திங்கள், 21 மார்ச், 2022

நல்லெண்ணம் போர்களைத் தவிர்க்கும்.

 பங்காளிச் சண்டைகள் நடக்கின்ற  போது

பக்கத்தில் உள்ளாரும்  படுகுத்தல் செய்வார்.

எங்கேனும் இப்புவியில் எதனாலோ ஓடும்

இதுபோலும் செய்கைகள் நமக்காகும் பாடம்!

மங்காத நல்லெண்ணம் மயக்கற்ற மூளை

மாநிலத்து நாடுகளில் நிலைகொள்ளும் நாளில்

தங்காது  பேரழிவு தடைகொள்ளும் தீமை

தாரணியும் ஓரணியில் சீர்பெறவே காண்பீர்.


பங்காளி - முன் ஒன்றாயிருந்து பிரிந்தோர்

படுகுத்தல் -  சண்டையைப் பெரிதாக்குதல்.

ஓடும் - நிகழும்

தாரணி - பூமி.

மயக்கற்ற - தெளிவான

ஞாயிறு, 20 மார்ச், 2022

"பத்திரமாகப் போ" என்றால் என்ன?

 பத்திரம் என்றாலே  "  இலை " என்றுதான் பொருள்.  இப்பொருளில் பழைய நூல்களில் இச்சொல் வந்துள்ளது.  ஆனால் வழக்காற்றில் (  பயன்பாட்டில் ) பத்திரமாக என்றால் கவனமாக என்று பொருள்கொள்ளல் சரி.  எழுதி வாங்கிய ஒரு பத்திரம் காணாமற் போவதென்பது தொல்லை பல விளைக்குமாதலால், கவனம் தேவை என்பது முன்னாளிலே உணரப்பட்ட ஒன்றாம்.  ஆகவே " பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்றால், ஒரு பத்திரத்தை எவ்வாறு கவனமுடன் கையாள்வாயோ அவ்வாறே கவனம் கொள் என்பது பொருளென்பது சொல்லிவிளக்க வேண்டாதது என்று கூறலாம்.

இலை என்ற பொருள் இச்சொல்லுக்கு எவ்வாறு ஏற்பட்டதென்பதை நாம் விளக்கியுள்ளோம்.

இவற்றை நீங்கள் வாசித்தறிதல்  பொருள்விளக்கம் தரும்:

பத்திரம் :   https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_56.html

பத்திரம் - ஓலை:   https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_21.html

பாதுகாப்பு என்ற பொருள் ( பல சொற்கள் )  https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_23.html

பட்டை  என்பது மரப்பட்டை. இதிலிருந்து நமக்குப் பட்டையம் என்ற சொல் கிடைக்கிறது.

ஓர் இலைக்கொத்து என்பதை இணுக்கு என்போம்.

பத்திரம் என்பது பற்றி இருத்தலினால் ஏற்பட்ட பெயரென்பது விளக்கப்பட்டது.

எனவே பத்திரமாக இரு என்றால் இருந்ததுபோலவே பற்றிக்கொண்டு இரு, பற்றுதலை விட்டுவிடாதே என்றும் விரித்துணரத்தக்க சொல் ஆகும்.

பல்திறம் என்ற சொல்லும் புணர்ச்சியில் பற்றிறம் என்று திரியும்.   "பற்றிறமாக" இரு எனின், பல திறங்களோடும் இரு என்று பொருள்படும்.  இப்பொருளிலும் இவ்வெழுத்துக்களோடும் இச்சொல்லை இன்னும் எதிர்கொள்ளவில்லை.  வந்துழிக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.

இனிப்புநோய்க் காலில்புண் ஏற்படுதல்


 காலுக்கு வந்தரத்தம் மேலேறிச் சென்று

காயாமல் இருதயத்துள் புதிதாகி வந்து 

ஆளுக்கு வேண்டியதோர் அருநன்மை தந்தே

அன்றாடம் உடலுக்கு வலிமைதர வேண்டும்

தோலுக்குக் கீழிருந்து கருநிறமே காலில்

தோன்றுவதும் அரிப்பென்றால் துயர்தன்னை நீக்க

நாளுயர்ந்து  செல்லாமல் நன்மருந்து நாடி

நயமாக மருத்துவரை நண்ணுதலும் கொள்வீர்.


வந்த அரத்தம் >  வந்தரத்தம்.

அரத்தம் -  இரத்தம்

காயாமல்  - "வந்தரத்தம் காயாமல்" என்று இணைக்க.

அருநன்மை -  அரிய நன்மை

நாளுயர்ந்து -  காலம் கடந்து

நண்ணுதல் --  அணுகுதல்



இனிப்புநீர் என்னுமோர் இன்னல்நோய் வந்தால்

தனித்துன்பு பற்பல தம்பீ -----  இனித்தயக்கம்

இல்லாமல் போய்க்காண்க  இத்துன்பம் வந்தக்கால்

ஒல்லும்வாய் தேடேல்  நலம்.


துன்பு  -  துன்பம்.  தனித்துன்பம் - இணையில்லாத ஒரு துன்பம்.

வந்தக்கால் - வந்த காலத்தில்.

ஒல்லும்வாய் - இயன்றவழியில்

தேடேல்  - தேடுக


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.