்  சொத்துரிமை இல்லாத இவ்வாடவன், அவள்தன் நிறுவாகத்துக்கு உதவியாளன். பதிந்துவாழ்ந்தமையின் "பதி" என்பது  அவனுக்கு பொருத்தமான சொல்லாயிற்று என்பதை இன்று நாம் உணர்கின்றோம்.  இச்சொல், வேளாண்மை செய்து வாழ்ந்த குமுகாயத் தொடர்பில் எழுந்தது என்பது சொல்லாமற் புரியக்கூடியது.

விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தோரிடை இஃது தோன்றியிருக்க வாய்ப்புகள் குறைவாய் இருந்தது.  அன்றன்று ஏதாவது கிட்டினாலே வாழ்வு நகரும்.  காட்டில் திரிவன, பெண்ணுக்குச் சொத்துகள் ஆகமாட்டா. காடுமுழுமையும் சொத்தாகவிருப்பின் இஃது அமையக்கூடும்.

இக்கருத்தின் தொடர்பில் யாம் முன்னெழுதிய இடுகை,  இதைச் சற்று விரிவாக ஆய்கின்றது.  சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள்.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html

தலைவி என்று சங்க இலக்கியத்தில் கையாளப்பட்ட சொல்லும் இதனைக் கோடிகாட்ட, உதவக்கூடிய சொல்லே. காதல் தொடக்க நிலையில் இருக்கும் காலத்திலேயும் அவள் தலைவி என்ற குறிப்புக்குள் வந்துவிடுகின்றாள். அவளைத் தேடிவந்து அன்புகொள்பவன் தான் தலைவன்.  அவனைத் தேடி அவள் போவதில்லை.   அவனை இறுதியில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை அவளும் வீட்டாரும் முடிவு செய்கின்றனர். பொருள் இல்லாதவனாயின் பொருள்வயிற் பிரிந்துசென்று,   கொணர்வான். தலைவியை நாடும்போதே  வயல், மலை காடு முதலியவை உடையவனாயும் இருத்தல் கூடும். நாடகக் கருத்துகள் பெரிதும் தலைவி, தோழி இவர்களிடையேதாம் தோன்றி இன்புறுத்துவனவாகின்றன.

தம் என்பது தன்மைப்பன்மைச் சொல்.  தாம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் என்பது இதன் பொருள்.  

தன், தம் என்ற இரண்டும்  சம் என்று திரியும். 

மனைவி என்பவள் தம்மைச் சார்ந்து வாழ்பவள் என்ற கருத்து ஆணாதிக்க காலத்தில் தோன்றியது ஆகும்.  அப்போது  நிலவரமும் அவ்வாறு ஆகிவிட்டது.

தம் சார் அம் >  சம் சார் அம் > சம்சாரம் ஆயிற்று.

தங்கு > சங்கு  :  சங்கு என்பது ஓருயிரி தங்கி வாழ் கூடு. பல புலவர்கள் அரசனின் அரவணைப்பில் தங்கி உண்டு கவி பாடிப் பரிசில் பெறும் இடம்  அல்லது ஏற்பாடு சங்கம்  ஆனது.  சொற்கள் மற்றும் வழக்குகள்  ( சொல் பயன்பாடுகள்)  அவ்வப்போது நட்ப்புக்கு ஏற்பத் தோன்றிக்கொண்டிருந்தன.  எ-டு:  அரசவைக்குள் புகுந்து எதுவும் பேசாமல்,  வெளியில் நிற்கும் அதிகாரியிடம் ஒரு மனுவைக் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டு போவது  " புகார்மனு"  ஆனது.  புகார் -  அரசவைக்குள் புகாதவர்.  புகுந்து பேச எல்லாராலும் முடிவதில்லை. அரசவையில் முன்மைவாய்ந்த பேச்சுக்குரியவாய்ப் பல இருக்கலாம்.  புகார் - அர்சவைக்குள் புகாதவர் கொடுத்தது.  புகார் என்பது உருதுமில்லை கிருதுமில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

தட்டச்சுப் பிறழ்வுகள் சுட்டிக் காட்டின் நன்றியுடையோம். பின்னூட்டமிடுங்கள்