செவ்வாய், 2 அக்டோபர், 2018

அழிவிற் பட்டோர்க்கு அஞ்சலி

பிறப்ப தனைத்தும் இறப்ப துளமையே
பின் என் மனமேன் தன் நிலை கலங்குதல்.
முதுநூல் பலப்பல இதனுண் மைசெலச்
சொல்லியும் பக்குவம் வெல்லத் தவறிய
பற்றாக் குறையோ முற்றாச்  சிந்தையோ?
வற்றா வளத்தின் வண்தமிழ் அறிந்தார்
உற்றார் அல்லர் இத்தகு துயரே
நிலநடுக் கத்தினில் நேரந்த அழிவொடு
பலகடு நிலையும் பட்டழி வுற்றவர்
யாவ ராயினும் கண்ணீர்
மேவத் துளக்குறும் நோவறி நெஞ்சே.

திங்கள், 1 அக்டோபர், 2018

பாஸ்கரன் என்ற சொல்.

இன்று "பாஸ்கரன்" என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்.

இச்சொல் பெருவழக்குடைய பெயராகத் தோன்றுகின்றது.  நாம் அடிக்கடி செல்லும் கோயிலில் ஒரு நல்ல  "பொடியன்" பாஸ்கரன் என்ற இயற்பெயர் உடையவராய் இருக்கிறார்.  ஆனால் தம் பெயர் தமிழன்று நினைத்து அப்பா அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் பாற்கரன் என்று எழுதுகிறார்.

இவர் அரனுக்கு (சிவனுக்குப்) பால் கொண்டுவந்து பூசாரிகளிடத்துக் கொடுக்கிற படியால் இவர் பெயர் ஒருவகையில் நன் கு பொருந்தியுள்ளது.
அங்குள்ள சிவன் பால் குடிப்பவர் என்பது பொருளாகிறது .  பால்+ கு+ அரன் = பாலுக்குச் சிவன் என்று விரித்து,  பாலைச் சிறப்பாக ஏற்றுக்கொள்பவர் சிவபெருமான் என்ற பொருளைத் தருகிறது.  அங்கிருக்கும் மற்ற தெயவங்களும் பாலை வேண்டாமென்று சொல்வதில்லை என்பதால் இப்பொருள் முற்றப்பொருந்தும் பொருளன்று என்று வாதிடலாம். எனினும் முழுதும் ஒழிதலின்றிப் பொருந்தும் பெயர்கள் உலகில்  சிலவே ஆதலின் அதை ஒரு பெரிய தடையாகக் கொள்ளாமலும் செயல்படலாம்.

இப்போது பாஸ்கரன் அல்லது அன் விகுதி இன்றிப் பாஸ்கர் என்ற பெயரில் அயலாகத் தெரிவது ஸகர ஒற்றே ஆகும்.  கஷ்டம் இஷ்டம் முதலிய சொற்கள் ஷ் என்ற எழுத்தை  அணிந்துகொண்டிருந்தாலும் அவை கடு, இடு என்ற தமிழ் மூலங்களை உடைய சொற்களே என்பது இதுபோழ்தில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஈண்டுள்ள  முன் இடுகைகளைக் காண்க.

சொடுக்குக:





சமஸ்கிருத மொழியில் மூன்றிலொரு பங்கு, தமிழ்த் திரிபுகள் என்பதை டாக்டர் லகோவரி என்ற மொழியாய்வறிஞர் குழுவினர் கண்டுரைத்துள்ளார்கள்.ஆனால் இவர் இப்படி முடிபு கொண்டது,   ஆரியப் புலப்பெயர்வுத் தெரிவியலாலலும் சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்ற தெரிவியலாலும் வரலாற்று ஆசிரியர்கள் கவரப்பட்டுக் கிடந்த காலத்திலாகும். இத்தகு தெரிவியல்களுக்கு இப்போது ஆதாரங்கள் இல என்பது உணரப்பட்டுள்ளது. 

 இனிப் பாஸ்கரனைப் பார்ப்போம்.  பகலில்தான் சூரியன் என்னும் சூடியனைக் காணவியலும். இரவில் எங்கிருக்கிறதென்பதை பண்டையர் அறிந்திருக்கவில்லை.   ஆகவே பகலுடன்  திரிபிலாத் தொடர்பு உள்ளது சூடியனாம் சூரியன்.  பகல் என்ற சூரியன் காயும் நாள் என்னும் வெளிச்சப் பாதி, பால் என்று திரியும்.

பகலுக்கு அவர் என்ற சொற்றொடர்,  பால்+கு+அர் என்று சுருங்கும்.  பகல்>பால்;  கு சேர்விடம் குறிக்கும் பழஞ்சொல்;  இற்றை உருபும் ஆகும். அர் = அவர்.   பலர் பால் விகுதியும்  ஆகுமிது.  பணிவுப் பன்மையில் ஒருமை உணர்த்தும்.  (  மரியாதைப் பன்மை).

இது பாற்கர் என்று வரும்.  கவினுறுத்து முகத்தான் பாஸ்கர் என்று அமைக்கப்பட்டது.  இதை விரித்தால்:  பால் > பகல்;  கு ( பகலுக்)கு.;   அர் > அவர்.உண்மையில் பகலவன் என்ற சொல்லின் ஒருவிதச் சுருக்கமே பாற்கர்  என்னும் பாஸ்கர் ஆகும்.

"பன்மையொருமையில்" மிளிரும் பாற்கர்,   அர் என்பது அவர் என்றாகும்  தன் பொருளை இழந்து,  மக்கள் மறந்துவிட்ட நிலையில் மீண்டும்  ஓர் ஆண்பால் ஒருமையாகிய  அன் பெற்று  பாஸ்கரன் என்று வந்தது வழுவாகும்; அது பெரிதும் வழக்கிலுள்ளபடியால் அதை வழுவென்று கூறி அடைவது யாதுமில்லையாதலின்,  வழுவமைதி என்றே ஏற்றல் அறிவுடைமையாகும்.

பாஸ்கரன் = பகலவன்.

பகற்கரசன் > பாற்கரசன் > பாற்கரன் (சகரம் கெட்ட இடைக்குறை)  எனினும் ஏற்புடைத்தே . பகல் என்பது பாலென்று திரிந்தும் அரசன் என்பது அரன் என்று இடைக்குறைந்தும், பாற்கரன் என்றாகி  ஒரு ஸ்கர ஒற்றிட்டுக் கவினுறுத்தப் பட்டு, பாஸ்கரன் என்று திரிந்ததெனும் முன்வைப்பும்  நன்றே ஆம்.  இப்படிக்கூற, பகலவன் என்பதன் படியாகவின்றி பகற்கரசன் என்ற அணிபெறுதல் காண்க. இவ்வாறு இருபொருள் மற்றும் அவற்றுக்கு மேலும் தரும் சொற்களும் புனைவுகளும் பல.

இதுவே பாஸ்கரனின் வரலாறு ஆகும்.

மறுபார்வை பின்பு.

--------------------
குறிப்புகள்

சில மொழிபெயர்ப்புகள்

‘சென்சஸ்’  ‘குடிமதிப்பு’ 
பேனா-தூவல்,
பவுண்டன் பேனா-ஊற்றுத்தூவல்,
ஸ்டூல்-மொட்டான்,
சிமெண்ட்-சுதைமா,  
ஏர்கண்டிஷன்-செந்தணப்பு, 
ஏஜெண்ட்-முகவர், 
(பாவாணர்)



ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

து விகுதி பெற்ற பல சொற்கள்.

து விகுதி பெற்று அமைந்த சொற்களை இன்று பொதுவாக நோக்குவோம்.

து என்னும் விகுதி வினைச்சொல்லிலும் வரும்:

எடுத்துக்காட்டு:    ஓது.  மோது.      (முக><மோ)

இது பெயர்ச்சொல்லிலும் வரும்:  

எடுத்துக்காட்டு:   விழுது. பழுது  கைது (கையகப்படுதல்)

இதுவே வினை எச்சங்களிலும் வரும்.

எடுத்துக்காட்டு:

அழுது    (  அழுதுகொண்டே பாடினான்).

தொழுது   (   தொழுது உண்டு பின் செல்பவர் ).

பிசைந்து   (  பிசைந்து உருண்டையாகப் பிடி  ).

பெயரெச்சத்தில் து என்பது த என்று மாறிவிடும்:

அழுத   பையன்.

இதை அழு (   த =  த் + அ ) எனலாம்.
இதை  அழு ( த =  து + அ ) என்றும் சொல்லலாம்.  இவ்வாறு கூறின்  து என்பதில் உகரம் கெடுத்து அகரமேறியதாகக் கொள்ளவேண்டும்.  இந்த அகரம் அந்த என்ற சுட்டுப் பொருளோடு தொடர்புறும்.  த்  என்பது  இறந்தகால இடைநிலை என்று கொள்ளுதல் சிறந்த விளக்கம்.

து என்பது சுட்டுச்சொல்லுடன் வரும்:

அது
ஈது

து என்பது வினாவுடனும் வரும்.

எது
ஏது.

து என்பதில் ஆகாரம் இணைந்தும் வினாவாகும்:

அதுவா.  (அது+ ஆ).

இனி, விந்து என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இதை எம்மிடம் கேள்வியாகக் கேட்டுள்ளனர்.  இச்சொல்லில் இறுதியில் நிற்பது து என்னும் விகுதி.  இது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று. இது இந்தோ ஐரோப்பிய மூலமொழிச் சொற்றொகுதியில் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்.  து விகுதி இந்தோ-ஐரோப்பியத்தில் இல்லை என்று பொதுவாகக் கருதினாலும், பார்ட் என்ற ஆங்கிலச் சொல்லும் "பாற்று" என்ற தமிழ்போலவே ஒலிப்பதைக் காணலாம்.  "உணரற் பாற்று"   "செய்தற் பாற்று" என்ற சொல்லாட்சிச் சொற்றொடர்களில் ஒலிப்பொருமையைக் காணலாம். ஆடி அல்டராம் பாற்றம் என்ற இலத்தீன் தொடரிலும் பாற்றம் பார்ட்டம் என்று வந்துள்ளது காண்க.   வீசும் காற்றைக் குறிக்கும் "விண்ட்" என்ற சொல் எடுத்தொலி பெற்று வேறுபோல் தோன்றினும் தமிழ் முறைப்படி உச்சரிப்பதானால் விந்து என்று உச்சரிக்கவே வேண்டும்.  ஆதலின் விண்ட் என்பது விந்து என்பதுபோல் ஒப்பொலிச் சொல் எனினும் வேறுபொருள் குறித்தமையின் வேறுசொல் என்றே கொள்ளவேண்டும். இப்பொருளில் விந்து என்பதுபோல் ஒலிக்கும் சொல் அங்கில்லை.

உலகில் 6912 மொழிகள் இருத்தல் சொல்லப்படுகிறது.நேரமெடுத்து இம்மொழிகளில் நீங்கள்   தேடிப்பார்கலாம்.

விந்து என்பதில் து விகுதி ஆனாலும் வின் என்பது பகுதி அன்று.  வெண் என்ற தமிழ்ச்சொல்லே இதன் பகுதியாகும்.  இது திரிசொல் ஆதலின், இது வெண்ணிறம் என்று பொருள்பட்டு, நிறத்தைக் குறிக்காமல்  அந்நிறத்தை உடைய பிற பொருளைக் குறித்தமையின்:

சொல்லும் திரிந்தது:   வெண் என்பது வின் என்று திரிந்தது;
பொருளும் திரிந்தது:   நிறம் குறிக்காமல் நிறத்தை உடைய உடற் சாற்றைக் குறித்தது.

ஆகவே தொல்காப்பியரின் கோட்பாட்டின்படி இருவகையாலும் திரிசொல் ஆகும். மூலம் தமிழாகிறது.

வெண்+து > வெண்து  > வின் து  > விந்து  ஆகும்.

பல்>பன்  ( லகர னகரத் திரிபு).  பன்+து > பந்து.  பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பெற்றவை.  தேய்வை என்னும் ரப்பர் பந்துகள் இல்லை. கயிறுகள் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு உருண்டை வடிவு பெற்றுப் பந்தாயின.  பல்+து = பற்று > பற்றுதல்.  பல்+து > பன்+து > பன் து > பந்து ஆகும்.

வேறு  -னகர ஒற்று  ஈற்றுச் சொற்கள்:

பின் > பின் து > பிந்து > பிந்துதல்.
முன் > முன் து > முந்து > முந்துதல்.

வினையாக்கத்தில் புணர்ச்சித் திரிபுகள்.

ஆனால் சில விடத்தில்  0ன் து என்பது  0ன்று என்று மாறிவிடுதல் காணலாம்:

ஒன் + து =  ஒன்று.  இங்கு  ஒந்து என்று வரவில்லை.

பத்து என்ற சொல்லின் அடி பன் என்பதே. பல என்பது பொருள்.  பன் இரண்டு எனபது பந்திரண்டு என்றாகும்.

பன் > ப > ப து  > பத்து.
பன் > பன் து > பந்து.> பந்து இரண்டு > பந்திரண்டு.
பன் > பன் இரண்டு > பன்னிரண்டு.

முற்கால மனிதனுக்கு ஒன்பதுக்குப் பின் பலவாகிவிட்டபடியால் பத்து என்ற சொல்லைப் பன்மை என்பதிலிருந்தே அவன் உருவாக்கிக்கொண்டான்.

பது , பத்து, பன், பான் என்பவெல்லாம்  ஒருசொல்லே வெவ்வேறு வடிவங்கள்.

ஒன்பது > ஒன்பான்.

பத்துக்கு பது இடைக்குறை என்றாலும்  து என்பது விகுதிதான். ஒன்றில் சொல் வலித்தது :  ப து > பத்து;   இன்னொன்றில் ப து > பது.  வலிக்கவில்லை (  அதாவது வல்லெழுத்து மிகவில்லை).  ப> பல் > பன் > ப து > ப த் து என்பன அமைப்புகள். ஒன்பது குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் தொண்டு; இது தொள் து ஆகும்.  தொள் : தொள்ளாயிரம்;  தொள் > தொண் > தொண்ணூறு. அல்லது தொள்+  நூறு.

மீண்டும் தமிழ் காண்போம்.