வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஒரு மூலச்சொல்; பல பொருள்: நள் - நளி

ஓர் அடிச்சொல்லுக்கு ஒரே பொருள்தான் இருக்கும்
என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது
தவறு என்பதை இப்போது எடுத்துக்காட்டுவோம்.
அசைவையும் அசைவின்மையையும் ஒரே
அடிச்சொல் காட்டவல்லது.



நள் என்ற அடிச்சொல் மிக்க முன்மைவாய்ந்தது
ஆகும்.நடுமைக்கருத்து, நடுதற்கருத்து ஆகிய
இவ்விரண்டும் இந்த நள் என்ற அடியிலிருந்தே
தோன்றியுள்ள படியால், இதன் முன்னிலைமை
தெளிவாகிறது.இப்போது திரிபுகளைப் பார்ப்போம்.

அடிச்சொற்கள் மிகுதி (விகுதி) பெற்றபின்பே
பொருள் வேறுபாடுகள் அல்லது பேதங்கள்
தெள்ளத் தெளிவாகிவிடுகின்றன. ஒன்றுக்கு
மேற்பட்ட பொருள்கள் உள்ள அடிக்சொல்லை
நன்`கு ஆய்வுசெய்தாலே பேதங்கள்
வெளிச்சத்துக்கு வரும்.  இவற்றைக் கூர்ந்து
கவனியுங்கள்:

நள்  >  நடு.  நடுதல் ( இது மண்ணில்
குத்தி நிற்கவைத்தலைக் குறிக்கும்.
பயிர் நடுதலையும் குறிக்கும். )

நடு > நடுதல் (வினைச்சொல்). planting

நடு > நட:   இது முன்னாகச் செல்லுதல்.

இதிற் கவனித்தலுக்குரியது என்னவென்றால்  
குத்தி நிற்றலும் முன் செல்லுதலும் ஆகிய
இருவேறுபட்டவைகளும் ஒரே அடியினின்று
அமைதல்தான். இவை முரண்மை (contradic-
tion )  காட்டுவன என்றாலும், ஒரே பொருளே
இருவகையையும் தெளியக்காட்டுகிறது.

நண்பகல் என்ற சொல்லைச் சிந்தியுங்கள். 
இது நள் + பகல் என்று பிரியும். நண்பகல்
என்பதை வேறுவிதமாகச் சொல்ல
வேண்டுமாயின்,  நடுப்பகல் என்று
சொல்லலாம்.  இங்கு நள் என்ற அடிச்
சொல்லே திரியாமலே நடு என்ற
நிலையைக் காட்டுகின்றது. 
ஆகவே  நள் = நடு என்பதை
அறியாதவரும் அறிந்தின்புற வாய்ப்பு
ஏற்படுகிறது.

இனி :
நள் > நடு > நட.
நள் > நடு > நடி.
நள் > நளி:   (  நடுப்பகுதி குறிக்கும்
சொல்)  நளிமுந்நீர் என்றால் நடுக்கடல்.
நளி > நளிதல்.  இதன் பொருள்:
செறிதல், பரத்தல், ஒத்தல்.

இதிற் போந்த எல்லாப் பொருள்களையும்
நுணுக்கமாய் ஆராய்வதே ஆராய்ச்சி
ஆகுமென்றாலும் இடமும் நேரமும்
குறைவாகுதலால் ஒத்தல் என்ற பொருளை
மட்டும் இங்கு காட்டுவோம்.

ஒத்தலாவது, ஒரு மனிதன் செய்வது
போலவே தான் செய்துகாட்டுதல்
என்பதும் ஒருவகை. அதாவது நடித்தலும்
ஒத்தலே ஆகும்.  பிறன் செயலை ஒத்தல்.  
 ஆகவே நளியும் நடியாகும்.   
 நளி > நடி > நடித்தல்.   அல்லது
மேற்காட்டியதுபோல நடு> நடி >
நடித்தல்.

நடி > நடனம்.   நடி+ அன் + அம் = நடனம். 
அன் இடைநிலை வந்தது.  அனம் என்பதை
 முமுமையாய் ஈறாகவும் கொள்ளல் அமையும்.

நடு> நடு+இயம் =  நாட்டியம்.
நடு > நட்டு > நட்டுவம்.
நடு + உ:  நடித்து முன் தோன்றுதல்.
இங்கு உ சுட்டு.  நட்டு என்று சொல்
அமையும்.

நட்டு+ அம் = நட்டுவம் என்று
படிப்படியாகவும் சென்று காணலாம்.

பிறபின் அறிந்து மகிழ்வோம். 

பிற அறிஞர் நூல்களிலும் இது
காணலாம்.

பிழைத்திருத்தம் மீள்பார்வையில். Please
reload your page if you find too many "errors".
Additional dots are generated by software.
Hopefully errors - at least some- may disappear 
when  reloaded. Auto-correct may change oru to or or Or.  Pl
read with circumspection. Sorry for inconvenience. 

வியாழன், 15 பிப்ரவரி, 2018

கைவைத்தியம்

கைவைத்தியம் என்ற கூட்டுச்சொல் பயன்படுத்தப்படுவதை
யாம் கேட்டிருக்கிறோம். இது என்ன மருத்துவநூலில் சொல்லப்
பட்டதா என்று கேட்டால், இல்லை, நமக்குத் தெரிந்த
கைவைத்தியம்தான் என்று பதில்வரக்கூடும். அதுவும் இத்தகைய
வழக்கை அறிந்தவர்களிடமிருந்து.

கை என்பதை முன்னொட்டாகப் பெற்ற கூட்டுச் சொற்கள்
பலவாகும்.  இவைபோலும் வழக்குகளைத் தொகுத்துப்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நூல்களை
(அதாவது அகரவரிசைகளைப்) பார்த்துள்ளோம்.

மருத்துவரிடம் சென்று அவர்தம் சோதனைக்கு உட்பட்டுப்
பெற்றுவரும் மருந்துகள், கைவைத்தியம் என்னும் சொல்வழக்கில்
அடங்கமாட்டா.  அவை முறைப்படியான மருத்துவத்தில்பால்
படுவன ஆகும்.

கை என்பது பக்கம் என்றும் பொருள்படும்.  முறையான
ஒன்று இயக்கத்தில் இருக்கும்போது, அதன் ஆளுமையோ
தொடர்போ இன்றித் தனியாக நடைபெறுவதைக் குறிக்கவும்
கை என்ற முன்னொட்டு பயன்படுகிறது.  வைத்தியம் என்பதற்கு
இங்கு நலம்பெறும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது என்பது
பொருளாம்.

கைப்பொருள் என்ற தொடர், பயன்படுத்துவதற்கு உதவியாகத்
தன்னிடத்திலேயே கிட்டும் பொருள் என்று அர்த்தப்படும்.
அது பணம் - காசாகவோ நகைநட்டு என்பதாகவோ இருக்கலாம்.

"வீட்டு மருந்து" என்பது :ஹோம் ரெமடி"  என்ற ஆங்கில
வழக்கின் மொழிபெயர்ப்பாகத் தெரிகிறது.  இதை பாட்டி
வைத்தியம் என்றும் கூறுவதுண்டு.  பாட்டி வைத்தியமும்
கைவைத்தியம் ஆகக் கூடும். பயன்பாட்டில் ஒன்று
மற்றொன்றை உட்படுத்தி நிற்கும் என்பது தெளிவு.

பிழைத்திருத்தம் மீள்பார்வையில்.

புதன், 14 பிப்ரவரி, 2018

வைத்தியம், மருத்துவம்,

வழக்குப்பொருளும் அமைப்புப் பொருளும்

ஒரு சொல்லின் வழக்குப் பொருளும் அமைப்புப்
பொருளும் ஒன்றாகவும் இருக்கலாம்; வேறுபட்டு
மிருக்கலாம். இங்கனம் அமைப்புப் பொருள் வேறு
படுவனவற்றை யாம் பல இடுகைகளில் ஆங்காங்கு
குறித்துச்சென்றதுண்டு.

ஒரு முழுச்சொல்லின் அடிச் சொற்கள் ஒரே
பொருளனவாக இருந்தாலும்  அதன் சொல்லமைப்பின்
பின்வரும் வழக்கு அல்லது ஆட்சி வேறுபட்டிருக்கலாம்.
இதற்கோர் எடுத்துக்காட்டு ஈண்டு தரப்படும்.

இவை இரண்டும் பண்டைத் தமிழில் காணரிய புதுமைச்
சொற்கள்:

ஒன்று:  மருந்தகம்.   இச்சொல் ஆங்கிலத்தில் வழங்கும்
"பார்மஸி "  என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.

மற்றொன்று:  மருத்துவமனை என்பது.  இங்கு மனை
என்பது அகம் என்பதனுடன் ஒரு பொருளினதாக
வழங்கினும், மருந்தகம் வேறு;  மருத்துவமனை வேறு.
அகம், மனை இரண்டும் வீடுதான். இவை இருவேறு
சொற்கள் . பொருண்மை ஒன்று.

வேறுபடுத்துவது எது?

இவற்றை வேறுபடுத்துவது: மருந்து மருத்துவம் என்ற
சொற்கள்.  மருத்துவமென்பதும் மருந்து என்ற அடிச்
சொல்லிலிருந்தே வருகிறதென்றாலும் மருந்து வேறு;
மருத்துவம் வேறு.   அகமும் மனையும் ஒன்றாயினும்
மருந்து என்பது நோய் நீங்க உண்பதையும் மருத்துவம்
என்பது தொழிலையும்  ந`ன்கு வேறுபடுத்திற்று என்று'
கூறலாம்.

வைத்தியம் என்பதென்ன?

ஓரு நோயாளியை மருத்துவர் ஓரிடத்தில் வைத்துப் பார்த்து
மருந்து கொடுத்துக் கவனித்துக் கொள்ளுதலே வைத்தியம்
ஆகும்.  வைத்து+ இயம் :   வைத்தியன் நோயாளியை 
ஓரிடத்தில் வைத்துப் பார்த்தல். மருந்தை இடிப்பது,
காய்ச்சுவது, நோயாளிக்கு அளிப்பது, மருந்துண்ணுதலை
மேற்பார்ப்பது  ஆகியவை இங்கு குறிக்கப்பெறுகிறது .  
 வைத்து என்ற  வினை எச்சத்தினின்று சொல்
அமைக்கப்பட்டுள்ளது.  இதுபோல எச்ச வினையினின்று
சொல்லை அமைத்தல் பாலி, சமஸ்கிருதம் ஆகிய
மொழிகளில் உண்டு. இத்தகு அமைப்புகளைத்
 தமிழிலும் காணலாம். எடுத்துக்காட்டு:  ஆண்டு
( வினை எச்சம்:) + அவன் = ஆண்டவன் எனக்
காண்க. இதனை மறுத்தலாகாது.

மருத்துவம் என்பது மருந்து கொடுத்து நலம் காண உதவுதல்
(ஆகிய தொழில் ).

ஆனால் இன்று வைத்தியம், மருத்துவம் என்பவை பொருளில்
ஒன்றாகவே கொள்ளப்படுகின்றன. வைத்தியம்  
(ஓரிடத்தில் தன்வயம் வைத்து நோயாளியைக் 
கவனித்துக்கொள்வது)  தோற்றம் உணரப்
படாமையின்  அயலென்றும் கருதப்படுகிறது.  மேலும்
இச்சொல் வேறுமொழிகளிலும் பரவியுள்ளது. 

ஆயுளைப் பற்றிய வேதம் ஆயுர்வேதம் என்று
மாறிவிட்டு அயலானது போலவே ஆகும். 
தமிழ் ள் பிற பக்கத்து மொழிகளில் ர் என்று
மாறிவிடும். (  இதனை ஆய்வு செய்க    அதாவது இங்கனம்
திரிந்த பிற சொற்களைத் தேடிப் பிடிக்க ).  ஆ+ உள்: ஆயுள்.
ஆ= ஆதல்.  உள்: உள்ளதாகிய நிலை அல்லது விகுதி, ஆக
ஆயுள்.  உயிருடன் இவ்வுலகில் ஆகும் நிலை ஆயுள்.


பிற்குறிப்பு:
என்க  என்பது எங்க என்று தானே மாறிக்கொள்வது
செயலியின் சொந்தத் திருத்தம், அஃது ஒரு பிழை
ஆகிறது.  இது மறுபார்வையில் திருத்தப்பட்டுள்ளது.
வேறு எழுத்துப்பிழைகளும் திருத்தப்பட்டுள்ளன.
மீள்பார்வை செய்யப்படும். 
இப்போது: 4 மணி காலை
 15.2.2018.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சிவராத்திரி.



சிவனுக் கமைந்ததிந் நல்லிரவே
செவ்விய வாழ்வினி வெல்வரவே
எவரும் வணங்கி அருள்பெறவே
இவ்வுல கம்ஓர் தெருள்பெறவே .

செவ்வொளி என்பது நம்சிவமே
சீர்பெறச் செய்குவம்  இன் தவமே;
ஒளவியம் பேதம் இவையிலவே;
ஆர்க்கும் உணவே இவணுளதே

கண்விழித் திங்குக் கடனியற்றி
கனிவுடன் பூசை உடனியற்றி
விண்ணாய்  விரிந்த ஒளிவிரவும்
வினைநலம் எய்தும் களிப்புறுவோம்.


திங்கள், 12 பிப்ரவரி, 2018

பள் அடியும் பறவை- பட்சியும்



புள் என்றால் நல்ல தமிழில் பறவை என்று பொருள். இந்தச் சொல்லைப் பழந்தமிழ் நூல்களில் எதிர்கொள்ளலாம். புள்ளினம் என்றால் பறவை இனம். நீங்கள் எழுதும்போது பறவையைப் புள் என்று குறிக்கத் தயங்காதீர்கள். உங்கள் வாசகர்களுக்குப் புரியாமற் போமென்று ஈரடியாய் இருப்பின்,  இச்சொல்லுக்கான விளக்கத்தைப் பிறைக்கோடுகளுக்குள் இடலாம்.

உகரத் தொடக்கத்துச் சொற்கள் அகரத் தொடக்கமாய்த் திரியக்கூடும். எடுத்துக்காட்டுகள் எம் பழைய இடுகைகளில் உள.  உமா என்னும் சொல் உம்மா என்பதன் இடைக்குறை. உம்மா என்பதோ அம்மா என்பதின் வேறன்று. உமா என்பது தாய் என்றும் பார்வதி என்றும் பொருள்படும்.  உண்ணாக்கு - அண்ணாக்கு என்பதைத் தமிழாசிரியர்கள் எடுத்துக்காட்டுவதுண்டு.

இப்படியே புள் என்பது பள் என்று திரிந்தது. பின்னர் சி என்னும் விகுதிபெற்று பட்சி என்று மாறிற்று.  பட்சி என்பது பக்கி என்றும் வரும். இப்படித் திரிந்தபின் ஒரு விகுதி பெறுவது தேவையானதே.  இதற்குக் காரணம்,  பள் என்பது மற்ற அர்த்தங்களையும் உடையதாய் உள்ளது.  பள்> பள்ளி; பள்> பள்ளம்; பள்> பள்ளன்; பள் > பள்ளு. இப்படிப் பலவாம்.

பட்சி என்றமைந்தபின் பிறமொழிகளிலும் ஏற்கப்பட்ட படியால், தமிழுக்கு அயல் என்று (பிழைபடக் ) கருதப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.

பள் என்பது பற என்றும் திரியும்  தகையது. 

குள் என்பது குறு என்றும் திரிதல் காண்க.  குள்ளம், குறுமை என்பவற்றில் பொருளணிமை உளதாதல் காண்க.  கள் என்பது கருப்பு என்றும் பொருள்படும்.   கள் என்ற சொல்லிலிருந்து கள்ளர் என்ற சொல் அமைந்து கருப்பர் (கறுப்பர்) என்று பொருள்படுவதாய்க் கூறப்படுதல் காண்க. கள்> காள்> காளி:  கருப்பம்மை.

பள்> பற > பறவை.
பள்> பள்+சி > பட்சி.

இச்சொற்களின் தொடர்பு கண்டுகொள்வதுடன் மேற்குறித்த திரிபுகளையும்
ஆய்வு செய்தல் நலமே.  



   

சனி, 10 பிப்ரவரி, 2018

அநாதி



அநாதி என்று எழுதப்படும் சொல் இன்று இங்கு சிந்திக்கப்படும் சொல்லாகிறது.

இதை முன்  அ+ நாதி பிரித்தனர்.

வெளியாரிடம் சென்று யான் இன்ன குடியைச் சேர்ந்தவள் என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்குமானால்,  அவள் நாதி உள்ளவள். 

நா > நாதி.  இங்கு நா :  நாக்கு;   தி ~ விகுதி.

தான் யார் என்று சொல்லும் அறிகுறிகளும் அடையாளங்களும் ஆகிய தற்குறிப்பு நாவினாலே சொல்லப்படுவதாதலின்,  நா என்ற நாக்குக் குறிக்கும் சொல்லே இதற்குப் பயன்பட்டது.

மிகப்பழங்காலத்தில் எழுத்துக்களும் தாளும் இல்லை.  கணினியும் இல்லை. ஒரு மனிதனின் தன் அடையாளத்தைத் திறமாக முன்வைக்கும் அட்டைகளை இப்போதுபோல் யாரும் வெளியிட்டதுமில்லை.  தன்னை அறியாதவரிடத்து  முன்நிற்குங்கால் நாவே துணைக்கருவி.   அதனாலேதான் ஒருவனின் அடையாளம் திகையும். திகையும் என்றால் கேட்போன் தீர்மானிப்பான் என்பது.  அவனை அறிந்தோரிடத்து அவன் உறையும் காலை அவனது அடையாளம் ஒரு பிறச்சினை (பிரச்சினை)  ஆகமாட்டாது.
 
நாவால் திகைக்கப்படுவது "நாதி" என்`கையில் தி ஒரு விகுதி எனினும் அமையும்.

இது நாவால் போற்றப்படுவோன்  நாதன் ஆனதுபோல.  நா : நாவின்;  து : உடைய; அன்:  அவன்.  போற்றப்படும் என்பதை விரித்துக்கொள்க.  நாவினதானவன் எனினும் அமையும். ஈண்டும் எழுத்தால் போற்றப்படுவது பின்நிகழ்வாகும். இறைப்பெயர்கள் பல்வேறு காரணங்களால் அமைந்துள்ளன; அவற்றுள் அவன் நாவிலிருப்பவன், நாவினாலுரைபெறுவோன் என்ற கருத்து  இரண்டு மொன்றாம்.

நாதன்:  மேலும் அறிய:  http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html

அல் என்பது அ~ என்று கடைக்குறையும்.  குறைந்து அன்மை உணர்த்தும்.

அ+நாதி = அநாதி.  ( நாதி அற்றவன் ).

இறைனுக்கு யாருமில்லை;  தாயுமில்லை; தந்தையுமில்லை.  அவன் ஒற்றையன்.ஆகையால் அநாதி.

தத்துவ நோக்கில் இறைவனுக்குத் திணையுமில்லை. (யாம் இங்கு இலக்கண விதியைக் குறிப்பிடவில்லை.)  ஆதலின் நா+து+அன் என்பதில் திணைமயக்கம் உள்ளதெனினும் அஃது ஒரு பொருட்டாகாது என அறிக. அது நா+த் + உ + அன் எனக்கொண்டு,   த்: இடைநிலை; உ: சாரியை; அன் - விகுதி ஆண்பால் எனினும் ஆகும்.  எப்படி விளக்கினும் நாதன் என்பது நாவின் அடிப்படையில் எழுந்த சொல்லே ஆகும்.  து என நிறுத்துவது திணைமயக்கம் எனினும் பெரிய பழுதொன்றுமில்லை.  உ என்று விளக்கி முன்னிருப்பது என்று கூறக்கூடும். அங்கனம் திணைமயக்கம் தீரும். இவை விளக்கவேற்றுமையன்றி வேறில்லை.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

அன்னியோன்னியமாக இருக்கிறார்கள்.



இந்த இரண்டு குடும்பங்களும் எத்துணை அன்னியோன்னியமாக இருக்கிறார்கள்; இதுபோலவே உலக மிருந்தால் எங்கும் சமாதானமே நிலவும் என்று பேசிக்கொள்வதைச் செவிமடுத்திருப்பீர்கள்.

இந்தப் பேச்சில் வந்த அன்னியோன்னியத்தை அலசி ஆராய்வோம்.
இது:

அன்ன இய ஒன்னியம்!

அன்ன =  அவ்வளவு.

இய =  வாத்தியத்தின்

ஒன்னியம் =   ஒற்றுமை.

ஒன்று  என்ற சொல் ஒன்+து =  ஒன்று.  ஒன் என்பதே அடிச்சொல். து என்பது அஃறிணை விகுதி.  அஃறிணை அல்லாத இடங்களிலும் வேறு சில பிற்காலச் சொற்களிலும் வரும்.   இகரச் சுட்டு ஏறி இது என்றும் அகரச் சுட்டு ஏறி அது என்பதிலும் வரும்.   எடுத்துக்காட்டுகள்:  பருத்தல் : பரியது:  பரு+ அது + அம் = பருவதம்; மலை;  கண்> கணி > கணித்தல் :  கணி+ இது + அம் = கணிதம்.  ஓர் இகரம் வீழ்ந்தது.   கணிதம் என்று சொல்வதே நாவுக்கு நல்லது. கணியிதம் என்று சொல்வது ஒருவகையில் முட்டாள்தனம். என்ன “ணியி”  “ இயி””  .  இலக்கணம் தெரியாவிட்டாலும் புத்தியாவது இருக்கவேண்டாமா?

துணியில் கூடுதலாகத் தொங்கும் கீற்றுக்களை தையற்காரன் வெட்டி வீசிவிட்டுத்தானே இரவிக்கை  தைக்கிறான்?  சொல்லும் அது போலவே!

ஒன் என்பதே அடி;  ஒன்+ இயம் =  ஒன்னியம்.  ஒன்: ஒன்றாகிய; இ = இந்த; அம் : தன்மை காட்டும் விகுதி.  பொருள்: ஒற்றுமை.  ஒன்+து (ஓன்று ) என்பது ஒற்றுமை. ஒன்னு என்பதும் அதே.  ஒண்ணு என்பதும் அதே. திரிபுகள் பல. இத்தனை திரிபுகளுக்கும் இடம் ஏற்பட்டுத்தான் தமிழ் பல மொழிகளாய்ப் பிரிந்து வழங்குகிறது.   ஒன் என்ற அடிச்சொல்லை வெள்ளைக்காரனும் மேற்கொண்டது  நமது வளத்துக்கு ஒரு சான்று. 

ஒற்றுமை என்றால் இயம்போல ஒன்றாக இயங்குவதே ஒற்றுமை. வெவ்வேறு வாத்தியக் கருவிகள் இயங்கினாலும் என்ன இனிமை. என்ன ஆன்ந்தமாக இருக்கிறது. இசைக்கலையே  இனிதாகும். எல்லாம் குழைந்து செவிக்குள் வருவதுபோல.  கவலையை மறக்க இசையில் மூழ்கவேண்டுமென்பதை இயம் என்பது நமக்குக் கற்பிக்கிறது.

அன்ன இய ஒன்னியமாகவே இருப்போம். அன்ன இய என்பவற்றை இயைக்க அன்னிய என்று புணர்ந்தது.  இது  அந்நிய ( அயல் ) என்பதினும் வேறானது.
இதில் ஓர் அகரம்  குறுக்கப்பட்டது .   அன்+(ன் அ ) + இய  = அன்+ன் இய = அன்னிய.    0ன்+இ = 0னி.

அன்னிய ஒன்னியம் >  அன்னியொன்னியம் > அன்னியோன்னியம். இதில் ஒகரம் ஓகாரமாக நீண்டது.   மருவி அமைந்த சொல்.

இனிமேல் போவியோ அடி ?   போவியோடி?  இதெல்லாம் பேச்சு வழக்கைப் பின்பற்றி அமைந்த திரிபுகள்.  போவாயோ> போவியோ? இகரத்தை அடுத்து 
ஓகாரம் வருவதும் ஓர் இனிமைதான்.

வியோ!   னியோ!  யாராவது கத்திக்கொண்டிருக்கும்போது குறிப்பெடுத்துக்கொள்க.   கைப்பேசியைக்கொண்டு பதிவுசெய்க.

அன்ன இய ஒன்னியமாக இருங்கள். இசைபோலும் இயைக.