வியாழன், 9 ஆகஸ்ட், 2018

சென்ற ஆண்டு சுமங்கலிப் பூசை: உழைத்தோர் சிலர்

பூசைக்குமுன் துர்க்கையம்மனுக்கு



வந்தருள் தேவிதுர்க்கா---எம்
சிந்தையிற் செம்மையைச் சேர்ப்பவளே;
நந்தாத நல்விளக்கே--- எந்த
நாளும் எமக்கருள் நல்கிடுவாய்.  1

ஆயிரம் கண்களினால் --- பல்
லாயிரம் அன்பரைக் காப்பவளே
போயின காலவினை--- தமைப்
போக்கிடு வாய்வலம் ஊக்கிடுவாய்.  2

நாயெனக் குன்றிடாமல் --- சிவ
நாயகன் நல்லருள் நல்கிடவே
நீயே துணைபுரிவாய் --- இந்த
நீணிலத் தில்லையே ஓர்புகலே  3

கனவிலும் நனவிலுமே--- எம்
மனம்மற  வாமல்  தினம்நிறைந்தே
வனம்வளர் வாசமலர் ---  போல
வாழ்வு வளம்பெற   வாவிரைந்தே. 4

இல்லைஎன் பார்நாவினால் --- வரும்
சொல்லைப் புறம்தவிர்த் துள்ளில்பயன்
கொள்ளும் கனிதருவாய் ---  அந்தக்
கோலநிலை இன்று நனிதருவாய். 5

இணைபிரி யாமலும்நீ ---  சிவத்தொடு
இன்றுமன் றும்மினி என்றும்நின்றாய்
புணையுனை நாங்களுமே --- உன்
போலும் இணைந்திடப் புரிந்திடுவாய். 6

அன்னையும் தந்தையுமாய் -- வந்து
ஆழ்கடல் துன்பினில் வீழுறாமல்
முன்னைஉன் காவலைப்போல் --- இனி
இன்னும் அருள்புரி இன்னொளியே.  7

நீதா  னிலையென்னிலோ  --- இங்கு
ஆதார மென்பதும் யாதுமுண்டோ
மாதா வெனக்கூப்புகை --- எதிர்
மறைகள் இலாமல்  குறைதவிர்ப்பாய்.  8

ஆண்டருள் அம்மைநீயே --- யாம்
அகதிகள் அன்பொடு காத்திடுவாய்;
நீண்டிருள் ஈண்டிடுமுன் --  துணை
பூண்டெமைச்  சூழ்புயல் தாண்டிடவே.   9





புதன், 8 ஆகஸ்ட், 2018

சரி என்ற ஒப்புதற் சொல் அமைவது....

சரி என்ற சொல்லைப் பற்றி நீங்கள் ஆய்ந்தோ அறிந்தோ இருக்கலாம். என்றாலும் இப்போது அதையும் தெரிந்துகொள்வோம்.

சரிதல் என்பது வினைச்சொல் அது சாய்ந்து விழுதல் என்று பொருள்படுமேனும் அதிலிருந்து  சரியென்பது சொல்லாவது கடினமே.  சரியென்பது  ஒப்புதலைக் குறிக்கிறது.  ஆம் என்று சொல்வதற்கு ஈடாக அது வழங்கி வருகிறது.

ஒருவன் ஒன்றைச் சொன்னால் அவன் சொன்னதைச் சார்ந்து நிற்பதே ஒப்புதல் ஆவது.  மறுத்து நிற்பது சரி என்பதனுள் அடங்காது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

சார்ந்து நிற்பது என்பதற்கான வினைச்சொல் "சார்தல்" என்பதாகும்.

சார் என்ற வினை நெடிலில் தொடங்குகிறது.

சார்+ இ =  சரி.

இங்கு சார் என்ற வினை முதனிலை திரிந்தது.  முதனிலை என்பது முதலெழுத்து என்பதைக் குறிக்கும்.  இ என்ற தொழிற்பெயர் விகுதி இணையவே சார் என்ற நெடில் தொடக்கத்து வினை சர் என்ற குறிலாகிப் பின் இ என்ற விகுதியைப் பெற்றுச் சொல்லாகிறது.

இதுபோல அமைந்த வேறு சொற்கள்:

சவம்.   ( சா+வு+ அம் : இதில் சா என்பது சகரக் குறிலாகிற்று.).

தொண்டை ( தோண்டு+ஐ :  இதில் தோண்டு என்பதன் முதலெழுத்து தொ என்று குறிலாகிப் பின் சொல்லில் ஐ விகுதியை பெற்றுக்கொள்கிறது....  தோண்டை என்று சொன்னால் நன்றாக இல்லை என்பதையும்  கவனிக்கவும்.  )

இனிய ஓசை பிறக்கும்படியாகவும் வினைப்பகுதியின் பொருள் எண்ணத்தடையினை ஏற்படுத்தாவண்ணமும் சொல் அமையவேண்டும்.  தமிழ் இதனை நன்`கு கவனித்துக்கொள்கின்றது.

காண் > கண்.  முதனிலை குறுகிப் பெயராகின்றது.

மூக்கு என்ற சொல்லைப் பாருங்கள். 

இதில் முன் என்பதற்கான முதலெழுத்து மூ என்று நீண்டு,  சேர்விடம் குறிக்கும்  கு என்ற விகுதியைப் பெறுகிறது.  இந்தக் கு  சென்னைக்கு, செங்கற்பட்டுக்கு என்பவற்றில் வரும் சேர்விடம் குறிக்கும் கு என்ற உருபையே விகுதியாய்ப் பெறுகிறது.  1. மு > மூ;  2. கு .  இரண்டும் இணைந்து மூ+கு = மூக்கு ஆகிற்று. முன்னுக்கு ( அதாவது முன்பக்கம்  ) இருக்கும் உறுப்பு என்று பொருள்.

இங்கு அமைந்த மூக்கு என்ற சொல்லோ முன் காட்டிய தொண்டை முதலியவற்றுக்கு எதிர்மாறாக முதனிலை நீட்டம் அடைந்து பெயராகிறது.

சொல்லுக்கேற்பத் தந்திரம் வேறுபடும்.

மூத்தோர் சொல்லையும் அறநூல்களின் விதிகளையும் சார்ந்து நடப்பவன் சாரியன் எனப்படுவன்  சார்ந்து நடப்பதாவது ஒத்து நடப்பது.  சார் + இயை+ அன் = சாரியன்.  இதில் இயை என்பது இய என்று மாறிச் சார்+ இய + அன் ஆகிப் பின்பு ஓர் அகரம் வீழ்ந்து அல்லது கெட்டு,  சார்+ இ + அன்  =  ஆகிச்   சாரியன் என்று அமைந்து சொல்லாகிறது.  இது சரியன் என்று முதனிலை குறுகவில்லை என்பதைக் கவனிக்கவும்.

சாரியைவன் என்று புனைந்திருக்கலாம்.  அதனினும் சாரியன் என்பதே நல்ல குறுக்கமுள்ள சொல் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். இயை என்பதில் இய என்பதே அடிச்சொல். சாரியன் என்ற பதம் அடிச்சொல்லையே பயன்படுத்துகின்றது காணலாம்.

சார்ந்து ஒழுகுதல் சாரிதம் எனவும் படும்.  சார்+ இது + அம் = சாரிதம்.  இது பருவதம்  (பரு+ இது + அம் = பருவதம் போன்றது.

இங்கு சரி என்ற சொல்லையும் வேறு தொடர்புடைய கருத்துகளையும் அறிந்தின்புற்றீர். நன்று.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

இரங்கல் - கலைஞர் கருணாநிதி.

அமிழ்தென்று நாம்போற்றும் ஆர்ந்த  மொழியாம்
தமிழுக்குத் தொண்டுபல செய்த பெருமகனார்
நற்கலைஞர் காலமானார்  நாமே இரங்குகிறோம்
தெற்குவளர் தெள்ளியரன்   னார்.

How Karuna used films Tamil to aid Dravidian ideology

https://www.deccanherald.com/national/how-karuna-used-films-tamil-686541.html

Tamil Lit:

His commentary of Kural.

His commentary of Tolkappiam,

TV Drama on Ramanuja.

ஊழல் தலைதூக்கியது

 இந்தியாவின் ஒரு பெரும்பல்கலைக் கழகத்தில் சில
ஊழல்கள் தென்பட்டனவாம். அதுபற்றிய கவிதை இது.



பேராசி யருடன்நீ   இணைந்து நிற்பாய்
பெருமுனைவர்ப் படடம்பெறு  பிழைத்துக் கொள்வாய்

ஏறாத மலைகளிலே இறங்கி  ஏறி
என்னென்ன செய்திடினும் கிடைக்காக் குன்றம்;

வாராது வருமணியைப் புகழ்ந்து பாடி
வந்தடைந்த வரவினொடு உறவு கொள்வாய்!

நேராத தனைத்தினையும் நிகழச் செய்வாய்,
நீதானே உலகத்தில் நிமிர்ந்து நிற்பாய்!


ஊழலுக்கு மசியாத உயர்ந்தோன் உண்டோ?
உலகத்தில் எழுதுபவன் உரக்கச் சொல்வோன்,
,
வாழ்தற்குப் பணமென்றால் வசதி,  வாயை
வாவென்று பிளப்பதுவே வழக்கம் ஆகும்,

கூழெனினும் குடித்துவிட்டுக் குறுமை அற்ற
கோலமுறு பெருந்தூய்மை கதைகள் தம்மில்!

வீழ்தற்கும் எழுதற்கும் மனத்தில் அச்சம்
விளைத்துக்கொண் டிருப்போனோ வெருட்சி மன்னன்.



https://tamil.oneindia.com/videos/governor-banwarilal-purohit-seeks-statement-from-vice-chancelor-329740.html 

பெருச்சாளி.

பெருச்சாளி என்ற சொல்லைப் பார்ப்போம்,

இது ஒரு புலவர் புனைவு அன்று என்பது சொல்லைப்பார்த்தாலே தெரிகிறது.

இருசொற்கள் ஒட்டி அமைக்கப்பட்ட கூட்டுச்சொல் இது,  இவ்விரண்டனுள் இரண்டாம் சொல்லில் இறுதியாய்  நிற்பது எலி என்ற சொல்.  எனினும் பெருச்சாளி என்பதில் எலி எங்கே என்று தேட வேண்டி உள்ளது.

சாளை என்ற சொல்லிலிருந்து தொடங்குவோம்.  சாளை என்னும் சொல்லின் பல பொருள்களில் குடிசை என்பதுமொன்று. அது ஒரு வகை மீனைக் கூட குறிக்கும். ஆனால் மீனுக்கு இங்கு வேலை இல்லை.

அந்தக் காலத்தில் பெருச்சாளிகள் அதிகமாகக் காணப்பட்டது  குடிசைத் தொகுதிகள் உள்ள இடங்களில்தாம். அங்கு வாழ்ந்தவர்கள் தின்ற உணவு முதலியவற்றைத் திறந்த வெளிப் பக்கங்களில் வீசி எறிந்து குப்பைகளை மிகுத்து மகிழ்வு கொண்டாடியவர்களாக இருந்தபடியால். இவ்வெலிகள் அங்கு அதிகம் உண்டாயின. இதுமட்டுமின்றி இப்பெரிய எலிகளை அடிக்கக் கூடாது என்று போற்றி வந்ததாகவும் தெரிகிறது.

இந்தச் சாளை எலிகள்  நாளடைவில் சாளிகள் என்று பதமாற்றம் அடைந்தன.

சாளை எலி >சா(ளை எ)ளி >   சாளி.

இப்புணர்வில் ஏற்பட்ட மாற்றங்கள்

சாளை எலி என்றது சாளி என்று மாறியதை மரூஉ என்`க.

சாளையெலி >  சாளெலி > சாளி.

ஐ கெட்டது;  சாள்+எலி > சாள்+(எ)+(ல்)+(இ) >  சாள்+இ > சாளி.

ஐயுடன் எகரமும் லகர ஒற்றும் கெட்டன.

ளகர ஒற்று வந்ததால் லகர ஒற்று வீழ்ந்தது. இவ்விரண்டில் ளகர ஒற்று வலிவானது என்பது இதனின்றும் பெறப்படும்.

இதன்வழி,  குடிசை எலிகளைக் குறிக்கச் சாளி என்றொரு சொல் இருந்தமை யும் பெறப்படும். அஃது இன்றில்லை.

 இவை பின் வேறு இடங்கட்கும் பரவி உருவில் பெரியவையாய் இருந்தமையின் பெரு என்ற அடைமொழி பெற்றன.

பெரு+ சாளி =  பெருச்சாளி.

வலித்தல் விகாரம். (பெருஞ்சாளி என்று வாராது பெருச்சாளி என்ற வந்தது....).
(வலிக்கும்வழி வலித்தல் என்ற தொல்காப்பிய விதி சொல்லமைப்பிலும் பின்பற்றப்பட்டது. அவ்வாறு படுமென்பது முன்னர் இடுகைகளில் உரைக்கப்பட்டது காண்க.

சில விரித்து எழுதப்பட்டன.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

HOW DID YOU GET YOUR SKIN COLOUR.

Researchers agree that our early australopithecine ancestors in Africa probably had light skin beneath hairy pelts. “If you shave a chimpanzee, its skin is light,” says evolutionary geneticist Sarah Tishkoff of the University of Pennsylvania, the lead author of the new study. “If you have body hair, you don’t need dark skin to protect you from ultraviolet [UV] radiation.”
Until recently, researchers assumed that after human ancestors shed most body hair, sometime before 2 million years ago, they quickly evolved dark skin for protection from skin cancer and other harmful effects of UV radiation. Then, when humans migrated out of Africa and headed to the far north, they evolved lighter skin as an adaptation to limited sunlight. (Pale skin synthesizes more vitamin D when light is scarce.)

READ MORE:

http://www.sciencemag.org/news/2017/10/new-gene-variants-reveal-evolution-human-skin-color

by Ann Gibbons 

சவம் தொண்டை நுண்மாண் நுழைபுலம்


கட்புலம் கொண்டு நம் எதிரில் இருப்பதைக் கண்டுகொள்கின்றோம். நுழைபுலம் கொண்டு ஐம்புலங்களாலும் அறிந்துகொள்ள வியலாதவற்றிலும் உட்புகுந்து இது எப்பொருள், எத்தன்மைத்து, எப்பயனது என்று கண்டு அவ்வாறு கண்டதனை இருளிலிருந்து ஒளிப்பக்கத்துக்குக் கொணர்கின்றோம், பேரறிவாளர்கள் இப்படிச் செய்வதை நுண்மாண் நுழைபுலம் என்று சொல்வர்.

ஒரு மாந்தப் பிறவி தனக்குத் தானே இத்தகு நுண் மாண்  நுழைபுலம் இருப்பதாகக் கூறிக்கொள்ளலாகாது. ஆயினும் எப்பொருளையும் நுழைபுலம் கொண்டு அலசுதல் கடமையாகும். காரணம் எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்டல் அறிவன்றோ? நுழைபுலத்துடன் நுண்மாண் என்ற அடைமொழியையும் இணைத்துக்கொள்ளுதல் தற்புகழ்ச்சியாகி விடும். அதைப் பிறர் கூறலாம்.

சவத்தல் என்பதொரு வினைச்சொல்.  ஒரு பொருள் சவத்துப் போய்விட்டதென்றால் அதுதன் திடத்தன்மையை இழந்துவிட்டதென்று பொருள். இறந்துவிட்ட உடலொன்று தொடக்கத்தில் சவத்துப்போன நிலையிலே இருக்கும். அதற்கான நேரம் கடந்தபின் தான் அது விறைத்துப் போகும். இதனை அறிவியலார் ரிகோர் மோர்ட்டிஸ்  அல்லது மார்ட்டிஸ் என்பர். இது ஆங்கிலத்தில் பயன்பெறும் இலத்தீன் தொடர். ஆகவே இறந்தோனைக் குறிக்கும் சவம் என்ற சொல் உடல் விறைக்கும் வரை உள்ள நிலையைச் சிறப்பாகவும் பின்னர் அவனடையும் உடல் நிலையைப் பொதுவாகவும் குறிக்கின்றது, இப்போதுள்ள மொழிநிலையில் இது பொதுப்பொருளிலே வழங்குகிறது.  முன்னர் அது சிறப்புப் பொருளில் வழங்கியதென்பது அதன் வினைச்சொல்லினோடு தொடர்பு  படுத்திக் காண்கையில் நன்`கு புலப்படுகின்றது.  பல கிளவிகள் இதுபோது தம் சிறப்புப் பொருளை இழந்துவிட்டன.

சவ என்ற வினையோ சா என்ற இன்னொரு வினையுடன் சொற்பிறப்பில் தொடர்பு உடையது ஆகும். அதனால் சா > சாவு > சாவம் > சவம் என்று குறுகிற்று என்றும் இதனை நன்`கு எடுத்துக்காட்டலாகும்.  எனவே சா என்ற வினை குறுகி சவம் என்ற தொழிற்பெயர் அமைகின்றது என்பது இன்னொரு சாலைவழியே அம்மைய இலக்கை அடைதலாகும்,

இதுவேபோல் தொண்டை என்பதும் தோண்டு > தொண்டை என்று குறுகித் தொழிற்பெயர் அமைந்தது என்று முடிக்க இயலும் ஒரு சொல்லாம். ஆனால் தோண்டு என்ற சொற்கும் தொண்டை என்ற சொற்கும் பொதுவான முன் அடி வடிவமொன்று சொல்லியலில் உளது.  அது தொள் என்பது. தொள்> தொளை> துளை என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது. ஒகரம் உகரமாதல் இதுவாகும். பின் தொள் > தொள்+து > தொள் து ஐ > தொண்டை என்றும் முடியும்.  எனினும் தொள்ளுதல் தொண்டுதல் என்ற வினைகள் இன்று மொழியில் காணப்படவில்லை. இவை இருந்திருந்தால் மறைந்துவிட்டன என்றே கொள்க. இவற்றை மீட்க வழியிலது.  இவை பழையன கழிதற் பாற்பட்டவை யாகும். தொள் என்பது தொடு என்று திரியும்.  தொடுதலாவது தோண்டுதல். இச்சொல் தொட்டனைத் தூறும் மணற்கேணி என்ற குறளில் உளது. இது முதனிலை நீண்டு தோடு என்று இன்றும் தொழிற்பெயராய் உள்ளது. பெயரானபின் மீண்டும் வினையாவதைப் புலவர்கள் இயல்பாகக் கொள்வதில்லை. முயல் > முயற்சி > முயற்சித்தல்  என்ற வடிவத்துக்கு எதிர்ப்பு தென்படுகின்றது. தோடு என்று பெயரானபின் தோண்டு என்று நடுவில் ஒரு ணகர ஒற்றுப் பெற்று வினையாவது மொழியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று அறிக. ஆகவே தொடு(வினை)> தோடு (பெயர்) > தோண்டு (வினை) > தொண்டை ( குறுகி விகுதி பெற்று பெயர்) என்று வரும். இப்படிப் பெயரானபின் வினையானவற்றையும் தம் வினைத்திறம் இழந்த சொற்களையும்  ஒரு பட்டியலிடலாம்.

அப்போது முயற்சித்தலுக்கு உள்ள எதிர்ப்பு குறைவாகுமா என்று தெரியவில்லை.