திங்கள், 28 ஜனவரி, 2019

மற்றொரு விளக்கம்: பந்து பந்தி சிப்பந்தி.

சிப்பந்திகள் முற்காலத்தில் தனியாய்ச் செயல்படாமல் தம் வேலைத்தலைவரைப் பற்றியவாறே சென்றுள்ளனர் என்பது சொல்லாய்வின் மூலம் அறிந்ததாகும்.  எடுபிடி என்பார் போலவேதாம்.  எடுபிடிகள் ஏவுவாரை ஒட்டியவாறே நின்று உத்தரவுகளைப் பெற்றுச் செயலாற்றவேண்டும். சிப்பந்தியரும் அன்னவரே ஆவர்.

இதில் நாம் உணர்தற்கு முன்மையான சொல் பந்தி என்பதே.

பலர் இருந்து உண்பதே பந்தி.

பல் > பன் > பன் தி > பந்தி ஆம்.

முந்தி பிந்தி என்ற சொற்கள் போலவே இதுவும்.   முன் தி  : முந்தி;  பின் தி:  பிந்தி.

 மந்தி என்பதும்  அன்னதாம்.

மன் -  மனிதன் என்பதன் அடிச்சொல்.
மன் தி  >  மந்தி.   மனிதன் போன்ற விலங்கு.

பல் என்பதில் இறுதி லகர ஒற்று   -னகர ஒற்றாக மாறும்.

பல் > பன்.    இவ்வாறு சொற்புணர்ச்சியிலன்றி  சொல்லும் தனியாய் மாறும்.

எடுத்துக்காட்டு:  திறல் > திறன்.

ஆகப் பல் என்ற பன்மைக் கருத்தினின்றே பந்தி வந்துள்ளதென்பது மெய்ப்பிக்கப்பட்டது.

பண்டை நாட்களில் பந்துகள் பல கயிற்றுப் பிடிப்புகளால் உருவானவை ஆம்.
பல் >  பன் > பந்து.  இப்போது தேய்வையால் பந்துகள் உருவாகின்றன.

பல் என்பது பிடித்துக்கொள்ளுதலையும் குறிக்கும்.

பல் > பன் > பன் து  அம் =  பந்தம்.  மணவுறவுகளால் பற்றுடையராதல்.  உறவால் பலராதல்.   ஒன்றை இன்னொன்று பற்றுவதானால் அது ஒருமையில் நடவாது;  பன்மை வேண்டுமாதலின்  பந்தம் போலும் சொற்களில் பன்மைக் கருத்து உள்ளிலங்குவதாகும்.

சிப்பந்தி என்பதில் சில் பல் இரண்டுமுண்டு.  சில் என்பது சி என்று கடைக்குறை   ஆனதென்றும் கொள்ளலாம்;  அன்றிச்  சில் + பந்தி > சிற்பந்தி > சிப்பந்தி என்று திரிபென்றும் கொள்ளலாம்.  இருவழிகளும் நன்றே.

இவை முன் சற்று வேறு விதமாக விளக்கப்படினும் ஒன்றென்றே அறிக.

எழுத்துப் பிழைத்திருத்தம் பின்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

விகுதி இல்லாத சொல்லுருக்கள்.

சொற்களின் அமைப்பில் பகுதி விகுதி சந்தி இடைநிலை சாரியை என்று பல சொல்வர்.  இப்போது நாம் இவற்றில் எவையுமற்ற சொல்லமைப்புகள் சிலவற்றைக் கண்டு இன்புறலாமே.

எடுபிடி என்ற சொல்லைக் கவனியுங்கள்.   ஒரு சீமானுக்கு வேண்டியவற்றை அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிப்பந்தியைத் தான் எடுபிடி என்`கின்றோம்.  எடு என்பது ஒரு வினைச்சொல். பிடி என்பதும் ஒரு வினைச்சொல். இரண்டும் சேர்ந்து ஒரு கூட்டுச்சொல்லாகி இது அமைந்துள்ளது.

கெடுபிடி என்ற சொல்லும் அன்னது.  கெடுதல், பிடித்தல் என்பனவே  இணைந்து ஒரு சொல்லாகிவிட்டது.

வருமானம் என்பதற்கு ஈடாக வரும்படி என்ற சொல்லும் வழங்குகிறது.  இதில் படி என்பது சிறு வகையினவான வரத்துகளைக் குறித்ததுபோலும்.  வரும் என்பது எச்சவினையாகும்.

இரு தொழிற்பெயர்கள் இணைப்பில் அமைந்ததே பேச்சுவார்த்தை என்ற சொல் வழக்கு ஆகும்.  பேச்சு வார்த்தை என்பன ஒரு பொருளன போல் தோன்றிடினும் அவை குறிப்பது ஒரு அலுவலகப் பூர்வமான ஓர் உடையாடலையே  ஆகும்.

பேச்சு என்பதில் விகுதி இல்லை.  பேசு > பேச்சு;  இங்கு சகரம் இரட்டித்துச் சொல் அமைந்தது, வார்த்தை என்பதில் ஐ விகுதியாகும். தகர ஒற்று இடைநிலை என்று சொல்க.  இரும்பு ஈயம் போலவே வார்த்தைகளும் வார்த்து எடுக்கப்படுகின்றன என்பதை  அறிந்துகொள்க.  வார் என்பது ஏவல் வினை. வார்த்தை :   இது வார்த்தல் என்பதன் சார்பில் அமைந்த சொல்லாகும்.

சனி, 26 ஜனவரி, 2019

அடிச்சொற்கள் மூலங்கள் வேறுபாடு.

சென்ற இடுகையில் பேதி,  பேதா என்ற சொற்களைப் பற்றி உரையாடினோம்.

இவற்றின் அடிச்சொல் பெய்தல் ( உடலிலிருந்து வெளியேற்றுதல்,  அல்லது வானிலிருந்து பொழிதல் ) எனற்பாலது உணர்விக்கப்பட்டது.

இதன் தொடர்பில் வேறு சில சொற்களையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

பேதம் (  அதாவது  வேறுபாடு ) குறிக்கும் சொல்லும் உள்ளது.  இதுவும் பே என்ற சொல்லினின்றுதான் வருகிறது என்றாலும்  இவற்றின் மூலச் சொற்கள் வேறுபட்டவை என்பதை இப்போது புரிந்துகொள்வோம்.

பெய்தல் (  அடிச்சொல் .)

இது பெய் > பே  என்று திரிந்து பேதி, பேதா முதலிய சொற்களைத் தோற்றுவித்தது.

பெய் > பே > பேதி:  உடலினின்றும் வெளியேற்றுகை.

பெய் > பே >  பேதா :   கண்டவுடன் கழிச்சலாகிய அச்சத்தைத் தருபவன்.

இவற்றுள் இரண்டாவது குறித்த சொல் போலும் இன்னொரு சொல் "வாய்தா" என்பதாகும்.

வருவாய் தா என்பதன் சுருக்கச் சொல்லே வாய்தா.  விளைச்சலிலிருந்து அரசனுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படும்.  அதைத் தருவதுதான் வாய்தா. தா என்பது ஓரெழுத்து ஒருசொல் ஆதலின் அதில் சுருக்கம் ஒன்றுமில்லை. வருவாய் என்பதில் வரு என்பது வெட்டுண்டு, வாய் என்று நின்று தாவுடன் புணர்ந்து சொல்லமைந்தது காண்க.

பேதா என்பதில் தாவென்பது தருவோன் என்று உயர்திணைப் பொருளையும் வாய்தா என்பதில் தரப்படுவது என்று அஃறிணைப் பொருளையும் குறித்ததனால் சொல்லில் இல்லாத பொருட்களைத் தழுவிய தாவென்னும் ஈற்றுச்சொல் இந்தச் சொல்லமைப்பில் இயற்சொல்லாகாது.  திரிசொல்லே.  தா என்பது ஏவல் வினையாகிக் கொடு என்பதற் கீடாய் வருமிடத்து அது இயற்சொல் ஆகும்.  இத் திரிசொற்களின் ஒரு பாதி அடிச்சொல் பெய் என்பதன் திரிபாதலின் இயற்சொல்லன்று என்பதற்கு அதுவும் ஒரு கூடுதற்  காரணமும் ஆகும்.  முடிபு இவை திரிசொற்கள் என்பதேயாகும்.

தமிழிற் திரிசொற்கள் பலவாதலின் திரிசொற்களெல்லாம் தமிழன்று   என்ற வாதம் மடமை ஆகும்.

ஆனால் பேதம் என்பதன் அடிச்சொல் வேறு.  அது பெயர்தல் என்பதன் அடிப் பிறந்ததாகும்.   பெயர் என்பது பே என்று திரியும்.   பெயர் என்பது பேர்  ( எத்தனை பேர்?  உன் பேர் என்ன? ) என்பதாய் மாற்றம் கொள்ளுதல்  பேச்சு வழக்காதலின் இப்போது:

பெய் >  பே;
பெயர் > பே;    என

இருவாறு வருதல் அறிந்து கொள்க.

அடுத்த பேபே என்ற அச்சக்குறிப்புக் கிளவியும் அடிச்சொல்லாகிப் பிற சொற்களைப் பிறப்பிக்கும்.  இப்படி அமைந்தது பே> பேய் என்ற என்ற சொல்.

பேபே என்பது மழுப்பல் கருத்திலும் வரும்:  " உனக்கும் பேபே, ங்கொப்பனுக்கும்  பேபே "  என்ற சிற்றூர்த் தொடர் காண்க.


அறிந்து மகிழ்வீர்.

பிழைகள் பின் திருத்தம்பெறும்.