புதன், 7 பிப்ரவரி, 2024

யாதவர்போல் நாயுடு -- நாயும் நாகரிகமும்




ஆடு மாடு முதலிய வளர்ப்புகள் போல் நாயும் நீண்ட காலமாகவே மனிதருடன் கூட்டுறவுள்ளதாக வாழ்ந்து வந்துள்ளது. நாயின் தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகட்கும் மேலானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவற்றுள் முதன்மை வாய்ந்ததாகச் சென்ற இருபதினாயிரம் ஆண்டுகளைக் கூற முடியுமென்கிறார்கள். நாய்கள் ஓநாய்களிலிருந்து சிறந்தமைந்தவை என்று கூறுகிறார்கள்.

ஆடு மாடுகள் வளர்ப்போர் ஒரு முக்கிய இடத்தைத் தமிழ் நாகரிகத்தில் பிடித்துள்ளனர். ஆயர் குலமென்று போற்றப்பட்டு யாதவர் என்றும் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் வேடர்களே நாய் வளர்த்தனர் என்று கூறப்பட்டாலும், வேடருக்குத் தனிச்சிறப்பு அளிக்கும்படி நாயுடன் தொடர்புடைய பெயர்களால் அவர்கள் குறிக்கப்பட்டன ரென்று யாரும் எழுதியுள்ளதாகத் தெரியவில்லை.

1. முல்லை நிலம் 2. ஆயர் குலம் 3 இடைக்குலம், 4 யாதவர் முதலிய பெயர்கள் சிறப்புடைமை காட்டுவனபோல் நாய் வளர்த்தோருக்கு இடமிருப்பதாகக் கூறப்படவில்லை என்று தெரிகிறது. எனினும் காடுகளில் மனிதர்கள் வாழ்ந்து சில குலங்கள் காட்டிலிருந்தே நாட்டுக்குப் பெயர்ந்து மேன்மை அடைந்தனரென்று தமிழாசிரியர் யாரும் வெளிப்படுத்தவில்லை. இதை இப்போது ஆராய்வோம்.

பெரும்பாலான ஐரோப்பிய இனங்கள் தமிழரோடு ஒப்பிடுங்காலத்து மிக்கவும் குறுகிய கால வரலாற்றை உடையவர்களே. கல்தோன்றி மண்தோன்றாக காலத்து மூத்த குடியினரானவர்கள் எழுதப்படாத நீண்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். அதனால்தான் நாய் போன்ற உயரிய விலங்கினோடு ஒத்துழைப்பு இருந்திருந்தாலும் அது எழுதப்படாமையால் அல்லது விளக்கப்படாமையால் இன்று படித்தறியும்படியான வரலாறுகள் எவையும் இல்லை.

நாய்க்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. ஞமலி என்பது நாயைக் குறிக்கும்.  திறந்த வாயுடன் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு திரிவது. ( பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி, தொகு வாய் வேலித் தொடர் வளை மாட்டி, பெரும்பாணாற்றுப்படை 112-3 ). இன்னும் சில: மனிதருடன் தொடர்பிலிருந்த விலங்கு நாய் என்று புறநானூறு சொல்கின்றது. தொடர்ப்படு ஞமலி என்று நாய் குறிக்கப்படுவதற்கு இதுவே காரணியாகும். நாய்க்குக் கூரிய நகங்கள் இருந்தன என்று பட்டினப்பாலை தெரிவிக்கின்றது. நகம் என்பது நகுதல் ( வெள்ளொளி வீசுவதுடையது) என்பதனால் ஏற்பட்ட பெயர். உகிர் என்பது உ+ கு+ இர் : விரலில் முன்னிருப்பது என்ற பொருளுடைய சொல். இர் என்பது இல் என்பதன் திரிபு: இடப்பொருளதாகும். இது ஒரு சுட்டடிச் சொல். இர் என்பது இரு ( இருத்தல்) என்பதன் அடிச்சொல்லுமாகும். குறு> கு> குக்கு> குக்கல் என்பது சிறு நாய் வகை. ஞாளி என்பது வலம்புரித் தோகை உடையது என்று அகநானூறு கூறுகிறது. ஓளி குன்றிய இடத்தில் நாயை வேலையில் ஈடுபடுத்தினால் அவை சோர்ந்து விடுமென்று குறுந்தொகை தெரிவிக்கின்றது. நல்ல வெளிச்சமான நேரங்களில் நாய்களை ஈடுபடுத்த வேண்டுமென்பது குறிப்பு. இவை இங்கு விரிக்கப்படவிலை. இவை உங்களுக்கு இலக்கியச் சுவை.


நாய் வேட்டைக்கு முதன்மை வாய்ந்த விலங்கு எனினும் மேலும் ஆடுமாடு மேய்ப்பதற்குப் பேருதவி புரியும் என்பது தெளிவான செய்தி எனினும் இதன் பங்கு பேரளவில் போற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

சீனாவிலிருந்து வரும் நாய்கள் சிங்கப்பூரில் பதினையாயிரம் வெள்ளிவரை விலைபெறுவதாக அறிகிறோம்.

நாயைப் பற்றிக் கிடைக்கும் சொற்கள் மூலம் நாயுடன் பண்டை த் தமிழர் கொண்டிருந்த தொடர்பினைச் சிறிதளவே அறியக்கூடும். உங்களுக்குத் தெரிந்த தமிழ் நூல்கள் இது பற்றிச் சொல்வதை நீங்கள் அறிந்திருந்தால் இவ்விடுகைக்குப் பின்னூட்ட மிடுவீராக.

இங்கு நாம் சொற்களைக் கொண்டே இதன் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.

நாயுடு என்பது ஒரு குலப்பெயராய் உள்ளது. இங்கு உடு என்பது உடன் செல்லுதலைக் குறிக்கும். வேட்டையின்போது நாயுடுகள் நாயுடன் சென்றனர். வேட்டையில் ஈடுபட்டனர். இன்னொரு வழியிற் பார்த்தால் உடுக்கோன் என்பது சந்திரனை ( நிலவை) க் குறிக்கும். உடு என்பது விண்மீனுமாகும். ஆகவே வேட்டையிற் சிறந்தோர் என்றும் நாயுடன் சென்றோர் என்றும் பொருள் தெரிவிக்க வேண்டும். STARS IN HUNTINGS WHO WENT WITH DOGS என்று இதற்குப் பொருள் தெரிக்கலாம் என்று அறிக.


நாயகர் என்பது அகத்தில் நாய்வைத்துக் காவல் மிகுத்தோர் என்ற பொருள் தருகிறது. இது பின் நாயக்கர் என்று திரிந்துவிட்டது. நாயகக் காரர் என்பதே பின் நாயக்கர் என்று திரிந்தது. வீட்டுக்காவலுக்கு நாய்கள் வைத்திருந்தவர்கள் என்பதாம் பொருள். நாயர் என்பது இடைக்குறை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: