புதன், 30 நவம்பர், 2022

கு, கூ. குடு, குவ, குவி முதலான அடிச்சொற்கள் விளக்கம்.

 கு என்ற ஒலிக்கு மிகப் பழங்காலத் தமிழில்  " கூடியிருத்தல்",  "சேர்ந்து(வாழ்தல்)"   "ஒன்றாகவளர்தல்"   என்றிவ்வாறான பொருண்மைகள் அடிப்படையாக இருந்தன என்பதை இற்றை நாள் ஆய்வுகள் தெரிவித்தல் தெளிவு.  இப் பொருண்மை தெரித்தலில்,  குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடுகள் இல. கூடு என்பதும் இணைந்திருத்தல்  குறிக்கின்றது.  குடு  ( குடும்பம்,  குடி)    என்பதும் அவ்வாறே இணைந்திருத்தலைத்தான் குறிக்கின்றது. கூடு என்பது குருவிகள் கூடிவாழ் இடத்தினைக் குறிக்கிறது என்பதையும்,  மனிதன் செய்துவைத்த கூண்டு என்பது இவ்வடிச்சுவடுகள் பற்றியமைந்த சொல் என்பதையும் அறிய எறிபடை  அறிவியலைத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தான் சொற்கலை* ( சொல்லின் கலை அல்லது கல்வி )  நமக்கு நுகர்பொருளாயும்  பரிமாணம் அடைந்துள்ளது.  

குவி(தல்).  குவவு(தல்), 

குவிந்த வேர்வகை,  குவா என்று  ஆவிறுதி பெற்றமைந்ததுடன்,  கூவை என்றும் நெடின்முதலாயும் அமைந்தது காண்க.   குவி > குவா,  இது  கல் > கலா என்பதுபோலும்,  காண்க.

குவிந்ததுபோலும் ஒரு சிப்பி,  குவாட்டி என்னும் பெயரினதாயிற்று.

குவியுருவினதாய பாக்கு,  குவாகம் ( குவி+ அகம்).

குவளை -  குவியுருவக் கடுக்கன்.

குவளை - குவியுருவின் மலர். 

குவளை மாலை யணிந்தார்,  வேளாண்மக்கள்,  எட்டியணிந்தார் செட்டிகள் போலுமேயாகுவர்.

இனிக் கூடி யிருக்கும் , வாழும் ஊர் குவலிடம் எனப்பட்டது.

நாம் வாழும் ஊர் . நம் ஊர்.   அப்பால் உளளது உலகம்.   அப்பால் என்பதை "அ" என்ற சேய்மைச் சுட்டு உணர்விக்கும். 

குவ >  குவல் >  குவல்+ அ+ அம் (விகுதி) >  குவல+ய்+ அம் > குவலயம்.

குவ> குவல்  ( குவ+ அல் )  - அல்:  சொல் இடைநிலை.

ய்  -  யகர உடம்படு மெய்.

அம் -  அமைந்தது குறிக்கும் இறுதிநிலை ( விகுதி).

குவலிடம் -  குவிந்து வாழும் ஊர்.

குவலயம் -   சூழ் உலகு..

குறிப்புகள்

பரிந்து மாணுதலே பரிமாணம்.  பரிதலாவது உள்ளிருந்து புறம்வருதல் (  சிறந்து விரிதல்.பின் மாணுறுதல் ).  இச்சொல் எழுத்து முறைமாற்று அமைப்பில் விசிறி > சிவிறி என்றமைதல் போல்,  பரிணாமம் என்று மாகும். இன்னோர் எ-டு:   மருதநிலம்சூழ் நகரம்:    மருதை > மதுரை.  இதைப் பண்டை மக்கள் மருதை என்றே அழைப்பினும்,  மதுரை என்று சொன்னது கல்வியுடையார் செய்த திரிபு என்று முடிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.

எழுத்துப் பிழைகள்  - பின்னூட்டமிட்டு உதவுக.

திருத்தம்: சொற்கலைதான், " சொற்களை"  அன்று. கற்கப்படுவது எதுவென்றாலும் அது கலை. கல்( கற்பது என்பதன் வினைச்சொல்) > கலை.


கருத்துகள் இல்லை: