புதன், 11 டிசம்பர், 2019

முன் கவிதை நினைவுகள்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் வாழ்ந்து மறைந்த இனுக்கா (என்னும் பெயரிய )  கரடி நினைப்பு வந்துவிட்டது.  பாவம் இந்தத் துருவக் கரடி. இது வெள்ளை நிறப் பனிப்புலக் கரடியாகும். யாமெழுதிய அகவற் பா முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.   அந்தப் பா சென்று முடிந்தது இவ்வாறுதான்:

என்றினிக் காண்போம் இனுக்காக் கரடியே
மென் துணை புரந்தாய் நீயே
நன்றினி நினைத்துப் புலம்புவ தன்றியே

அந்த விலங்கியல் தோட்டத்தில் நட்பார்ந்த மென்மைசேர் துணையாய் அஃது இருந்ததை " மென் துணை புரந்தாய் நீயே " என்ற வரி நினைவுபடுத்தியது.

பனிவளர் மலைப்பகுதி பற்றியும் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அது:

"கட்டிப் பனிமலைகள்
காணும் இடமெங்கிலும்
ஒட்டிச் செலவியலா
ஒப்பில்  குளிர்வதைப்பே" 

அங்கு ஒரு நரி கிடந்தது:

பனியிற் சுருண்டபடி
படுத்திருக்கும் நரிதான்
தனிமைத் துயர் அறியா
தலைமை விலங்கினமோ

என்று வருணித்திருந்தேன்.

தனித் துயரும் தனிமைத் துயரும் தீர்க்கும் மருந்து தமிழ்க் கவிதைதான்.
கவலையைத் தீர்ப்பதும் கனித்தமிழ் கவியே.

கருத்துகள் இல்லை: