சனி, 7 டிசம்பர், 2019

ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ (ஆடகம்)

ஆட்சி செய்தல் என்பதைக் கருதுகையில் இது மனிதனை மட்டுமின்றி ஏனைப் பொருள்களையும் ஆளும் பொருளாகவும் ஆளப்படும் பொருளாகவும் உட்படுத்தும்.  நக்கத்திரங்களும் மனிதனை ஆட்சிபுரிவதாகச் சோதிட நூல்கள் கூறும்.  நக்கத்திரம் சொரிகின்ற அல்லது சோர்கின்ற கதிர்கள் நம்மை வந்தடைந்து நம் நடவடிக்கைகளை  ஆதிக்கம் புரிவதனால், சோதிடக் கலைக்கு அப்பெயர் வந்தெய்தியது.

சோர் + து + இடு + அம் =  சோர்திடம் > சோதிடம் ஆயிற்று. அல்லது
சோர்+ திடம் > சோதிடம் எனினுமது.

சோரும் அல்லது சொரியும் கதிரலைகள் நம்மேல் இடப்படுவன, நம்மை ஆள்வன.

மேகநீர் இடைந்து தளர்ந்து உருகி மழையாகச் சோர்ந்து சொரிகிறது...!!!

குளிர்க்கட்டி சோர்ந்து நீரைச் சொரிகிறது.

சொரி <> சோர்.

சேர் > சோர் > சார்.

இவை நிற்க.

இப்போது ஆடகம் என்ற யாம் கருதிய சொற்கு வருவோம்.  இதை ஆள்+தகம் என்று பிரிக்கலாம்.   தகமென்பது தகு+ அம் = தகம். மற்றும் தக+ அம் = தகம்.

தக, தகத்தக என்பது ஒளிவீச்சுக் குறிப்பு.  பொன்னும் தங்கமும் ஒளிவீசுவன.

தகத்தக என ஒளிவீசி நம்மை ஆட்சிசெய்வது,  எனவே:  ஆள் + தக+ அம்.

இது "ஆடகம்"  என்றாகும்.

ஆடகமாவது பொன்.  இது பொன்னில் ஒரு வகை என்ப.

ஆடகம் என்பது ஆடுமிடம் என்றும் பொருள்தரும்.  இது ஆடு+ அகம்  எனப் பிரிப்புறும்.  கூத்தாட்டு அவைக்குழாம் எனினுமது.

ஆக இருபொருளது இச்சொல்.

சிலப்பதிகாரத்திலும் சைவத்திருமுறையிலும் ஆடகப் பொன் பற்றிய குறிப்புகள் உள.

"ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றுமின்றும் என்றுமே என் ஆவியடி நீ"

(கண்ணதாசன் வரிகள் .)

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் திருத்தம்  - பின்.




கருத்துகள் இல்லை: