திங்கள், 21 அக்டோபர், 2024

எகரத்தில் தொடங்கி அகரத்தில் திரியுமா?

 இன்று இதனைத் தெரிந்துகொள்வோம். ஆனால் யாம் தலைப்புக்குள் அடங்கி எழுதப்போவதில்லை.

தமிழ்ப் பையன்கள்  ஒரு நடைப்பயிற்சிக்கு செல்லவேண்டி யிருந்தது.  ஆனால் அவர்களில் ஒருவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான்.  ஒருவர் சொன்னர்: அந்தப் பையனை "ஒழுப்பி " விடு என்று!  இதன் காரணமாக மிகுந்த சிரிப்பொலி எழுந்துவிட்டது.  எகரம் ஒகரமாகத் திரியுமா என்பது திரிபுகளைக் கற்போர் அறிந்துகொள்ளவேண்டியதாகும். அந்தப் பையனைக் கேட்டபோது,  அவனுடைய சிற்றூரில் அப்படித்தான் சொல்வார்களாம்.

இவ்வாறு நாமறியாத திரிபுகளும் உலகில் தமிழிலும் ஏனை மொழிகளிலும் இருக்கும்.  எந்தக் கேள்விக்கும் யானே அறிந்தவன் என்று பதிலிறுத்துவிட இயலாது,

சீனக் கிளைமொழிகளில் எண்ணிறந்த திரிபுகள் உள்ளன.  இந்தோனேசியக் கிளைமொழிகளிலும் பற்பல. இந்தோ திரிபுகளின் அட்டவணை நூலென்றை நூலகத்தில் கண்டு சிலமணி நேரம் அதில் யாம் ஆழ்ந்துவிட்டோம்.

நாவு எப்படியும் திரும்பும்.  திரும்பாதது பேச்சில் பல்மட்டும் தானோ?

பகவனின் கீதைதான்  பகவத் கீதை. இங்கு பகவன் என்பது பகவத் என்று வந்து சிறப்பாகவே உள்ளது, 

பகவனதுகீதை.

இதில் அன் விகுதி குன்றி,

பகவது கீதை > ( இதில் உகரம் குன்றி )  > பகவத் கீதை,

இதற்குத் தமிழின் மூலம் சந்தியைச் சொல்லாமல் சமஸ்கிருதம் மூலம் சொல்லலாம்.

பகவத்  என்பது வேறுமொழி என்று சொல்கையில்,  தமிழ் இலக்கணத்துக்கு அங்கு வேலை இல்லை.

இன்னொரு சொற்றொடர்:  அதுலன் முதலி.

அதுலனது முதலி,  அதுலது முதலி,  அதுலத் முதலி.  இங்கு அன் கெட்டு, உகரமும் கெட்டது.

அதுலன் என்றால் இறைவன்.

இனி எகரம் அகரமாய்த் திரியுமா என்று பார்ப்போம்.

கெல்லுதல் என்ற வினைச்சொல் கல்லுதல் என்று திரியும். கெ>க = எ> அ.

இனி இவற்றைக் கவனிக்கவும்:

கத்து >  கது > காது,   ( ஒலி கேட்கும் உறுப்பு)

கத்து>  கது > கது+ ஐ > கதை.  ( ஒரு புனைசொலவு)

கது>  கதம்.  ( சங்கதம்:  இணைப்பாகச் சொல்லப்படுவது,  சமஸ்கிருதம்).

கது > கதி  ( சங்கதி)  சேர்த்துச் சொல்வது.

கது > கதறு   ( ஒலியெழுப்பல்).

கத்து > கது > கதை > காதை  ( கதைப்பகுதி)

காது> காதிப்.   (அல்காதிப்  -   அரபுச் சொல்லறிஞர் )

காது> கடைக்குறைந்து: விகுதி பெற்று   காப்பு>  காப்பியம்

சொல்லப்படும் நிகழ்வு அல்லது ஒலித்தொடர்.

எனப் பல திரிபுகள் காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




சனி, 19 அக்டோபர், 2024

கேவலம் சொல்

 கேவலம் எனும் சொல்லை அறிவோம்.  இதற்குக் கேடு, கேதாரம் என்பனவும் ஒப்பீடு செய்வோம்.

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டவனாய் ஒரு வலிமை பொருந்திய நிலையில்தான் இருக்க (வாழ) விரும்புகிறான், ஏதேனும் தாழ்வான செயல்களில் ஈடுபட்டு அதனால் பேர்கெட்டுப் போனவனும் அது பிறருக்குத் தெரியாதவாறு தன்னை மறைத்துக்கொள்கிறான். தன்னைத் தாழ்வாக நினைப்பவன் இல்லாமற் போய்விட்டாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சியே. தனது முன் கெடுவினைகளை அறியாதவனுடன் பழகும்போது அவனுக்கு மகிழ்ச்சிதான். இதைத்தான் வலிமை பொருந்திய நிலை என்று நாம் கூறுகிறோம். இந்த நிலைக்கு ஒரு கெடுதல் வந்தால் இதுதான்  வலம் கெட்ட நிலை ஆகும்.  இது "கெடு வலம்" மேவிய நிலை ஆகும்,   கெடுவலம் என்பது பின்னர் கேவலம்  என்று திரிந்து ஒருசொன்னீர்மை பெற்றது.  டுகரம்  (டு) வல்லொலி ஆகும்.. சொல்லை மென்மைப்படுத்த  ( மெலித்தல் மேவ)  டுகரம் வீழ்கிறது. கெடுவலம் >  கேவலம்.  இதுபோல் வல்லொலி கெட்ட இன்னொரு சொல்: கேது,  அதாவது 

வானத்தில் பார்த்தால் ஏழு கிரகங்கள் தாம் தெரிகின்றன.  சோதிடத்தைச் சரியாகச் சொல்வதற்கு ஒன்பது கிரகங்கள் வேண்டும்.  இரண்டு தெரியவில்லை,  இவற்றுக்குக் காரணப்பெயர்களைக் கொடுத்தார்கள்.  ஒன்று இராகு.  இன்னொன்று கேது,  பெரும்பாலும்  ( எப்போதும் நிகழ்வதில்லை)  கெடுதல் செய்வது கேது.  கேது கெட்டிருந்தால் மங்களம் இல்லை. திருமணம் தொடர்பானவை நிகழவில்லை என்றால் கேது கெட்டிருக்கிறது என்று சொல்வர். மணவாழ்வு கெட்டிருந்தால் கெட்டிருப்பது கேது,  இதற்குப் பெயரே கேது -  கெடுவது  என்பதிலிருந்து வந்த பெயர். கெடுப்பது எனினுமது,  கெடு என்பது கே என்றே திரிந்தது.  கேடாவது என்பதில் டாவ என்ற எழுத்துகள் மறைந்தன என்றும் கூறுதல் கூடும். இப்போது கேவலம் என்ற சொல்லின் திரிபுடன் ஒப்பீடு செய்து அறிந்துகொள்ளவும்,

கேது மங்களம் தருவோன் எனப்படுவதால்,  கே என்பது கேடிலது என்பதன் சுருக்கமாகவும் கொள்ளலாம்,  சிலசொற்கள் இருநிலையும் குறிக்கும்,  இதற்குக் காரணம் ஓரெழுத்தே முதலில் வந்தமை. இன்னொரு சொல்: கேதாரம் - கேடின்மை தருவது அல்லது கெடுதலை நீக்குவது.  கே - கேடின்மை; தாரம் - தரும் தொழுதலம். இதுபோல் வருவதால் இச்சொற்கள் முற்றிலும் இடுகுறிகளாகி விடுகின்றன.  அதனால் மொழிக்கு ஒரு தொல்லையும் இல்லை,  வேறு மொழிகளில் வெறும் ஒலிக்குறிப்புகள் மட்டுமே சொற்களாகிவிட்டன. தமிழில் இயற்சொற்கள் அல்லாதன விலக்குறுதல் வேண்டுமென்பது  புலவர் வாதம்.  இவ்வாதம் காலத்திற்கு ஏற்றதன்று.  ஒரு சொல் தமிழா அன்றா என்பதற்குக் காரணம் அறியாமை ஒரு பொருட்டன்று. ஏனெனில்  " மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில். எல்லாச் சொற்களும் காரணம் அறியப்பட்டன என்பர் தமிழ்ப்புலவர்.   பலசொற்கள் ஆய்வின்றி அறியப்படாமையின்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 17 அக்டோபர், 2024

திரு சிங்கப்பூர் சிவாஜி அவர்கள் மறைவு இரங்கல்

 






"சிங்கப்பூர் சிவாஜி"யாகச்    சீரி  னோடு

சிங்கைதனில் தங்குபுகழ்ச் சொந்தக் காரர்!

பெண்கள்- ஆ  டவர்பிள்ளை எப்பா லார்க்கும்

பண்களிலே இலயம்தந்தே அமிழ்ப்பா ராவார்

கண்கள்நீர் சொரிந்திடவும் பாடும்  வல்லார்

தண்தமிழால் மகிழ்வந்தும் பாடிச் செல்வார்!

அண்மையிலே அவர்நம்மைப் பிரிந்து போக

ஆனதற்கே இரங்குகிறோம் என்றே காண்போம்.


மாரடைப்பு என் கின்ற நோயைப் போல

மனிதர்க்குத் தீங்கிழைத்த நோயும் இல்லை.

ஓரடைப்பும் இல்லாத திறந்த உள்ளத்

துயர்ந்தோரைக் காப்பதற்கும் இல்லா நெஞ்சம்

சீருயர்ந்த கூர் இயற்கை தேர்ந்த தென்றோ?

செயலிழந்து கவலையிலே மனிதர் யாரும்.

பாரிலிச் சி   வாஜிபாடும் வாரி  வீச்சும்

ஓர்நாளே இனிவருமோ என்றோ காண்போம் ?


---- சிவமாலா.


கவிதையில் ஒரு என்று வருமிடத்தில் ஓர் வரலாம்.


காணொளி; திரு. P. முருகையன். 

நன்றி