ஞாயிறு, 15 ஜனவரி, 2017

மீனாட்சி சுந்தரம் பிள்ளை " நாற்காலி"



ஒரு சமயம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்னும் பெரும்புலவருக்கு ஒரு நாற்காலி தேவைப்பட்டது. அதை எப்படிப் பெறுவது என்று எண்ணிப்பார்த்துத் தம் மாணாக்கரான ஞானப்பிரகாசம் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஒரு கவிதையாய்
அமைந்தது. அதில் ஒரு பாட்டு, அவர் கேட்பது என்ன " நாற்காலி" என்பதை  நகைச்சுவை உணர்வுடன் விவரித்தது. அது வருமாறு:

உறுவலியின் இடங்கொண்டு வனப்பமைந்த
நாற்காலி ஒன்று வேண்டும்;
மறுவறு நாற்காலி எனல் யானையன்று
குதிரையன்று வல்லேறன்று
கறுவகல் பால் பசு அன்றால்; இவையெலாம்
இயங்குதல்செய் கடன்மேற் கொள்ளும்;
பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்
தேயிருக்கப் பெற்றதாமே.

என்பது.

இதன் பொருள்:

உறுவலியின்  ‍~  வலிமையுள்ள; எளிதில் உடைந்துவிடாத.
இடங்கொண்டு ~  கொஞ்சம் விரிவுடைய;
வனப்பமைந்த ~  அழகுடைய;
நாற்காலி  ~  இருக்கை;
மறுவறு ~ குறையற்ற; ( முறைப்படி எண்ணுவதாயின் ...)
நாற்காலி எனல் ~  நாற்காலி என்பது;
வல்லேறன்று  ~  வலிமை பொருந்திய காளை ஆகாது;
கறுவகல் ~  கரிய நிறமுள்ள பெரிதான;
பால் பசு அன்றால் ~ பால் கறக்கும் ஆவும்  அன்று.   ஆல் ‍: இங்கு
அசை; பாட்டில் சந்தம் குறைவுபடாமல் வரும் சொல்.
இவையெலாம்
இயங்குதல்செய் கடன்மேற் கொள்ளும்  = இத்திறத்தன யாவும்
நடக்கும் செயலைக் கடமையாய் உடையவை;
பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்தே   யிருக்கப் பெற்றதாமே = அங்கும் இங்கும் அசையாது நானிட்ட‌ விடத்து இருக்கக் கூடியதாகும். பெறுபவர்பால் : ஏற்பவர் பாங்கில். என்றவாறு.

நாற்காலி என்ற சொல் நான்கு கால்கள் உடையது என்று காரணம் விரித்துக் காட்டுவதாகும். .  இருப்பினும் காரண இடுகுறி யாகையால், யானை
குதிரை முதலியவற்றைக் குறிக்கமாட்டாது. அது மாணவர் ஞானப்பிரகாசம் பிள்ளைக்கும் தெரியும். பின் ஏன் இந்த விளக்கம் தேவைப்பட்டது?

"ஞானப்பிரகாசா! நான் பெரிதாக எதையும் கேட்கவில்லை.
ஒரு மர நாற்காலிதான் கேட்கிறேன். எனக்கு அதைத் தந்து
உதவமாட்டாயா?" என்பதுதான் செய்தி. " பெரிதாகக் கேட்டு உன்னைத் தொந்தரவு செய்பவன் நானல்லேன்" என்பதே இங்கு
சூழ்ச்சுமமான உட்பொருள்.

(  சூழ்ச்சுமமான  :  பொதிந்து மறைத்துவைத்த.   இதைச்  சூட்சுமமான என்று எழுதுவர். சூழ்தல் ‍ : ஆலோசித்தல். சூழ்ச்சுமம் ‍:
ஆலோசித்து அமைத்தது. சூழ்+சு+ம் + அம்.  சு மற்றும் அம்: விகுதிகள்
ம் : ஒரு  சொல்லமைப்பு இடைநிலை.  )

இயங்காத பொருள் நாற்காலி. ஏனையவை ஓரிடத்து நில்லாதவை.

"யானை குதிரை நீ கொடுத்தாலும் என்னால் அவற்றின் பின் ஓடி
அவற்றை அடக்கமுடியாது. எனக்கும் அவற்றிலேதும் தேவையில்லை. நாற்காலி என்பதை காரண இடுகுறியாகவே வழக்கில்போல் இங்கு பயன்படுத்துகிறேன்."

ஒரு சொல்லின் சொல்லமைப்புப்  பொருள் வேறு.  வழக்குப் பொருள் வேறு 
என்பதை நன்குணர்ந்த பெரும்புலவர்  அவர்.

Has been edited. Hackers or their software may make  wilful changes, Will review..
Inherent paragraphing flaw in the posting software. Pl ignore. 
These apply to all our posts.  

கருத்துகள் இல்லை: