சனி, 15 செப்டம்பர், 2018

அகத்திருக்கும் ஆத்துமா; பதிந்திருப்போர் மன்பதை

அகத்து இருப்பதாக உணரப்படுவது ஆத்துமா. இதைச் சுருக்கி அழகாக ஆத்மா என்றும் எழுதுவார்கள்.

வீட்டிலிருந்து வீட்டைப் பார்த்துக்கொண்டு பிள்ளைகுட்டிகளையும் கவனித்துக்கொண்டு கணவனுக்கு பணிவிடைகள் புரிந்துகொண்டு இவற்றின்மூலம் மன்பதைக்கு ( =  சமுதாயத்துக்கு) நலம்புரிவாள் ஆத்துக்காரி.

தமிழின் தன்மை வேறு.  ஆங்கிலத்தின் இயல்பு வேறு. எமக்கு ஆங்கிலம்போல் பேசுதல்தான் பிடிக்கிறது.  யார் எந்த மந்திரத்தை எந்தக் காதில் ஓதினாலும் எமக்குப் பிடித்ததையே செய்வோம். அப்படியானால் ஆத்துக்காரியை ஆங்கிலக்காரியைப்போல் உச்சரித்து இன்பம் காண்பது வேண்டுவதே.

ஆத்துக்காரி > ஆத்கேரி  :  இது நன்றாக இருக்கிறதா?

நன்றாக இல்லையென்றால் இந்தி மொழிப் பாணியில் "ஆத்கார்"  அல்லது "ஆத்கர்"  வெகு விமரிசையாக இருக்கும்.

அல்லது மண்டரின் மொழிப் பாணியில்:  ஆ தூ காங்  என்னலாம்.  அதுவும் இனிமைதான்.

எல்லாம் இனிமை.  எங்கும் இனிமை. எமக்குப் பூனை கத்தினாலும் இனிமையே.

மேலே மன்பதை என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தேம்.  அதை ஆய்ந்து இப்போது தெளிவாக்கி உலவவிடுவோம்.

மன் என்பது அடிச்சொல்.

மன் + இது + அன் =  மனிதன்.
மன் >  மான்:   மான் + து + அன் = மாந்தன்.
( சொல்லாக்கத்தில் மான்+து = மான்று என்று வராமல் மான்+து  = மாந்து என்று வருவது ஒரு வகை.)

~ன்ற என்று வராமல்  ~ன்த   ~ந்த என்று ஏன் வருகிறது என்றால்:

அப்படியும் வரும்.  வேண்டிய வேண்டியாங்கு வரும்.

ஈன்+தல் என்பது  ஈந்தல் என்னாமல் ஈன்றல் என்று வந்தது.
ஆனால் மான்+து + அன் என்பது மான்+தன் என்று நின்று  மாந்தன் என்று முடிபு கொள்ளும்.

இருவகையாகவும் இனிமை கருதிச் சொல்லாக்கி உள்ளனர்.

மனிதன் என்பதில் முழு "  இது " பயன்படுத்திவிட்டு  மாந்தனில்  து மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.    சொல்லை ஆக்கியவனே அரசு.  சட்டியை எப்படி உருவாக்க வேண்டுமென்று குயவனே தீர்மானிக்கிறான்.  சமையல்காரன் அந்தச் சட்டி வேண்டாமென்றால் இன்னொரு சட்டியைப் போட்டு ஆக்கிக்கொள்ளவேண்டியதுதான்.

மன்  >  மான் இவை இரண்டும் அடிச்சொற்கள்.

இனி மன் என்பதிலிருந்து சமுதாயத்தைக் குறிக்க (குமுகம் அல்லது குமுகாயம்)  ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால்:

மன்:  மனித வருக்கம் குறிக்கும் அடிச்சொல்.
பலரும் வருக்கத்தில் பதிவு பெற்று வாழ்கின்றனர்.

மன் + பதி + ஐ =  மன் + பத் + ஐ = மன்பதை.

இகரம் வீழ்ந்தது. கெட்டது .  அல்லது வீசப்பட்டது.

மன்பதை என்பது குமுகம்.  பல மனிதர் ஒன்றுபட்டு இருப்பது.

( பத் ) >  (பது ) > (பதுங்கு  ).
( பத் ) >  (பது )  > ( பதை  )  இதைப் பின் விளக்குவோம். பதைத்தல்.
(பத் )  > ( பதை ) > மன் +( பதை)   =  மன்பதை.   (  மனிதர்கள் பதிந்து வாழும் நிலை).
பதி வந்த பதிவுச் சொற்கள் பல.  தளபதி,  சேனாதிபதி,  அதிபதி,  பதிவிரதை என்ற வழிச் சென்று காண்க.

இனி ஆத்மா என்பதையும் அகத்துமா என்பதிலிருந்து கண்டோம்.  அகத்திருக்கும் பெரியது ஆத்துமா எனினும் அமையும்.  சற்று வேறு பட்ட விளக்கமும் ஏற்புடைத்தே.  இதற்கு ஓர்  இடுகையே உள்ளது. காண்க.

உலகில் பலவும் அறிந்தோரும் உளர்.  ஒன்றே ஒன்றுதான் என்று பிடித்துக் தொங்கி விழுந்தோரும் உளர்.  உலகம் பலவிதம். 

ஆத்துமா >  ஆத்மா பற்றி:





அகத்து என்பது ஆத்து என்று மாறும். தெரியாதபோது ஆத்துக்காரியைக் கேட்டு அறியவேண்டும்.  ஆத்காரியையும் கேட்கலாம்.

கைகேயி

கைகேயி பற்றி ஓர் இடுகையில் முன்னர் விளக்கியிருந்தோம்.  அது இப்போது இவ்வலைப்பூவில் கிட்டவில்லை. பழைய எம்கையெழுத்துப் படியிலும் நெளிபொதிவு வட்டுக்களிலும் உள்ளது.  நன்`கு சிந்தித்து எழுதியது ஆதலின் அதனை மறுபார்வை செய்யாமலே மனத்தினின்று மீட்டு இங்கு எழுதுகின்றோம்.

கைகேயி என்பவள் இராமாயணத்தில் வரும் ஒரு கதைப்பாத்திரம். தசரதனின் மனைவி. பரதன் என்ற பாத்திரத்தின் தாய்.

கை என்பது தமிழ்ச்சொல்.   தோளிலிருந்து தொடரும் இரு உறுப்புகள். கரம் என்பது மற்றொரு சொல்.

கேசம் என்பது முடி. இங்கு தலைமுடி.  கேசி முடியை உடையவள். இது கேயி என்றும் திரியும்.  சகர யகர ஒலிமாற்றம்.

கைவரை நீண்ட முடி உடையவள். முடியழகி.

கேகய நாடு என்று ஒரு நாடு சொல்லப்படுகிறது.  கேகய நாட்டினள் "கைகேயி"
என்றும் சொல்லமைப்பைத்  தருவர். கேகய நாடு என்பது கைவரை முடியுடைய பெண்ணின் பிறந்த ஊர் என்றும் விரிப்புறலாம். இராமாயணப் பெயர்களில் பல இயற்பெயர்கள் அல்ல.  பத்து இரதங்களை உடையவன் தசரதன் என்பது ஓர் காரணப்பெயர்.

பேச்சில்:

1.   நீட்டமுடிக் காரி:    மறுபெயர்:  கைகேயி.

2   நீட்டமுடிக்காரியின் ஊர்:    மறுபெயர்:   கேகய.

பிற சுவையான திரிபுகள்:

கேரளம் - கைராளி.
சீலம் -  சைலம் > ஷைலஜா.  ஒழுக்கத்தின் உறைவிடமான அம்மன். ஒழுக்கமான வாழ்வில் தோன்றியவள்.

தமிழில்:

தைவருதல் -  தேய்த்தல்.   [ தேய் > தை.]  இது ஏகாரம் ஐகாரமாய்த் திரிதல்.
 இன்னும் பல திரிபுகள் உள்ளன;  அத்துணை எளிதல்ல.

தை >  தைத்தல்.

தைதல் என்ற தன்வினைச் சொல் இல்லை.(  தைகிறான், தைகிறாள் இன்ன பிற )  வழக்கிழந்தது.  இது நடந்தபின் அதைச் சரிசெய்ய தைவருதல் என்ற வினை தோன்றிற்று.  இது சங்க இலக்கியங்களில் கிட்டும் சொல். தைலம் என்ற சொல்லும் மிக்கப் பழையதே. அது சங்க இலக்கியத்தில் இல்லாவிட்டாலும் பழையதுதான். யாரும் எழுதிவைக்காத சொல்லெல்லாம் புதியது என்பது மடமையாகும்.  வீட்டில் தேய்க்கும் மருந்து அல்லது எண்ணெய்.  வீட்டுப் பேச்சில் வாழ்ந்து நம்மிடம் வந்துள்ளது.  தைலம் பற்றிய இடுகை காண்க.

வான்மீகி ஒரு சங்கப்புலவன் என்பது எம் முடிபு. பிறர் ஒப்புவதால் அல்லது ஒப்பவில்லை என்றால் ....................................................

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

அகம் பிரமஸ்மி

இவ்வுலகில் எத்தனையே உடல்கள் உயிருடன் உலவுகின்றன. இவற்றின் உயிர்கள் இறைவனை ஒப்பிடுங்கால் மிக்கச் சிற்றளவிலானவை. எல்லையற்றோன் இறைவன்  --  என்று எல்லா வேதங்களும் ஓதுகின்றன.

உடல் நமக்கு உள்ளது;  அதனுள் ஆன்மாவும் உள்ளது.  நாம் ஒவ்வொருவரும் நான் என்று தன்னைக் குறித்துக்கொள்ளும்போது  அந்த "நான் " எது?  உயிரா அல்லது உடலா?

நான் என்பது இவ்வுடலில்லை.  நான் வெளியேறிய பின் இவ்வுடல் அசைவற்று இயக்கமற்று விறகுபோல் கிடக்கும்.  அப்போது  அது எல்லா உணர்ச்சிகளையும் இழந்து கிடக்கும். உயிர் போய் விட்டதென்பார்கள். " நேரமாகிவிட்டது;  சீக்கிரம் தூக்குங்கள்" என்று பேசிக்கொள்வார்கள்.

குடம்பை தனித்தொழியப் புள் பறந்துவிட்டது என்று வள்ளுவனார் கூறியது இந்நிலைக்கு முற்றப் பொருந்துமொரு வாக்கியமாகும்.  அப்போது சிலர் துயர்தாங்காது அழுதுகொண்டிருப்பர். பட்டினத்தடிகள் சொன்னதுபோல இன்று செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணங்கள் அழுதுகொண்டிருக்கின்றன என்பதே முற்றுமுண்மை ஆகும்.

இக்குடம்பை தனித்தொழியப் பறந்துவிட்டதே அதுதான் ஆன்மாவாகும்.  நான் என்று நாமெல்லாம் குறித்துக்கொள்வது இவ்வுடலன்று; இவ் ஆன்மாவே யாகும்.

இவ்வுடல்பால் உள்ள பற்றினை முற்றும் அறுக்கவேண்டுமென்பதே பெரியோர் நமக்குரைப்பது ஆகும்.   தாயுமானவர் கூறியதற்கொப்ப  எல்லா மலங்களும் ஊறித் ததும்பும் மெய்யுடன் உங்கட்கு உள்ள தொடர்புதான் என்ன?
உங்கள் உடல்கள் நீங்கள் அல்ல.

ஒவ்வொருவரும் நான் இவ்வுடல் அன்று என்று உணர்வேண்டும். அகத்திருப்போன் உங்கள் பெருமான் ஆவான். அவன் ஆன்மாவுடன் ஒற்றுமை முற்றுடையோன்.  ஒரு பெருங்காந்தத்திலிருந்து தெறித்து விழுந்த துண்டு கவர்ந்துகொள்ளுமாற்றலும் உடையது.  அதுபோலவே.

நான் வேறு. இவ்வுடல் வேறு.  " அகம் பிரமஸ்மி".

நான் இவ்வுடல் என்பதோ அகங்கார மெனப்படும். இஃது பூதவுடல்.

பூத்தல் - தோன்றுதல்.  பூ+ து + அம் =  பூதம்.  (தோன்றியது).   தோன்றிய உடல் இறப்பது.  தோன்றாமை ஆன்மாவின் அழிவிலா உண்மை.

பூ -  பூத்தல் : தோன்றுதல்.  பூ+ம் + இ = பூமி:  தோன்றியது.  மகர ஒற்று ஓர் இணைப்பொலியாகும்.

யானே பிரம்மன். இவ்வுடல் வேறு.