வெள்ளி, 20 டிசம்பர், 2019

பல்வேறு சொற்புனைவுகள். இவற்றுள் "இரு(2)" எப்படி வந்தது?

இருக்கிறான் இருந்தாள் முதலிய முற்றுக்களில் முன்நிற்கும் இரு என்னும் வினை இன்று இடம் குறிக்கும் உருபாகவும்  இல்லம் குறிக்கும் சொல்லாகவும் உள்ள "இல்" என்பதினின்று வந்தது என்பதே முடிபு  ஆகும்.

இல் >  இரு.  (வினைச்சொல் : இருத்தல்).

இடமென்ற சொல்லும் இடு என்பது மிகுந்தானதே  ஆகும்.   இடு + அம் = இடம் என்பதறிக.  இஃது அம் என்னும் விகுதியேயன்றி ஐ என்னும் விகுதியும்  (<மிகுதியும்) பெறும். இடு + ஐ = இடை. அப்போது  இரு இடங்கட்கு இடைப்பட்டது -  நடுவிலது -  என்றொரு சிறப்புப் பொருளையும் உணர்த்தவல்லது. தமிழின் ஏனை  இனமொழிகளில் (திராவிட மொழிகளில் ) இஃது இடம் என்றே பொதுப்பொருள் கொண்டிலங்கு மென்பதும்  அறிக.

இடைபடுதல் ("மூக்கை நுழைத்தல்" என்பது அணியியல் வழக்கு) என்ற வினைச்சொல்லும் உளது.  இடைப்படுதல் என்பது இடையே  வந்திருத்தல் என்பதுபோல் பேச்சில் வருதல் அறியலாம்.

இடு > இரு என்பவற்றின் அணுக்கமும் உணர்க. மடி > மரி என்பது  போலவே இத்திரிபுமாம்.

ஒன்றினோடு இன்னொன்று (வந்து) இருக்குமாயின் அது ஒன்றிற்கு அடுத்த
"  இரு "  அல்லது இரண்டு ஆகும்.  இருத்தல் என்ற வினையடியாகவே இரண்டிற்கும் எண்ணுப்பெயர் வந்துள்ளது காணலாம். ஒன்றை அண்டி இருப்பதே இரு+ அண்டு =  இரண்டு ஆகும்.  அண்டி இரு ( ஒன்றை அண்டி இரு) என்பது முறைமாற்றிச் சொல் அமைந்துள்ளது.  இவ்வாறு  சொல் அமைத்தல் பிற்காலத்தில் பல சொற்களில் பின்பற்றப்பட்டுள்ள முறையாகும்.  தொல்காப்பியனார் காலத்திலே " தாரம் தப்புதல்"  ( மனைவியை இழத்தல் ) என்பது " தப்பு + தாரம் "  > தபுதாரம் என்று குறிக்கப்பட்டது.  ( தப்பு > தபு  என்பது தொகுத்தல் அல்லது இடைக்குறை).   அவிழ்க்கும் இரு கைகளை உடைய பெண்டிரின் சட்டை,  இரு+ அவிழ் + கை >  இரவிக்கை ( ழகர ஒற்று இடைக்குறை)  ஆனது காண்க.  நிறுவாகத்தைக் காக்கும் இல்லமானது  :  கா + இல் >  இல்+ (ஆ) + கா = இலாகா ஆனது திறமையே. பலராலும் உணர்ந்திட முடியாத மறைவுப்புனைவு ஆகுமிது.  { இல்லம் ஆகும் காப்பதற்கு > இல்  ஆ கா}

ஆசு பட இருக்குமிடம்  :   இரு+ ஆசு + இ = இராசி.   இதுவும் முறைமாற்றுப் புனைவே. கிரகம் -  கிருகம் என்பது  இரு+ அகம் >  இரகம் > கிரகம் அன்றி வேறில்லை.  இரகம் என்பது சிரகம் என்று மாறிப் பின் சி என்பது  "கி" ஆகி,     கிரகமானது என்று விளக்கினும் அதுவே.  இராசிநாதன் இருக்கும் இடமே இரு அகம் > கிரு அகம் > கிரகம்.  (  இறகு > சிறகு ).(சேரல் > கேரளம்)

ஆசி என்பது நன்மை நடக்குமாறு  பற்றுக்கோட்டினை வழங்குவதே.  ஆசீர்  என்பது சீராகுக என்பதன் முறைமாற்றுப் புனைவு.  இதன் ரகர ஒற்று மறைந்து ஆசி ஆனது.  ஒரு  முண்டு ( துண்டு, துண்டுத்துணி)  தலையினை ஆசுபடப் பற்றி நிற்க,  அது முண்டாசு ஆகும்.  ஆசீர்வாதம் என்பதில் வாதம் என்பது வாதநோயைக்  குறிக்காது.  வருக தமக்கு ஆகும் சீர் என்பது வாக்கியம். இது  ஆ + சீர் + வா + தம் ஆனது.  வா = வருக; தம் = தமக்கு;  ஆ  =  ஆகும் ;  சீர் = நன்மை.

ஆகும் சீர் :  ஆசீர்,  இது ஆகு + ஊழ் =  ஆகூழ் என்ற பழம்புனைவு போன்றது.  ஆகுபெயர் என்பது இலக்கணக் குறியீடு.

வட்டமாகவோ நான்மூலையாகவோ மாவால் உருச் செய்து அதை சுடுகல்லில் ஒட்டி எடுப்பது:  உரு+ ஒட்டி =  உரொட்டி >  ரொட்டி. இது வேறுவழியிலும் விளக்குறலாம் ஆகையால் இருபிறப்பி ஆகும்.  வகர உடம்படு மெய் சொல்புனைவில் வேண்டியதில்லை.  சொல்லுருவில் துய்யது உரு+து மொழி,  அரபு கலந்தமையின். து விகுதி எனினும் ஒக்கும். படைவீடுகளில் பேசப்பட்டது என்பது கதை.  தெற்குக் கணத்தில் வழங்கிய மொழி தெற்காணம் = தெக்காணம், > தக்காணம் > தக்காணி.

பல்வேறு சொல்லாக்க முறைகளை அறிந்தோம்.

எழுத்துப் பிசகுகள் பின் திருத்தம்பெறும்

கருத்துகள் இல்லை: