செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கசானா கஜானா (கருவூலம்)

கஜானா  காலி என்னும் தொடர் மக்களிடையே பெரிதும் வழங்குவதொன்றாம். இதை முன் ஆராய்ந்தவர்கள் இச்சொல் உருதுமொழியில் வழங்கித் தமிழுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.  உருதுமொழி தமிழ்நாட்டுக்கு வடபால் பேசப்பட்டது என்பதை நாம் அறிவோம்.  இது முஸ்லீம் மக்களிடையே வழங்கி வளர்ச்சி பெற்றது. இம்மொழியில் அரபுச் சொற்களும் பல உள்ளன.

கஜானா என்பதற்குத் தமிழில் தொன்றுதொட்டு வழங்கும் சொல்:  கருவூலம் என்பது.

பிற்காலத்தில் வழக்குக்கு வந்து வளர்ச்சியடைந்து இனியன என்றும் பேசுவோரால் பாராட்டப்படும் மொழிகள்,  தமக்கு வேண்டிய சொற்றொகுதிகளை முன்னரே வழங்கிவந்த பழைய மொழிகளிலிருந்து மேற்கொண்டன என்பது தெளிவு.  பழைய மொழிகளின் சொற்களை எடுத்துத் திரித்து தமக்கு வேண்டியவாறு ஆக்கிக்கொள்வதைத் தவிரப் புதுமொழிகட்கு வேறுவழியில்லை. 

மரித்தல், மரணம் என்ற சொற்களிலிருந்து "  மாரோ " என்ற சொல்லைப் படைத்துக்கொண்டமை போலவேயாகும்.  மாரோ - இறப்பைக் குறிக்கிறது. இதேபோல் ஈரானிய மொழியிலிருந்து எடுத்தாளும் வசதி அவைகளுக்கு இருந்தது.

கஜானா என்ற சொல்லை முன்னிருந்த மொழியிலிருந்து பெற்றனர். தமிழ் முதலியவை முன்னிருந்த மொழிகள்.

செய்த சேவைக்கோ, விற்கும் பொருளுக்கோ விலையைப் பெற்றுக்கொண்ட பின்,  பணத்தைப் பெட்டியில் போடுவர்.  

விற்பனையில் காசு ஆனால் அதைப் பெட்டியில் போடுவது வழக்கம். 

காசானா(ல்)  பெற்றுப் பெட்டியில் போடு என்பது குறுகி காசானாப் பெட்டி என்றானது.  காசானா என்பது பின்னர் மெருகேறி கஜானா ஆனது.  இவ்வாறு சேர்த்து வைக்கும் பெட்டி கஜானா ஆகி,  பெட்டிக்குக் கஜானா என்பதே பெயருமானது.   பணம் சேமித்த பெட்டி ஆனதால், சேமிப்புக்கும் அதுவே பெயரானது.

வறுத்த முந்திரிக்கொட்டை விற்றுக்கொண்டிருந்த ஒரு மலையாளிப் பெண்ணிடம் ஒரு வெள்ளைக்காரர்  என்ன இது என்று கேட்க,  விலையைக் கேட்கிறார் என்றெண்ணிய பெண்,  காசினெட்டு   ( காசுக்கு எட்டு எண்ணம்) என்றாள்.  அதுவே " காஷியுனட்"  என்று அதற்கு ஆங்கிலத்தில் பெயராகிவிட்டது என்பது நீங்கள் அறிந்திருக்கலாம். 

ஒம்னிபஸ் என்றால் இலத்தீனில் எல்லாருக்கும் என்பது பொருள். அதுவே பின் குறுகி பஸ் என்று ஆயிற்று. இச்சொல்லில் பஸ் என்பது ஒரு வெறும் விகுதி.

கசனா அல்லது கஜானா என்பது அழகான சொல்தான்.


அறிக மகிழ.

மெய்ப்பு பின்.




ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

திருவும் திருப்தியும் திரட்சியும்,

முன்னுரை:

 திருவென்பது தமிழில் உயர்வு என்று பொருள்தரும் சொல். ஆனால் இந்த உயர்வு என்னும் தன்மை அச்சொல்லுக்கு வந்ததற்குக் காரணம், நல்லது திரண்டுவருதல்தான். திருவென்பது ஓர் உருவற்ற, மனத்தால்மட்டும் அறியத்தக்க பண்பினைக் குறிக்கின்றது. ஆயின் திரட்சி என்பது உருவுள்ள ஒரு பொருள் தன்போல் உருவுள்ள பிறவற்றுடன் ஒன்று சேர்ந்து காட்சிதருதலையும் உற்றுணரத் தருதலையும் குறிக்கின்றது. எடுத்துக்காட்டு :  பாலில் நெய் திரளுதல்.  அல்லது மண்ணிற் பொன் திரளுதல்.  இவ்வாறு கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருந்தது முயற்சியால் திரட்சியாவதிலிருந்தே திருவில் உயர்வுக் கருத்துத் தோன்றியது.  திரட்சி என்பது அரும்பொருள் திரளுதல். பின் திருவென்பது அதற்கு உண்டான மதிப்பீடு ஆகும். இவற்றுக்கு அடிச்சொல் "திர்" என்பதே.  உண்மையில் திர் என்பதில் உகரம் சேர்ந்து திரு என்றானது சாரியை என்றே கூறவேண்டும். என்றாலும் அது அடியிலிருந்து ஒரு சொல்லுருவைத் தருவதால் அதை ஒரு விகுதி எனல் தக்கதாம்.

ஈறு,  விகுதிகள்:

திர் >  திரள் > திரள்தல். அல்லது திரளுதல். இங்கு ள் என்பதில் வரும் உகரம் (  ள் >ளு)  சாரியை ஆகும்.  திரள்+ சி = திரட்சி.

திர் > திர்+ உ > திரு.

ஒன்று மற்றொன்றாவதைத் திரிதல் என்பர்.

திர் > திரி  ( திர் + இ).

பெரும்பாலும்   அள் ( திரள் ),  திரு ( உ)  மற்றும் திரி ( இ ) என்பனவற்றை நாம் விகுதியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் திர் என்பது ஒரு வேர்  ஆகும். அடிச்சொல்லிலும் முந்தியதை வேர் என்று சொல்லவேண்டும், சொன்னால் வேறுபடுத்த எளிதாகவிருக்கும்.

வினையாக்கம்:

அள் என்பது வினையாக்க விகுதி.   வினையாக்கத்திற்கு உதவும் விகுதிகளை முன்பு பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  இப்போது இனியும் ஓர் உதாரணம் தருவோம்.  வறு என்ற அடியுடன் அள் சேர்ந்து வறள் ஆவதும், இவ்வேவல் வினை பின்னர் ~தல் விகுதி பெற்று வறள்தல் ஆவதும் காணலாம்.  வறு>  வறுத்தல் என்று வறு வினைப்பகுதியாக ஈண்டு வந்தது. வறட்சியே அடிக்கருத்தாயினும்,  வறள்தல் (வரளுதல்) என்பது நீரின்மைகொள்ளுதலைக் குறித்து பொருள் வேறுபட்டதையும் அறிக.

உருவிலதாய மதிப்பீடு

எந்த ஒன்றிலும் அதனால் மனமகிழ்வு தோன்றுமாயின், அது திருவினை வரப்பெற்றது எனலாம். அம் மனமகிழ்வே மதிப்பீடு  ஆகும். திருவென்பதே ஒரு ஸகர ஒற்று முன் தோன்றி,  ஸ்திரு> ஸ்திரி  > ஸ்ரீ  ஆனது. முன் இல்லாதது புதிதாக வருமாயின் அது தோன்றல். ஒன்று பிறவொன்றாகுமாயின் அது திரிதல்.  ஸ்திரி என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லும்  ஒரு தோன்றலும் பிறிது திரிதலும் உண்டான சொல்லாகும்.  ஸ் + திரு + இ என்று பிரித்துக் காட்டி இகரம் ஒரு விகுதி எனினும் இன்னும் தெளிவாகும்.  திருவென்பதன் ஈற்று உகரம் கெட்டு ஓர் இகரம் ஏறிற்று.  ஆகவே ஸ்திரீ என்னும் பெண் குறிக்கும் சொல்லில் பெண்ணின் உயர்வு  ஓர் உட்பொதிவு எனல் தக்கதாம்.

இவ்வுயர்வினைத் தமிழால் விளக்கினால் மட்டுமே அறியத் தருமென உணர்க.

மனமகிழ்வு என்பது நிறைவினால் உண்டாகும். எனவே ,மனநிறைவு திரு என்ற சொல்லிலே அமைந்தது அது உயர்வானது என்பதை நமக்குக் காட்டும். இச்சொல் முன்னர் திருத்தி என்றே இருந்தது சொல்லின் தெரிகிறது.  ஆயினும் திருத்தி எனல்,  ஓர்  எச்சவினை போலிருப்பதால் அதைத் திருப்தி என்று மாற்றியுள்ளமை அறியத்தகும்.

முடிவுரை

இந்தத் திருப்திச் சொல் சங்கததிலும் சென்றேறியுள்ளது.  அங்கும் இதே பொருளைத் தருகிறது.  இதுவேயன்றி, சங்கதத்துக்கு மனநிறைவு குறிக்கும் வேறு சொற்களும் உள்ளன.  பாலில் நெய்போல மனவுணர்வும் திரளும் தன்மை உடையது என்பதில் மாற்றுக் கருத்து இலது.  ஆயினும் உருவின்மையால் இத்திரட்சி மனத்தால்மட்டும் அறியத்தக்கது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

அரோகம் - சுகம், அசுகம் இரண்டும்

 சிலர் எப்போதும் " சுகமாகவே" இருக்கிறார்கள்.  சிலர் சிலவேளைகளில்தான் சுகம் காண்கிறார்கள்.  வாழ்வின் பேரளவு துன்பத்தில் அவர்கட்குச் சென்றுவிடும் போலும். எல்லாம் இன்பமயம் என்பார் ஒருபுறமிருக்க, எல்லாம் துன்பமென்பாருமுண்டு.  வேறுசிலர், தத்துவக் கருத்தாக, இன்பம் யாவுமே பின் துன்பமாகிவிடும் என்றும் கூறுவதுண்டு.  இன்பம் துன்பமிரண்டும் ஒரே கிணற்றில் ஊறிய மட்டைகள் என்னலாம் போலிருக்கின்றது.

சிலருக்கு இன்பம் அரிய பொருள் ஆகிவிடுகிறது.  அரியது என்றால் அடிக்கடி கிட்டாதது.  சிலருக்குத் துன்பம் அரியது.

துன்பம் வாராமல் காத்துக்கொள்தல் எவ்வாறு என்று புத்தர்பிரான் அருளியிருக்கிறார்.  பிறரும் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

எது சரி, எது தவறு என்பதைவிட, ஒவ்வொருவரும் தாம் பட்டறிந்த படியே இதில் எண்ணுவர் என்பதே உண்மை.

சுகம் என்பது ஓர் உகந்த நிலை.   உக >  சுக > சுகம்.  அகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பது சொல்லியலில் தெளிவான முடிபு ஆகும்.

சுகம் அல்லாதது அசுகம் என்பர்.   அல் ( அல்லாமை) > அ ( கடைக்குறை ) > அ + சுகம் >  அசுகம் ஆகும்.

இன்று நாம் அரோகம் என்ற சொல்லை  அறிந்துகொள்வோம். 

இன்பம் துன்பம் என்பவை, சிலருக்கு அரியவை;  சிலருக்கு அவ்வாறு அல்லாதவை.

ஓங்குவதென்பது,   மிகையாவது.  ஓங்கு(தல்) >  ஓகுதல் > ஓகு+ அம் > ஓகம் ஆகும்.

அரிதாக ஓங்குவது அரு+ ஓகம் > அரோகம்.  அது துன்பமாகவும் இருக்கலாம்; இன்பமாகவும் இருக்கலாம்.  நோய் - துன்பம் ஆகும்.

ஓகம் இடைக்குறைச் சொல்.

ஆகவே அரோகம் என்ற சொல்லுக்கு இருபொருளும் உள.  ஒன்று சுகம், இன்னொன்று அசுகம் அல்லது நோய்.

ஆகவே அரோகம் என்பது இரண்டும் குறிக்கும் பொதுச்சொல்.  இன்பம் துன்பம் அவ்வப்போது ஓங்கி நிற்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.