சனி, 13 டிசம்பர், 2025

''துவஜம்'' என்ற வடசொல்லின் தமிழ்மூலம். ( ''கொடி'')

 துவசம்  ( துவஜம்) என்பது கொடி என்று பொருள்தரும்.  ஒரு மரத்தண்டில் கட்டி ஏற்றிப் பறக்கவிடுவதற்கான சீலையே  கொடி அல்லது துவஜம் என்று சொல்லப்படுகிறது. 

காற்று  வீசுகையில் அங்குமிங்கும் மடங்கி மடங்கி யாடுவதைக் காற்றில் துவளுதல் என்று சொல்வர்.  துவளுதல் என்பது வளைதற்கருத்து.

கொடிகள் பலவகை.  வெற்றியின்போது ஏற்றப்படுவது  வெற்றிக்கொடி.   அன்ன சத்திரத்தில் ஏற்றி  அறிவுறுத்துவதற்காக வைக்கப்படுவது  அன்னக்கொடி ஆகும்.  பசித்தோர் அங்குச் சென்று உணவு பெற்றுக்கொள்ளுவர். பெரும்பாலும் விலையின்றிப் பெறும் உணவு அதுவாகும்.

அழுக்குத் துணியைக் கழுவுவதற்கு அல்லது துவைப்பதற்கு ,  துவைத்தல் அல்லது தோய்த்தல் என்பதுண்டு.  சலத்தில் (ஜலத்தில்) வைத்துத் தூய்மை செய்வதால்  ''சலவை''  என்பதுண்டு.  சலசல என்ற ஒலியுடன் ஓடுவதால் சலம் என்ற தண்ணீரின் இன்னொரு பெயர்.. இது பின் ஜலம் ஆனது.    சலம் அல்லது ஜலம் என்பது ஒலிக்குறிப்பு  ஆதிய சொல். (ஓலிக்குறிபை ஆதியாக உடைய சொல்.  சலக்கிரீடை  ( ஜலக்கு இரு இடை) என்பது நீரின் இடையில் இருப்பது என்பதுதான்,   ஜலக்கு = ஜலத்திற்கு.  ( ஜலம்+ கு =  ஜலத்து + இல்+ கு), இங்கு அத்துச் சாரியையும், இல் என்னும் இடப்பொருட் சொல்லும் ( உருபு) ஜலக்கு என்பதில் விடுபாடு ஆகும்.  பின் கு+ இரு+ இடை என்பவை பிரிந்து தனியாயின. தலைக்கு வைப்பது தலைக்கிரீடம்.  தலைக்கு+ இரு+ இடம்= தலைக்கிரீடம்,  இது முதற்குறைந்து கிரீடம் ஆனது.

கிரீடம் என்பது ஒரு METANALYSIS.  பிறழ்பிரிப்பு.   இச்சொல் பின் தனிச்சொல் ஆனது.  மொழி இப்படியும் வளரும்.  இதை எவரும் உணர்ந்து எழுதியிருக்கவில்லை யானறிந்தமட்டும்.

துவளும் இயல்பினதான கொடி,  துவசம் என்றே வழங்கியது.  பின்னர் அது துவஜம் ஆயிற்று.  துணி என்ற சொல்,  அது துணித்துப் பயன் கொள்ளப்படுதலால் வந்த பெயர்.   துணித்தல் என்றால் வெட்டுதல்.  வேட்டி என்பது வெட்டு என்ற சொல்லால் உணடானதே.  முதனிலைத்  திரிபு.

துவஜம் என்பதற்கு மற்றுமொரு பெயர் வேண்டின்,  காற்றாடுசீலை என்று தனித்தமிழில் சொல்லலாம்.  அது துவசம் ( துவசு+அம்) என்பதே.சு  என்பதுவும் ஒரு தொழிற்பெயர் விகுதியே. பரிசு என்பதிற்போல.  பொருளின் வரவைப் பெறுவோன் வாரிசு.  வரு+ இ+ சு> வாரிசு.  இது ஒன்றும் உருது அல்ல..  உருது அதைத் தமிழிலிருந்து பெற்றுள்ளது.   மூலச்சசொற்கள் தமிழில் உள்ளவை.  வரு என்பது வாரி என்று வந்தது வியப்பில்லை.   வரு> வாரீர் என்று அமைவது காண்க. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



செவ்வாய், 9 டிசம்பர், 2025

யுத்தம் என்ற சொல்லில் தமிழ்ச் சொல்லாக்கப் பண்பு.

 யுத்தம் என்ற சொல் தொன்று தொட்டுத் தமிழில் வழங்கிவந்துள்ளது.  இது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,  தமிழ் மூலத்தை உடைய சொல்லே

ஒருவனை அடிப்பதென்றால்  அவனுக்கு அடுத்து நில்லாமல் அவனை அடிக்க இயலாது.  இக்காலத்தில் 11000 கல்தொலைவுக்கு அப்பாலிருந்தும் ஓர் ஊரை அடித்துத் தூளாக்கலாம் என்று சொல்கிறோம்.  இத்தகைய கருத்துக்களும் அதற்கான ஆயுதங்களும் பண்டை இருக்கவில்லை. அடுத்துச் சென்றுதான் கையாலடித்து வலியை உண்டாக்குவது சொல் உண்டான காலத்தில் இருந்தது. ஆகவே தமிழை ஆயுங்கால் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். 

ஒருவனுடன் சண்டை செய்வதென்றாலும் அண்மிச் சென்றுதான் பெரும்பாலும் சண்டை இட்டார்கள்.  வில்லால்  தாக்குவதானாலும்,  ஓரளவுக்கு அண்மையில் இருக்கவே வேண்டும்.   சண்டை என்ற சொல்,  அண் என்ற அடிச்ச்சொல்லினின்று வருகிறது.  அண்> சண்> சண்டு> சண்டை என்று இச்சொல்  அமையும்.   அடி என்ற சொல்லில் இருக்கும் அடு> அடி என்பதிலுள்ள கருத்தே இங்கும் உள்ளது.  

இனி யுத்தம் என்ற சொல்லைப் பார்ப்போம்.  உத்தம் என்பதே இதன் முன் வடிவம் ஆகும்.  உ என்பது முன்னுறல் காட்டும் தமிழ்ச் சுட்டெழுத்து.  இது உன், உம் என்ற பதிற்சொல் திரிபுகளுடன் தொடர்புடையதாகும்.  தமிழை நன் கு கற்றிருந்தால் இது வாத்தியார் சொல்லிக்கொடுக்காமலே புரியக்கூடியது ஆகும். அகர  வருக்கங்கள் சகர வருக்கங்களாகும்,  இதுவும் அண்டை> சண்டை என்பது போலவேதான்.   எப்போதும் காட்டும் எளிதான உதாரணம்  அமணர் > சமணர் என்பது.  ஊகம் > யூகம் > வியூகம் என்பவும் காண்பீர்.  ஆனை > யானை என்பதில்,  அகர வருக்கங்கள் யகர வருக்கங்கள் ஆதல் கண்டுகொள்க.  முன்னுறலாகிய உத்தம் என்பதிலிருந்து யுத்தம் என்று திரிந்து  முன்னுறலையே சொல் காட்டுகிறது. முன்னுறல் என்பதும் அடுத்துச் செல்லுதலின் வேறன்று.

யாம் காண்பது இங்கு யாதெனின்,  அடுத்துறல் என்ற கருத்திலேதான் இச்சொற்கள் அமைந்துள்ளன.   உத்தம் என்பது தமிழ் மூலம் தான்.  சமஸ்கிருதத்திலும் இச்சொல் உள்ளது.  இரண்டும் சகோதர மொழிகள்.  எனவே,  இவை சொல்லாக்கத்தில் உள்ள பொதுப்பண்பை ஒட்டி அமைந்த சொற்களாகும்.

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றால்  அது வெள்ளைக்காரன் மொழியன்று.  அறிவுடையோர்,  இறைபோற்றுவோர் ஆனவர்கள் பயன்படுத்தி வந்த மொழி. தமிழும் பல இறைப்பற்று இலக்கியங்கள் உள்ள மொழிதான். மணிமேகலை என்ற புத்தமத இலக்கியம் தமிழில்தான் உள்ளது.  அதன் இறுதி நான்கு காதைகளில் பல்வேறு சமயக் கருத்துகள் சொல்லப்படுகின்றன.  இதில் கூறப்படும் சில கருத்துகள் மகாயன புத்தம் கூறும் பாலியிலும் சீனத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார், தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லுநர்.  புத்தமத நூல் தெளிவினர்.   

பிற்கால வெள்ளையர் முயன்று சமஸ்கிருத  ஒளியில்  தாங்கள் மின்னிட நினைத்தனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


சனி, 6 டிசம்பர், 2025

பதாகை என்பது.

 பதாகை என்னும் சொல்லை அறிவோம்.

பதாகை என்னும் சொல்லின் அடிப்படை வினைச்சொல்  பதிதல் என்பது. பதி + ஆகு+ ஐ > பதாகை.  

விருதுக்கொடி,  பெருங்கொடி, தேர்க்கொடி முதலியனவையும் இப்பெயர் பெறும். எழுத்துகள் எழுதப்பெற்றுக் கொடியாய் வைக்கப்படுவதும் இவ்வாறு சுட்டப்பெறுகிறது. 

நாட்டியத்தில் கையினால் காட்டபெறும் ஒருவகை அபிநயமும் பதாகை என்பர், எனவே இதைப் பல்பொருள் ஒருசொல் என்னலாம்.

பதி + ஆகு + ஐ >  பதாகை.   பதி என்பதன் இகரம் விடுபாடு கண்டது, ( கெட்டது). பின், பத் + ஆகு + ஐ > பதாகை ஆயிற்று.  த்+ஆ> தா ஆகிவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை