செவ்வாய், 25 டிசம்பர், 2018

திமிங்கலம் : கலங்களுடன் திமிருங்கலம்.

திமிங்கலம் என்ற சொல்லோ தமிழில் அழகுற அமைந்த தாகும். இஃது அமைக்கப்பட்ட விதம் காண்போம்.

இந்த வகை நீர்வாழுயிரிக்கு ஆங்கில மொழியில் "வேல்"(           )  என்பரென்பது நீங்கள் அறிந்ததே.

திமிங்கலங்கள் படகுகளை எதிர்கொண்டு கவிழச் செய்துவிடும் என்பது நம்பிக்கை ஆகும். இதுபோல் சில நடந்துள்ளனவாகவும் தெரிகிறது.

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=26&cad=rja&uact=8&ved=2ahUKEwj855ORx7zfAhVQat4KHTZjD9sQFjAZegQIBxAB&url=https%3A%2F%2Fwww.canadiangeographic.ca%2Farticle%2Fhow-often-do-whales-attack-ships&usg=AOvVaw2bPOVekcDxIdBKBo0SrUvv

இவற்றுள் ஒன்று மேலே தரப்படுகிறது.


இவ் வுயிரிகள் கலங்களுடன் வலிமை காட்டவல்லவை ஆகும்.  திமிருதல் என்றால் வலிமை காட்டுதல். சிலர் இது சிறுபான்மை நடப்பு என்றாலும் அச்சம் இருக்கவே செய்கிறது.

திமிரும் + கலம் = திமிருங்கலம் > திமிங்கலம்.

இதில் ரு என்ற எழுத்து இடைக்குறைந்தது.

இவ் விலங்கும் ஒரு கலம் போன்ற பெரிய (பரிய )  உருவினதே.


காவலன் பிடிக்கத் திருடன் திமிரிக்கொண்டு ஓடிவிட்டான்  என்ற வாக்கியம் காண்க. திமிருதல் - வன்மைகாட்டுதல்.

(புறநா. 258):   ஈர்ங்கை விற்புறந் திமிரி.
உராய்ந்து,  தடவி  என்று பொருள்.

(நற். 360).  மெய்யிடைத் திமிரும்.


கலங்களைத் திமிர்கின்ற   கலம் போலும் உருவினதாகிய மீன் எனல்.


திமிர் என்பது திமி என்று கடைக்குறைந்துள்ளது.

திமிர்தல்
திமிர்த்தல்
 திமிர்ப்பு
திமிர்ச்சி
திமிரன்:  மெதுவான துடிப்புக்குறைந்த விலங்குமாம்.
திமிராளி
திமிரம் - இருள்
திமிதம் -  நிலைநிற்றல்

திமிதமிடுதல் :  களித்தல்

வலிமை ஒத்த நிலையில்  நிலைநிற்றல் கூடுமாகின்றது.

 பேருந்துக்குள் திமுதிமு என்று கூட்டம் புகுந்துவிட்டது எனல் காண்க.

திமுதிமு எனல் விரைவுக் குறிப்புமாம்.

திமி, திமிர் என்பன இலக்கிய வழக்கிலும் உள்ளவை.

குடிமகன் மற்றும் இணையமான் ( நெட்டிசன்)

ஜகம் என்ற சொல்லின் தொடர்பில்  நாம் பகவொட்டுச் சொற்களை அறிந்துகொண்டோம்.

அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2015/10/etc.html

மேலும் இது:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_23.html

ஆங்கில மொழியில் புதிய பகவொட்டுச் சொற்கள் பல வந்தவண்ணம் உள்ளன.  விரிந்த பயன்பாட்டின் காரணமாக இவ்வகைச் சொற்களின் தொகுதி வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.  இவற்றில் சிலவற்றையாவது நீங்கள் நாடோறும் எதிர்கொள்ள நேர்த்திருக்கும் என்னில் மிகையன்று.

சிட்டிஸன் என்னும்  - குடிமகன்/ள்  என்று பொருடரும் சொல் சில காலமாக ஆங்கிலத்தில் வழக்கில் இருந்துவருகிறது.  இதன் சொல்லமைப்புப் பொருள் நகரவாணன் என்பதே.   நகரவாணன் என்பது உண்மையில் நகரவாழ்நன் என்பதன் திரிபு என்பதை அறிவீர்கள். வாழ்நாள் என்பது வாணாள் என்று திரிந்தமைபோலுமே  நகர வாழ்நர் என்பது நகரவாணர் என்று திரிந்தது.

வாண் என்பது புணரியல் வடிவமேயன்றி ஒரு தனிச்சொல்லாய்த் தமிழ்மொழியில் கிட்டுவதில்லை.  எனவே வாண்+ அர் =  வாணர் என்று காட்டற்கியலாமை அறிக.  திரிசொல்லின் பாதிவடிவ மாதலின்  வாழ்நர் என்பதினின்றே இதை விளக்கற்கியலும்.

கலைவாணர் :  கலையினால் பெருவாழ்வு உடையார்.
மதிவாணர்  :   அறிவினால் பெருவாழ்வு உடையார்.

இதனால் வாழ்நர் என்ற சொல்லின் ஆட்சியை  அறியலாகும்.

ஆதிப்பொருள் சிட்டிஸன் என்பதற்கு  an inhabitant of a particular town or city என்பதே ஆனாலும் ஆங்கிலத்தில் அப்பொருள் இன்று விரிந்துள்ளது.   ஒரு நாட்டின் குடியாண்மை யுரியோன் என்பதே இற்றை விரிபொருள் ஆகின்றது.  காரண இடுகுறி என்பது தனிவிளக்கமாகத் தரப்படவில்லையேனும் அவ்வமைவு ஆங்கிலத்திலும் ஏனை மொழிகளிலும்  உள்ளதென்று அறிக.

சிட்டிஸன் என்பதிலிருந்து பகவொட்டாக நெட்டிஸன் என்ற சொல் அமைத்து அதனை வழங்கிவருகின்றனர். இது போர்ட்மென்டோ எனப்படும் வகைச்சொல்.   குடிமகன் என்பதிலிருந்து இணையமகன் என்று அமைக்கலாம் என்றாலும் மகன் என்பதன் திரிபாகிய மான்  ( பெருமகன் > பெருமான்)   என்ற பின்னொட்டினை இணைத்து இணையமான் என்பதையே நெட்டிஸன் என்பதற்கு நேராய் வழங்கலாம் என்பது எம் துணிபு ஆகும்.  மகன் என்பது பிறப்புப் பொருளினின்று நீங்காது நிற்கின்றது என்பதை நோக்க மான் என்ற திரிபின்னொட்டே பொருத்தமாகிறது. மான் என்று சொல்லும்போது பிறப்பு பற்றி எண்ணம் வரவில்லை; ஒருவேளை மான் என்னும் விலங்குபற்றி எண்ணம் எழலாம் எனின் அதை அறிவு நீக்கித்தரும் என்பதை அறிக. சிட்டிஸன் என்பதற்குக் குடிமகன் என்பது ஒருவாறு பழகிப்போய்விட்டபடியால் மகன் எனற்பாலதன் தனிப்பொருண்மை இங்கு போதரவில்லை எனக் கருத்துக்கொள்க.

குடிமகன் என்பது குடிமான் என்று திரியவில்லை;  இவ் வடிவம் காணப்படாமையின். 

இணையவாணர் எனினும் நன்றேபோல் உணர்கிறோம்.

அதியமான்
மலையமான்
நெடுமான்
புத்திமான்
கருமான்
செம்மான்
பெம்மான்  ( பெருமான் என்பது பின்னும் திரிந்தது )
எம்மான்     (எம் + (பெரு) மான் )

இயற்பெயர்களிலும் பிற பொதுப்பெயர்களிலும் மான் இறுதி காணப்படும். இவற்றில் ம் இடைநிலை; ஆன் என்பதே விகுதி.  புத்தி+ ம் + ஆன்.

பிறவா வரம் தாரும் பெம்மானே :  பாட்டு.
எம்மான் எல்லோரும் இன்புற்றிருக்கத் தன் உயிர் வாழ்ந்த  : பாட்டு. பாபநாசன் சிவன்.

திங்கள், 24 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் வாழ்த்து.


ஏசுபிரான் இறங்கிமன மிரங்கி வந்தார்
இன்றதனைப் பண்டிகையாய்க் கொண்ட மக்கள்
மாசிலராய் மகிழ்ச்சியிலே திளைத்து நிற்பார்
மாநிலமேல் தானிவர்கள் அருளை  அன்பால்
நேசமழை பொழிந்தபடி அணைத்துக் கொள்வார்
நிற்புடைய அற்புத்தளை பொற்பில் மிஞ்சும்
பாசமொடு நேசிபிறர் தம்மை உம்போல்
பார்க்குமிதே ஏற்குநலம்  வாழ்க  பண்பே .


நிற்புடைய  -  நிலைத்தன்மை உடைய;
அற்புத்தளை -   அன்பென்னும் பிணைப்பு
பொற்பில் -  அழகில், மின்னும் காட்சியில்.
பாசமொடு நேசிபிறர் தம்மை உம்போல் : இது ஏசுவின் போதனை.
பார்க்கும் :  உலகத்துக்கும்  ( எல்லாச் சமயத்தினருக்கும் )
ஏற்குநலம் :  ஏற்கும் நலம்.  மகர ஒற்று தொக்கது.
தான்:  இது அசை ( இசை நிறைவு)

உன்னைப்போல் பிறனை நேசி. என்பது ஏசுவின் அன்புக்கட்டளை.