சனி, 21 டிசம்பர், 2024

நாதாரி.

 இன்று நாதாரி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல் தமிழ்நாட்டிலும் இந்தி பேசும் மாநிலங்களிலும் வழங்கும் சொல்லாக அறியப்படுகிறது.  இந்தியத் தமிழர்கள் பலர் மலேசியா சிங்கப்பூர் வட்டாரங்களில் வந்து (தென் கிழக்காசியாவில) தங்குவதால், அவர்கள் அறிந்த சொல்லாகவும் இது இருத்தல் கூடும்.

நாவின் ஆதாரத்தால் அறியப்படும் ஒரு மனிதனை நாதாரி என்று சொல்வர் என்று இதற்குப் பொருள் கூறப்படுகிறது,   நா ( நாக்கு) என்பதும்,  ஆதாரம் என்ற சொல்லும் தமிழில் தொன்றுதொட்டு வழங்கிவருபவை.

ஆதாரம் என்றால் ஒரு பசுமாட்டைத் தந்து ஆதரிப்பது என்று பொருள்.  பால் அருந்துவதற்கு ஆதாரம் அல்லது மாடு இல்லாமல் வந்தவர்களும் அந்தக் காலத்தில் அரசர்களும் மற்ற ஆட்சியாளர்களும்  பசுதானம் வழங்கினார்கள். இதுவே  ஆ+ தாரம் என்ற சொற்களால் குறிக்கப்பட்டது. பசு இல்லாதவன்,  ஆ தந்து அணைப்புறாதவன். அதாவது அவனுக்கு " ஆ+ தரவு"  கிடைக்கவில்லை என்று பொருள்.

கோவில்களுக்கும் ஆக்கள் தானம் தரப்படுவதுண்டு.  ஆங்கும்  ஆதரவு,  ஆதாரம் எல்லாம் கொடுக்கப்பட்டன.  தா+ (இ)ன் + அம் > தானம்.  இன் என்ற சொற்பகவு  ன் என்று முதற்குறைந்து நின்றது. அம் என்பது அமைவு குறிக்கும் சொல்லின் அடிச்சொல். இங்கு விகுதி ( மிகுதி) யாய் வந்தது.

தருதல் வினைச்சொல்.

தரு + வு >  தரவு.

தரு+ அம் > தாரம்.

தாரம் என்றால் தருதல்.  பெண் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதால், தாரம் என்ற சொல் மனைவி என்று பொருள் எய்தியது.

தரு+ இ > தாரி:  தருதல் செய்வோன், செய்பவள்.

முதன்முதல் மனிதன் அறிந்துகொண்டது தன் நாவினால் செய்யும் ஒலியைத்தான்.  இதுவே நா+ து + அம் > நாதம் ஆனது. நாவினதாய் ( நா து ) அமைவது நாதம் பின் அறிவு வளர்ந்து நாதம் பிறவற்றாலும் பெறப்பட்டது.

நாவினால் மக்களுக்கு எடுத்துச் சொல்பவர், நா+ தரு+ அர் >  நாதர். அருணகிரி நாதர், ஏசுநாதர், நபிநாதர். என்பவற்றில் நாதர் என்பதன் பொருளை அறிந்துகொள்க.  நாதருவர் > நாத (ருவ) ர்> நாதர் என்பது நல்ல விளக்கம். எது நல்லபடி விளக்குகிறதோ அது அதற்கு விளக்கம்.  இலக்கணத்தினால் விளக்கப்பட்டு அது உருப்படாவிட்டால் அது ஒரு விளக்கமன்று.

இப்போது சமத் கிருதம் >  சமஸ்கிருதம் என்பது தமிழுக்குச் சமமான ஒலி என்று அதை விளக்கியுள்ளோம்.  வெள்ளன் அதிலிருந்து சொற்களை எடுத்து அவன் மொழியை வளப்படுத்திக்கொள்வதற்கு அதை இந்தோ ஐரோப்பியம் என்றான். இராமாயணம் முதலியவை ஐரோப்பாவில் இயற்றப்படாமல் இந்தியாவில்தான் இயற்றப்பட்டது, அதுதான் வால்மிகி ( வால்= தூய்மை, மிகு இ> மிகி ) என்ற தூயவரால் எழுதப்பட்டமையின் அது வெளிநாட்டு மொழியன்று.

ஒரு நாட்டை நீண்டகாலம் பிடித்து ஆள்வதற்கு இதைக்கூடச் செய்யத் தெரியாதவனா வெள்ளையன்? ஒரு நாட்டைப் பிடிப்பதென்றால் இதை நிச்சயம் செய்யத்தான் செய்வான். ஆனபின் நட்டத்தைக் கணக்குப்பார்த்து நல்லதைச் செய்துகொள்ளுவீர். 

பழங்காலத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் எதுவும் இல்லை. நாவினால்தான் ஒரு மனிதன் தன்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டியிருந்தது.  ஆகையால் பெயர் என்பதற்கு, நா+ அம்+ அம் > நா + ம் + அம் >  நாமம் என்று ஒரு சொல் படைக்கப்பட்டது. நடுவில் வந்த "ம்" என்பது அம் என்பதன் முதற்குறை, அல்லது தலைக்கொய்வு ஆகும். இங்கு இடைநிலையாய் வந்துள்ளது.  காமம் என்ற சொல்லிலும்  கா + ( இ)ம் + அம் >  காமம் என்று இடைநிலை வந்துள்ளது.

பிற்காலத்தில் எழுத்து ஆதாரங்கள் உண்டானபோது,  நாவினால் செய்துகொள்ளும் ஆதாரம், குறையுடையது என்று மக்கள் எண்ணினர். ஆதலால் நாவினால் பெயர் முதலியவை அறிமுகம் செய்துகொள்வது, தகுதியில்லாமல் தாழ்ந்து,  நாதாரி என்ற சொல் உண்டாயிற்று.

இதை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.  இந்திக்காரராக இருந்தால், தமிழிலிருந்து நா,  ஆ,  தாரம் ஆகிய சொற்களை எடுத்து அமைத்ததற்கு அவரைப் பாராட்டுவது நம் கடமை ஆகும். தமிழர் ஒருவராகவும் இருத்தல் கூடும். இதைப் போய்த் தேடுவது ஒரு பணவிரையம் தான்.

இந்தச் சொல் இந்தியில் முதலில் வழக்குப் பெற்று இருக்கலாம்.  வழக்கு என்றால் இலக்கணத்தில் பயன்பாடு என்று பொருள். 

வாசித்து அறிய இன்னும் இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_96.html

வெட்சித் திணை ஆதாரம் ஆதரவு (தலைத்தோற்றம் தொடக்கம்)

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_10.html

சொல்லமைப்பு நெறிமுறைகள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


வியாழன், 19 டிசம்பர், 2024

தொடர்புடைய சொற்கள் ஓர் ஆய்வு

 படி என்றால் முன்னிருந்த படி இன்னொன்றில் படிந்திருப்பது.  ஆகவே நூலின் இன்னொரு பகர்ப்பினை  நூற்படி என்று சொல்கிறோம்.  இதை நூல்பிரதி என்றும் சொல்வதுண்டு.  ப்ரதி என்ற சொல் எவ்வாறு அமைந்தது?

படி என்ற சொல்லில் உள்ள பகரம்,  ப என்று வராமல் ப்ர என்று வந்தது.  அடுத்து உள்ள எழுத்து டி என்பது.  இது கொஞ்சம் வல்லொலி மிக்கிருந்தபடியால் இதை டி எனற்பாலதற்கு  தி என்று போட்டு,  ப்ர + தி என்றாக்கி,  தமிழில் இதை நாம் பிரதி என்று எழுதுகிறோம்.

ஒரு படி ( காப்பியிலிருந்து) இன்னொன்று பகர்த்துச் செய்யப்பட்டதை,  ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்ததாகக் கருதி  "பிறதி" என்றும் அமைத்திருக்கலாம்.  ஆனால் வெறும் பகர்ப்பே ஆதலால் இன்னொரு பொருள் பிறந்துவிட்டதாகக் கருதுவது பிழை ஆகும். போலமைந்தது வேறு, பிறந்தது வேறு.  ஆகவே படி > பிரதி என்ற அமைப்பு,  சரியானதாகவே உள்ளது.

பகர்த்துதல் என்பது  "காப்பி"  செய்தல் என்பதே.

முன் பகர்ந்தபடியே மீண்டும் பகரச் செய்தல் - பகரச் செய்தல், இதுவே பகர்த்துதல், எனவே "காப்பி"  ஆயிற்று.

படி என்பது ப்ரதி ஆனது கண்டோம்.  இது போலவே,   ,மகம் என்பது  ம்ரு-கம் ஆனது.  இதை மிருகம் என்று எழுதுகிறோம்.  ஆகவே மக என்பதும் மிருக என்பதும் ஒன்றில் இன்னொன்று தோன்றி  ஒரு பொருளனவாயின.

மக என்றால் ஒன்றில் இன்னொன்று பிறத்தல்.   ஆகவே மகத்தில் தோன்றிய மிருகம் என்பது, பிறந்தது அல்லது பிறப்புடையது என்று பொருளாகும். ஆகவே மகம் என்ற நக்கத்திரம் ( நட்சத்திரம் )   இன்னொன்றிலிருந்து தோன்றியது என்று பொருள்படுகிறது. இஃது வானநூலார் அறிந்து கூறிய, அமைத்த சொல்.

இதுபோலவே,  கரு என்பது கிரு ஆனது.  கிருஷ்ண படசம் என்பது நிலவின் ஒளியின்மை என்று பொருள்தருவது.  கரு என்பது கருப்பு ஆகையால் கிரு என்பதும் கருப்புதான்.

இரு என்ற சொல்லும் கிரு என்றே திரிந்துள்ளது.  இருக்கு அகம் > இருக்ககம்> இருகம் ( குறைச்சொல்) (  இடைக்குறை)  >  கிருகம் ஆகி,  இருக்குமிடம் குறித்தது. இரு என்பதே கிரு என்று ஆகியுள்ளது.  கிரு> கிரகம் என்ற சொல், இருப்பிடம் என்பதே.  திசாபுத்தி நாதர்களைக் கிரகம் என்பது ஆகுபெயர்.  கிரகம் அல்லது கிருகம் என்பது இருப்பிடம் அல்லது வீடு. கிருகம் அல்லது கிரகம் என்பதை வேறு வகையிலும் விளக்கலாகும்.

பரமன் என்ற சொல் எங்கும் பர்ந்துள்ளவன் என்று பொருள் தரும்.  எங்குமுள்ளவன் கடவுள்.  பர என்பது பிர என்று திரிந்தது. இதனின்று பிரமன் என்ற சொல் அமைந்தது.

தொடர்பு பிறப்புச் சொற்களை அறிந்து போற்றுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

புதன், 18 டிசம்பர், 2024

கோபக்காரன் என்பதற்கு இன்னொரு சொல்லாகும்...

 கோபம் என்பதற்குக் கதம் என்றும் இலக்கிய வழக்கில் ( பயன்பாட்டில்) வரும்.

இதன் மூலச்சொல் கடு என்பதுதான்,  கடுமை என்பது இம்மூலச்சொல்லின் பொருள்.  ஆகவே,  கடு> கடம்> கதம் என்று டகரம் தகரமாக ஒலிமாறித் திரிந்துள்ளது.

ஆனால்  கத்துதல் என்பதன் பகுதியாகிய கத்து( > கது> ) கதம் என்று அம் விகுதி பெற்றும் அமைந்திருத்தல் ஏற்புடையதே ஆதலின்,  இச்சொல் பல்பிறப்பி ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட திரிபுகளில் உணர்த்தப்பெறுதல் காணலாம்.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட களனிலிருந்து வரவு காட்டும் சொற்கள் தமிழில் பலவாகும்.  தமிழில் இத்தகு வசதிகள் இருந்தமையால்தான் காளமேகப் புலவர் முதலானோர் சிலேடைப் பாக்கள் புனைந்து தம் திறனைப் பிறர்க்குத் தெளிவித்தனர்.  சில + எடு+ ஐ  > சிலேடை என்பது  சில வழிகளில் பொருள் எடுத்துக்கொள்ளக்கூடிய முறைமை.  இங்கு எடு என்ற வினை,  ஏடு என்று முதனிலை திரிந்து பெயராகிப் பின்,  சில+ ஏடு+ ஐ என்று மாறியபின் புணர்வதனால் இச்சொல்  சிலேடை என்றானது. எளிதாக உணர்வதற்கு எடு என்பதைப் பயன்படுத்தி விளக்குதல் நன்று.  சில என்ற பன்மைச்சொல் காட்டாமல் சில் என்பதையே காட்டினும் விளைவிலோர் மாற்றம் இலது,

கடம் கதமானதுபோல்.  மடு> மடம்> மதம் என்றும் வருதல் ஏற்புடையதே.  மடு என்பது ஒரு மாற்றம் குறிக்கும் சொல்.  இதில் இகரம் சேர்ந்து, மடி என்று வந்து,  மடிப்பு என்றாகிறது. இது சென்ற திசை மாறி மீண்டு வருதல் குறிக்கும். ஒரு துணியை இடமாக விரித்துப் பின் திருப்பி வலமாக இரட்டிப்பாய் வைத்தல் மடிப்பு.   மதம் என்ற சொல் சமயக் கோட்பாடு என்று பொருள்படுவதற்குக் காரணம் என்னவென்றால் ஒருவன் எண்ணம் இயற்கையாகச் சென்ற திசையில் செல்லாமல் மாறி பயிற்றுவிக்கப் பட்டதிசையில் எண்ணத் தொடங்குவதுதான்.  இயல்பான நிலையில் ஒருவனுக்குக் கடவுள் அறிவு இல்லை.  அவனை மடித்துத் திருப்பியே கடவுள் பற்றி அவன் அறிவிக்கப்படுகிறான்.  ஆகவே, மடு> மடி;  மடு> மது > மதம் என்று மடிப்புற்ற அல்லது மாறிய நிலையைக் காட்டுவதுதான் இதன் பொருள்.  ஆகவே, கடு> கது> கதம்  என்ற மாற்றமும் மடு> மது > மதம் என்ற மாற்றமும் ஒத்துச்செல்வதைக் காணலாம்.   மயங்குதல் என்ற சொல்லும் இவ்வாறு நிலை மாற்றத்தையே உணர்த்துகிறது. மயங்குவது> ( இடைக்குறைந்து) > மது என்றுமாகும்.  இவ்வாறின்றி அடிச்சொல்லிலிருந்தும் இதை விளக்கலாம். இதை இங்கு விரிக்கவில்லை.

கதம் என்பது கோபம் என்று பொருள்தருவதால்,  கதம் + அகன் >  கத + அகன்> (முதனிலை நீண்டு)  > காத + அகன் > காதகன் என்றுமாகி, காதகன் என்பது கோபக்காரன் என்றும் பொருள்தரும்.

இதனை முன் விரித்தெழுதவில்லை ஆதலின் இவண் கொஞ்சம் விளக்கினோம்.  இன்னும் உள்ளன,  இது போதுமானது.

''ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்பதால், பல தீங்குகளும் விளைப்பான் என்பது அறிக,  அத்தீங்குகள் அவனைக்  காதகன் என்ற சொல்லுடன் பொருந்தியவன் ஆக்கிவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.